உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம்

No automatic alt text available.

உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம் கொண்டாடுகின்றார்கள் என இந்தியாவும் கொண்டாடுகின்றதாம்

உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கின்றது, அங்கு இருந்துகொண்டு மோடி என்னவோ முழங்கிகொண்டிருக்கின்றார்

சுற்றுபுற சூழல் எல்லாம் அழிய ஆரம்பித்து நெடுங்காலம் ஆயிற்று, என்று தொழில்புரட்சி என ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் எந்திரமயம் ஆனதோ அன்று தொடங்கியது இந்த அழிவு

ஆனால் அவர்கள் பின்னாளில் விழித்துகொண்டார்கள் , எதெல்லாம் ஆபத்தான சுற்றுசூழலை கெடுக்கும் விஷயமோ அதை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் தங்களின் தந்திரத்தால் அமைத்து கொண்டார்கள்

கூவம் போல ஆகியிருந்த லண்டன் தேம்ஸ் நதியினை கூட சுத்தமாக்கிவிட்டார்கள்

இன்று ஐரோப்பா ஓரளவு சுற்று சூழலை காக்க தொடங்கிவிட்டது, நாசமாய் போவதெல்லாம் ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் சுற்று சூழல்

ஆனால் தொழில்நுட்பம் ஐரோப்பியர் , அமெரிக்கர் கையில் இருக்கின்றது, உற்பத்தி ஆகும் பொருளின் விலை முதல் எல்லாம் அவர்கள் கட்டுபடுத்துகின்றார்கள், ஆனால் அதை உருவாக்கும் இடங்களை மட்டும் மூன்றாம் உலகநாடுகளில் அமைத்து கொல்கின்றார்கள்

இந்தியாவில் இயங்கும் பெரும் பரகாசுர கம்பெனிகளுக்கு பின்னால் எல்லாம் ஐரோப்பிய கரங்கள் உள்ளன‌

சுருக்கமாக சொன்னால் சாவதற்கு நாம், வாழ்வதற்கு அவர்கள்

ஸ்டெர்லைட் முதல் இன்னும் ஏராளமான அழிவு ஆலைகளில் எல்லாம் அவர்கள் கட்டுப்பாடு உண்டு

திருப்பூர் சாயபட்டறை எல்லாம் என்ன வகை? இங்கிருந்து சூழலை கெடுத்து ஆற்றை நாசமாக்கி அவர்கள் வாழும் வழி

இப்படி ஆலைகள் ஒருவகையில் சுற்று சூழலை கெடுக்கின்றன என்றால், பெட்ரோல் சமாச்சாரங்களால் ஏராளம்

வெறும் டீசல் பெட்ரோல் அல்ல, அது போக கழிவு எண்ணெய்கள் ஏராளம் சேரும், ஒருமுறை கார் பட்டறை பகுதிக்கு செல்லுங்கள் தெரியும்

ஒவ்வொரு எந்திரத்திற்கும் கழிவு எண்ணெய் உண்டு, அவற்றை என்ன செய்ய வேண்டும்? அப்படியே எங்கு எண்ணெய் எடுத்தார்களோ அந்த அரேபிய தீர்ந்துவிட்ட எண்ணெய் கிணறில் கொட்டவேண்டும்

நிலக்கரி சாம்பலையும் நிலக்கரி தோண்டிய பள்ளங்களில் நிரப்ப வேண்டும்

எங்கு எடுத்தோமோ அங்கே மறுபடி புதைத்தால் சிக்கலே இல்லை, ஆனால் செய்வார்களா என்றால் செலவு கணக்கு பார்த்து விட்டுவிடுவார்கள்

அவை எல்லாம் இப்பொழுது ஆற்றிலும் கடலிலும் கலக்கின்றன‌

கச்சா எண்ணெயால் இதுதான் அழிவா என்றால் அதனின்று வரும் பிளாஸ்டிக் டப்பா, பாட்டில் , பைகள் இவைதான் இன்று மாபெரும் சூழல் அழிவிற்கு காரணம்

கட்டுபாடில்லாத தொழில்சாலை அதன் கழிவுகள், அதனால் ஆற்றில் சேரும் குப்பைகள் என நம் சூழலை அழியவிட்டுவிட்டு ஐரோப்பா சுத்தம், சிங்கப்பூர் சுத்தம், அமெரிக்கா சுத்தம் என சொல்லிகொண்டிருக்கின்றோம்

அவர்கள் சுமக்க வேண்டிய அழுக்கை எல்லாம் இந்தியா சுமக்கின்றது, அவர்களுக்காகத்தான் இங்கு உற்பத்தி நடக்கின்றது, அந்த தொழிற்சாலை சீர்கேடுகளை நாம் அனுபவிக்கின்றோம்

அவர்கள் பலனை மட்டும் அனுபவிக்கின்றார்கள், நாம் அவர்கள் நாடு சுத்தம் என சொல்லிகொண்டே அவர்களுக்காக நம் நாட்டை நாசபடுத்திகொண்டிருக்கின்றோம்

