எந்த மக்கள் போராட்டத்தை நடத்தினார் ரஜினி?
“ரஜினியிடம் என்ன குறை கண்டாய், நீ திமுக என்பதை ஒப்புகொள் , எம் தலைவனை நினைத்து அஞ்சுகின்றீர்களா ?” என்றெல்லாம் பல ரஜினியின் குஜிலன்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன
ரஜினியின் பலம் என்ன என்பது ராமதாஸ் கும்பல் பாபா படபெட்டி தூக்கும்பொழுதே தெரிந்தது. ஆனானபட்ட பிரபாகரனையே விமர்சித்த எமக்கு ரஜினி எல்லாம் கணக்கிலே இல்லை, எனினும் நீவீர் கேட்டதால் அதிருப்திகளை சொல்கின்றோம்
ஒரு மனிதன் 24 வருடமாக அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருக்கின்றான், அவன் இப்பொழுது உறுதியாக வருவேன் என சொல்லும்பொழுது கொள்கை என்ன என கேட்கமாட்டார்களா?
ராமசந்திரன் நல்லாட்சி நடத்தினார் என்பதை யார் ஒப்புகொள்ளமுடியும்? ஒரு திட்டம் ஒரே ஒரு உருப்படியான திட்டம் அவர் செய்ததை சொல்லுங்கள்?
மிசா கொடுமையினை வரவேற்றவர் ராமசந்திரன், பாசிச புலிகளை தமிழக எச்சரிக்கையினை மீறி வளர்த்தவர் ராமசந்திரன், தமிழகம் லஞ்சத்திலும் ஊழலிலும் திளைக்க பத்திரிகைகள் கெட்டுபோக முதல் காரணம் அவர், தன் சுயநலத்திற்காக கட்சி தொடங்கி, தன் ஆசை நாயகி கையிலகொடுத்துவிட்டு சென்ற சுயநலவாதி
கொள்கை என்றோ கோட்பாடு என்றோ எதுவுமே இல்லா, காலத்திற்கும் டெல்லியின் காலடியில் அமர்ந்திருந்த அடிமை அவர், அவர் ஆட்சி நல்லாட்சியா? ஊழல் இல்லை என்பீர்கள், ரே கமிஷன் என்றால் என்ன என படித்துவிட்டு வாருங்கள்
ரஜினி பேச்சை கேளுங்கள் கலைஞர் திறமைசாலி, ஜெயா நல்லவர், ராமசந்திரன் உத்தமர். சரி இவர்கள்தானே 40 வருடம் ஆண்டார்கள் பின் சிஸ்டம் எப்படி கெடும்? தானே கெட்டதா?
இவர் ராகவேந்திரா மண்டபம் கட்டினாராம், தடை வந்ததாம், உடனே ராமசந்திரன் புகுந்து தடை செய்தவனை மிரட்டி இவருக்கு அனுமதி கொடுத்தாராம்
ஆக சிஸ்டம் என்று கெட்டிருக்கின்றது, நிச்சயம் ராமசந்திரன் கெடுத்திருக்கின்றார். கட்டடம் கட்ட தடை என்றால் கோர்ட்டுக்குதான் செல்லவேண்டும், கட்டபஞ்சாயத்து செய்வதுதான் சிஸ்டமா?
இவர் மண்டபம் கட்ட மட்டும் சிஸ்டம் வளைந்து கொடுக்கலாமா?
இன்னும் ஏகபட்ட அபத்தம், ஏசி சன்முகம் என்பவர் யார்? என்ன தொழில் செய்தார்? எப்படி இவ்வளவு வந்தது எல்லாம் ராமசந்திரனின் கட்சி கொடுத்தது, மழைவெள்ளத்தில் கூட அவர் மீது ஆக்கிரமிப்பு புகார் வந்தது
அந்த சன்முகம் கல்லூரியில் சென்று ராமசந்திரனை புகழ்வது சிஸ்டம் சரியில்லை என சொல்பவர் வேலையா?
தமிழில் பேசினால் தமிழ் வளராதா? இப்படி ஒரு பைத்தியக்கார பேச்சை எங்காவது கேட்க முடியுமா?
பின் என்ன மண்ணாங்கட்டிக்கு பாலசந்தர் தமிழ்படி என்றவுடன் ஓடி சென்று படித்து பேசினீர் ரஜினி?
வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியபொழுது துடித்த ரஜினியினை பிரபகாரன் 1 லட்சம் மக்களை பிடித்தபொழுது காணவில்லை
எந்த மக்கள் போராட்டத்தை நடத்தினார் ரஜினி? ஒரு போராட்டம் , ஒரு கருத்து?
குண்டுவெடிப்பில் கூட மணிரத்னம், அதுவும் தன் அடுத்தபடத்தை அவர் இயக்க இருந்த நிலையில் கண்டித்தாரே அன்றி வேறு எதனை கண்டித்தார்?
