உடன்பிறப்பே… நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது

Image may contain: 1 person, sunglasses and close-upஉடன்பிறப்பே

நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது, இதுதான் சொர்க்கம் என்றார்கள், இப்படி தமிழகத்தின் மக்களும் நலமாகவும் சமமாகவும் வாழத்தான் நான் போராடினேன், என் காலம் முடிந்ததே தவிர போராட்டம் ஓயவில்லை அது உங்களிடமே விட்டுவிட்டு வந்திருக்கின்றேன்

உடன்பிறப்பே, எங்கோ கிராமத்தில் பிறந்த எனக்கு, சாதியோ பெரும் குடும்ப அடையாளமோ இல்லாத எனக்கு மொத்த தமிழமும், உலகெல்லாம் தமிழ்வாழும் சமூகமும் , இந்திய தேசமும் மொத்தமாக அடித்தள மக்கள் முதல் உயர்பீடம் வரை அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் உண்மையிலே அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்திருக்கின்றான் இந்த கருணாநிதி

காவேரி மருத்துவமனைமுன் திரண்ட கூட்டம் போல பல மடங்கு இன்னும் மெரினாவில் அண்ணாவோடு நான் துயில் கொள்ளுமிடம் இடத்தில் நள்ளிரவிலும் , கடும் வெயிலும் வந்துகொண்டே இருக்கின்றது என்றால் இத்தமிழகத்தின் எல்லா பட்டி தொட்டிகளிலும் நாங்கள் எழுப்பிய பகுத்தறிவு எழுச்சி, சுயமரியாதை முழக்கம் எவ்வளவு தூரம் எட்டி இருக்கின்றது என்பதை உணர முடிகின்றது

நானும் அண்ணாவும் எங்கெல்லாம் , எந்த மூலை முடுக்கெல்லாம் திராவிட சிந்தனையினை விதைத்து கொண்டே சென்றோமோ, அங்கிருந்து பலர் உருவாகி இப்போது எங்களை நன்றியோடு காண வந்திருக்கின்றார்கள் எனும்பொழுது இந்த இடத்திலிருந்து உங்களுக்கு தெரியாதவாறு கண்ணீர் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்

“தம்பி கருணாநிதி, உனக்காக வழியும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும், உன் உழைப்புக்கும் போராட்டத்திற்குமான நன்றியின் அடையாளம்” என அண்ணா அருகிருந்து சொல்லுபொழுது அன்னை அஞ்சுகம் என்னை தமிழகம் வாழவே பெற்றார் என்பதை நினைத்து அவரும் இதோ ஆனந்த கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார்

உடன்பிறப்பே,

காலத்தால் எல்லோரும் பிறப்போம், காலத்தால் எல்லோரும் மறைவோம், இதற்கு நீனோ நானோ விதிவிலக்கு அல்ல‌

ஆனால் வாழும் காலத்தில் இந்த சமூகத்திற்கும், இந்த மக்களுக்கும் என்ன செய்தோம் என்பதுதான் வரலாற்றில் நிற்க கூடியது, நான் என் கடமையினை செய்தேன், உங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்

கருணாநிதிக்காக இவ்வளவு பேர் அழுகின்றார்களே, ஆனால் தேர்தலில் அவருக்கு பல நேரங்களில் தொல்வி வந்ததே என சில சதிகாரர்கள் சொல்லி ஆனந்தம் அடைகின்றார்களாம்

என் மீது அன்புகொண்டவர்கள் எல்லாம் எனக்கு வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? அது ஜனநாயகம் ஆகுமா?

என் கொள்கையினை ஏற்றவர்கள் வாக்களித்தார்கள், ஆனால் என் அரசியலையும் மீறி இத்தனை கோடி மக்கள் இந்த கருணாநிதியினை நேசித்திருக்கின்றார்கள் என்றால் அந்த அன்புக்கு எந்நாளும் நன்றி, இதொ இந்த வங்க கடல் போல் சொல்லிகொண்டே இருப்பேன்

நான் எனக்காக கண்ணீர் விடும் உங்களிடம் கேட்டுகொள்வது ஒன்றுதான்

அண்ணாவின் இடத்தை என் ஒருவனால் நிரப்ப முடியவில்லை, ஒப்புகொள்கின்றேன். அண்ணா போல நான் இருந்திருந்தால் கழகம் சில சறுக்கல்களை சந்தித்திருக்காது என்பது என் மனசாட்சி சொல்லும் உண்மை

ஆனால் நான், அருமை நண்பர் பேராசிரியர், முரசொலி மாறன் இன்னும் பலர் இணைந்துதான் அண்ணாவின் இடத்தை நிரப்ப முயன்றோம், ஓரளவு வெற்றியும் பெற்றோம்