அந்த சீர்கேடு பல்வகையான நோய்களை இங்கே கொண்டு வந்து சாகடித்துகொண்டே இருக்கின்றது

இவை எல்லாம் உலக அநீதிகள், கூர்ந்து பார்க்கலாமே தவிர ஏதும் செய்துவிடமுடியாது

இந்தியா எங்கும் பிளாஸ்டிக் பைகளும் கோக், பெப்சி கேன்களும் குப்பையாக நிரம்பி கிடக்கின்றன, கடலை கூட விடுவதில்லை

இது யார் கலாச்சாரம்? யார் தொடங்கி வைத்தது என்றால் நிச்சயம் நாம் அல்ல, பலன் பெற்றதும் நாம் அல்ல ஆனால் அழிவு மட்டும் நமக்கு

இதுபோக வெளிநாட்டு குப்பைகளை வாங்கி மறுசுழற்சி என்றபெயரில் அபாயகரமான குப்பைகளை வாங்கி இன்னும் சீரழிகின்றோம், கேட்டால் தொழில் என்பார்கள்

மொத்ததில் கடந்த 80 வருடத்தில் ஆறு, குளம், ஏரி என எல்லாவற்றையும் ஆலை கழிவு, வாகன கழிவு என எல்லாவற்றையும் கலக்கவிட்டு நாசமாக்கிவிட்டோம்

மலை உச்சியிலும் ஆழ்கடலிலும் தவிர எல்லா இடமும் கெட்டு கிடக்கின்றது

இதை எல்லாம் யோசித்தால் பைபிளின் திருவெளிப்பாட்டின் சில வரிகள் நினைவுக்கு வரும், குரானிலும் அந்த சாயல் உண்டு

அதாவது உலக அழிவு காலங்களில் நீர் நிலைகளில் 3ல் இரண்டு பங்கு கசப்பாகி மனிதர் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடுமாம்

அந்த காட்சி கண்முன்னே இப்பொழுது தெரிகின்றது

கூவம் கண் கண்ட சாட்சி, எப்படி இருந்த கூவம்?

சென்னை கோட்டையினை ஆண்ட ராபர்ட் கிளைவின் மாளிகை சென்னை கோட்டையில் இன்றும் உண்டு

அந்த மாடியில் இருந்து கூவம் ஆற்றை ரசித்தபடி தேநீர் குடிப்பானாம், மாலையில் அதில் படகோட்டி ரசிப்பானாம்

அப்படி இருந்த கூவம் இப்பொழுது அதே கோட்டையில் உலவும் அரசியல்வாதிகள் மனம்போல் கெட்டே விட்டது

இது போன்ற ஏகபட்ட கூவம் இந்தியா முழுக்க உண்டு, ஆனால் அரசு கங்கையினை காப்போம் என இறங்குமே தவிர மற்ற ஆற்றுபக்கம் வராது

இந்தியாவில் சுற்று சூழல் சீர்கேடு என்பது மிக மிக அதிக அளவில் இருக்கின்றது

முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய குளம், கிணறு எல்லாவற்றையும் குப்பை போட்டு நாசமாக்கி வைத்திருக்கும் ஒருவித மோசமான தலைமுறை இப்பொழுது உருவாகிவிட்டது சோகம்

அந்நிய சக்திகள் இந்நாட்டின் சூழலை கெடுத்தாலும் இம்மக்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு

இதெல்லாம் வரும் காலத்தில் மாறவேண்டும் , இல்லாவிட்டால் இந்தியா மக்கள் வசிக்க தகுதி இல்லா நாடாகிவிடும், இப்பொழுதே பாதி அப்படி இருக்கின்றது

அடுத்த சந்ததிக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்றால் இவற்றிற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும்

அதை செய்யாமல் மாடி வீடு கட்டி, பெரும் சொத்துக்களை குவித்து வைத்து அவர்கள் வாழ வழி செய்தேன் என சொல்வது கொலைக்கு சமானம்

அந்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை

வருங்கால சந்ததிக்கு சொத்துக்களை விட்டு செல்வதை விட, அவர்கள் நிம்மதியாக வாழ நல்ல சூழலை செய்வதே சால சிறந்தது

இந்த அழகான பூமி நமக்கு மட்டுமல்ல , எல்லா உயிர்களுக்கும் மரம் செடி கொடிகளுக்குமானது

நிச்சயம் இது வாடகை வீடு, அந்த வீட்டினை நன்கு பராமரித்து அடுத்துவரும் சந்ததிக்கு பசுமையாய் விட்டு செல்வதே மானிட தர்மம், அதுவே நீதி


தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : ‍ பழனிச்சாமி அறிவிப்பு

நல்லது, ஆனால் இந்த வருடம் முதல் ஏன் தடை இல்லை என யாரும் கேட்க கூடாது

ஆக அடுத்தவருடம் ஆட்சியில் இருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கே இல்லை போலிருக்கின்றது