கோவை குண்டுவெடிப்பில் கூட அமைதி
தமிழக உரிமைகளை, கொள்கைகளை, மாநில சுயாட்சியினை என்றாவது பேசியிருப்பார்? இது பெரியார் சிலைவிவகாரத்தில் கூட, கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கூட அமைதி.
ரஜினிக்கும் ராமசந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை இன்றுவரை இருவர் வாங்கிய சம்பளமும் தெரியாது, அதில் கருப்பு பணம் எவ்வளவு என தெரியவே தெரியாது
மனைவி மோசடி வழக்கிலும், வாடகை பாக்கியிலும் சிக்க மனிதர் கொஞ்சமும் அலட்டிகொள்ளவில்லை, ஆம் தான் மிகபெரும் மக்கள் சக்தி என்றும், தன் குடும்பத்தாரின் அட்டகாசங்களை அவர்கள் தனக்காக பொறுப்பார்கள் எனவும் மனமார நம்புகின்றார்
நாளை இவர் ஆட்சிக்கு வந்தாலும் அது சசிகலா கும்பலாக ஆட்டம் போட்டாலும் இவர் ஜெயா நிலையில் இருப்பார் என்பதற்கு இதுவே சாட்சி. அந்த அளவில் பெரும் மயக்கத்தில் இருக்கின்றார்
ரஜினி பேச்சை கேட்டபொழுது ஒரு பண்பட்ட அரசியல் தலைவரின் பேச்சு அல்ல அது, தமிழகம் நம்மை கவனிக்குமே வெகு ஜாக்கிரதையாக பேசவேண்டுமே என்ற கவனம் எல்லாம் இல்லை
மாறாக நான் யார் தெரியுமா? என்ற தெனாவெட்டு இருக்கின்றது, ஒரு வித திமிர் இருக்கின்றது
இந்த அகந்தை, இந்த திமிர், கூட்டம் கைதட்டியவுடன் ஏதோ உலக தலைவிதியினை நிர்ணயிக்க போகின்றோம் என்ற மயக்கம் எல்லாம் அவருக்கு மாபெரும் வீழ்ச்சியினை கொடுக்கும்
இன்று அறிவித்துவிட்டு மறுநாள் பூசை போட்டு 4 வாரத்தில் படம் வெளியிடுவதை போல, முதல்நாள் கொள்கை மறுநாள் கட்சி அதற்கு அடுத்தநாள் ஆட்சி எனும் போக்கில் ரஜினி இருக்கின்றார்
இது அவருக்கு மாபெரும் சரிவினை கொடுத்து அரசியல், சினிமா என இரண்டிலிமிருந்து அவரை நிச்சயம் அகற்றும்
ஏ ரஜினியின் குஜில்களே இதை எழுதி வைத்துகொள்ளுங்கள்
விஜயகாந்த் போல, சிரஞ்சீவி போல இல்லை, இல்லை ராமராஜனை போல உங்கள் ரஜினியும் பெஞ்சுக்கு போகும் காலம் வந்துகொண்டே இருக்கின்றது
பலத்த மிரட்டலுக்கு இடையிலும் பிரபாகரனின் இன்னொரு முகத்தை கிழித்து போட்ட, யாரும் விமர்சிக்க தயங்கும் ராமசந்திரனை பல இடங்களில் தோலுரித்த எமக்கு ரஜினி எல்லாம் ஒரு விஷயமே அல்ல
உங்களுக்கெல்லாம் அஞ்சினால் நாளை ராமராஜன் ரசிகனுக்கும் , சன்னி லியோன் ரசிகர்களுக்கும் பணிய வேண்டும்
அங்கிள் சைமனின் தும்பிகள் கொடுக்காத இம்சையினையா நீங்கள் கொடுத்துவிட முடியும்?
ரஜினி பொதுபிம்பம் , காசு கொடுத்து பார்ப்பதால் அவர் படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு, தமிழகத்தை ஆள்வேன் என சொன்னால் அவரின் குறைகளை சொல்ல எமக்கு உரிமை உண்டு
நாம் சொல்லாமல் ஜாக்கிசானா வந்து சொல்வார்?
நாம் எமது கருத்துக்களை, சில உண்மைகளை சொல்லிகொண்டே இருப்போம், இதற்கு மேலும் மிரட்டினால் கபாலியில் உன் தலைவன் சொன்ன வசனம்தான்
“நான் எழுதுவேண்டா, தைரியமாய் எழுதுவேண்டா, உன் தலைவன் பொய் சொன்னால் கிழிப்பேண்டா, அவர் உளறினால் அந்த உளறலை கிளறுவேண்டா
பொறுக்க முடியலண்ணா போய் சாவுடா”