அப்படி நீங்களும் எல்லோரும் , 3 கோடி தொண்டர்களும் இணைந்துதான் இந்த இயக்கத்தை நடத்தவேண்டுமே தவிர, செயல்தலைவர் ஒருவாரல் மட்டுமே நிரப்ப முடியாது

நான் முன்பே சொன்னபடி என் 6 பிள்ளைகளும், என் மன்சாட்சியாய் நின்ற மாறன் பிள்ளைகளும் எக்காலமும் இந்த கட்சிக்கு உழைக்கவும், ஒற்றுமையாய் இயக்கத்தை நடத்தவும் முன் நிற்பார்கள் என்பது எக்காலமும் எனக்குள்ள நம்பிக்கை

அந்த நம்பிக்கையினை உறுதிபடுத்தும் விதமாக என் இறுதி அஞ்சலியில் அவர்கள் உள்ளத்தில் எடுத்த பிரமாணம் எனக்கு கேட்டுகொண்டேதான் இருந்தது , அந்த நம்பிக்கையில்தான், அவர்கள் எக்காலமும் தமிழகத்திற்காக எனக்கு பின் உழைப்பார்கள் எனும் நம்பிக்கையில்தான் புதைந்தேன்

உடன்பிறப்பே, அண்ணா நம்மை விட்டு பிரிந்தபொழுது நன் சொன்னது நினைவிருக்கின்றதா, அதையேதான் என் பிரிவிலும் நீ எண்ணிகொள்ள வேண்டும்

கண்ணீரை துடைப்போம், களம் காண்போம். ஆற்றுவதற்கு ஏராளமனா விஷயங்கள் இருகின்றன , அண்ணனுக்கு காணிக்கை வைக்க ஏராளமான வெற்றிகளை பெற வேண்டி இருக்கின்றது என சொன்னது மறந்துவிட்டதா?

அப்படி இத்தமிழகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எண்ணி களம் காணுங்கள், திருவாரூரில் நான் என் இறுதி காலத்தில் ஆற்றமுடியாமல் போல காரியங்களை தொடரவும், அது கழகத்து கோட்டை எனும் பெயர் நிலைக்கவும் களமிறங்கு

“வெற்றியினை எனக்கு காணிக்கையாய் தா” என நான் கேட்டதுமில்லை, அது எனக்கு பழக்கமுமில்லை

ஆனால் நான் உருவாக்கிய படை, எனக்கு பின்னும் வெற்றிகளை குவிக்கின்றது எனும்பொழுது என்னை விட மகிழ்வது யார்?

ராஜராஜ சோழனுக்கு பின் அவன் சந்ததிகள் அவனி ராஜ்யத்தை பெருக்கியது போல, செங்கிஸ்கானுக்கு பின் அவன் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது போல நீங்களும் திமுகவின் எல்லைகளை பெருக்குங்கள், தமிழர் வாழ , தமிழ் வாழ காவலிருங்கள்

வரும் தேர்தலில் கழகம் வெற்றி எனும் செய்தி உலகெல்லாம் எதிரொலிக்கட்டும், வர இருக்கும் பெரும் வெற்றிக்கு அது விடிவெள்ளியாய் தெரியட்டும்

அண்ணாவின் ஆசியும், நான் காட்டிய வழியும் எந்நாளும் இயக்கத்தை நடத்தும், வெற்றிகளை குவிக்கும்

இந்த எளியவனுக்காக, அவனின் போராட்ட வாழ்வினை அர்த்தமுள்ளது என மொத்த‌ உலகமும் ஒப்புகொள்ளும் அளவிற்கு , வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் இந்த எளிய கருணாநிதி என எல்லா நாட்டு மக்களும் வாய்விட்டு சொல்லும் அளவிற்கு எனக்காக திரண்ட உங்கள் ஒவ்வொருவருகும் மறுபடியும் நன்றி

உடன்பிறப்பே, எனக்கு தெரிந்து உனக்கு ஒரு குறையும் நான் வைத்துவிட்டு வரவில்லை. போராட்ட ஆயுதம் முதல் வழிமுறை வரை , வெற்றிபெறும் வழிவரை சொல்லிவிட்டும் செய்து காட்டிவிட்டுமே விடைபெற்றிருக்கின்றேன்

அவ்வழி நடப்பாய், இயக்கம் காப்பாய், தமிழகத்தை வாழவைப்பாய்

கண்ணீரை துடை, களத்தை நோக்கி போ,

எந்நாளும் போல கழகத்து செயல்பாட்டில் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன்”