நான் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்
சொந்த ஊர் என்பது யாராலும் மறக்க முடியாதது, திரும்ப திரும்ப நெஞ்சில் மோதும் நினைவு அலை அது.
அப்படி எங்கள் கிராமத்திற்கும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கினார்கள், நெஞ்சில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம், அந்த ஊரின் வரலாற்றையும் , பல சம்பவங்களையும் அதில்தான் பதிந்திருந்தேன்
இது யாரோ குறுக்குமூளைக்காரன் மூளையில் விபரீத சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது.
இவன் ஊரின் அமைதியினை குலைக்கின்றான், பெரும் கலவரத்திற்கு திட்டமிடுகின்றான், உடனே காவல்துறையில் சிக்க வைக்கவேண்டும் என சிலர் கிளம்பினார்கள்.
(இருப்பது 4 தெரு, மொத்த வீடு 45 அதில் பாதியில் ஆட்களே இல்லை, அந்த ஊரில்தான் நான் கலவரம் ஏற்படுத்துவேனாம், அவர்கள் கற்பனை அப்படி
அப்படிபட்ட பெரும் அறிவாளிகள் உள்ள ஊரில் அவதரித்திருக்கின்றேன்)
81 வயதான , இணையமே தெரியாத ஏன்? கண்பார்வை தெரியாத மூதாட்டி ஒன்றும், அந்த ஊரின் குளத்துகரை தவிர , 4 மாடுகளை தவிர ஏதும் அறியாத அப்பாவி முதியவர் ஒருவரிடமும் அக்கும்பல் முறையிட்டது
அவ்வளவுதான் எழுதபடிக்க தெரியாத அவர்கள் எம் பெற்றோரிடம் முறையிட்டனர், உன் மகன் ஏதோ எழுதிவிட்டான், ஊர் கட்டுபாட்டை மீறிவிட்டான் இனி உங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவிடுவோம், அன்னம் தண்ணி புழங்கமாட்டோம்
உன் மகன் ஒரு குதர்க்கவாதி, சமூக விரோதி இந்த மாபெரும் ஊரின் மகிமையினை கெடுக்க பிறந்த இழிபிறப்பு (ஊரில் மொத்தமே 4 வீடுதான்) என கடும் எச்சரிக்கை செய்தார்கள்
ஆம் முறையிட்ட இருவருக்குமே எழுதபடிக்க தெரியாது, இணையம் தெரியாது, ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது , ஆனால் மிரட்ட மட்டும் தெரியும்
போனில் கதறினார் தாய், தந்தையின் அழுகுரல் அன்றுதான் ஒலித்தது, என்ன சொன்னாலும் கேட்கவில்லை
“நீ உருப்படமாட்டேன்னு தெரியும், ஆனால் இப்படி ஊரில் அடிபட்டு நாசமாய் போவாய் என தெரியாது, இனி நாங்கள் உயிரோடு இருக்கவேண்டுமானால் இந்த ஊரைபற்றி எழுதாதே..” என சத்தியம் வாங்கினர்.
அப்படி யாரையும் பழித்தோ, இழித்தோ ஒருவார்த்தையும் எழுதவில்லை. சிறுவயது நினைவுகளை பதிந்தேன் , தேடிபிடித்த வரலாறுகளை பதிந்தேன். என்ன குற்றம்? என கதறி நின்றாலும் கேட்பார் யாருமில்லை
உண்மையில் அது வலி, அந்த ஊர் தோன்றிய விதம் குறித்து பெரும் ஆராய்ச்சி செய்திருந்தேன், ஒவ்வொரு தெருவின் வரலாறும் வித்தியாசமாக இருந்தது
நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவான குளமும் ஊரும் அது, எங்களுக்கு முன்னால் தெலுங்கு மக்கள் வசித்திருக்கின்றார்கள், நாங்கள் அங்கு பின்னால் வந்தவர்கள்
அந்த ஊரில் ஆலயமும் அதன் வரலாறும் தேடி தேடி எடுத்தது, இன்னும் ஏராளமான விஷயங்களுக்கு எங்கெல்லாமோ தேடி எடுத்தேன்
ஆனால் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், பெரும் பழிசுமத்தி விரட்டினார்கள், ஆறா ரணம் அது.
அத்தோடு அப்பக்கம் முடிந்தது, வெளியே வந்துவிட்டேன்.சொந்த ஊரைபற்றி எழுதாமல் என்ன எழுத்து என கொஞ்சகாலம் வனவாசமும் போய்விட்டேன்
அதன்பின் உலகமும் அரசியலும் சினிமா ரசனையுமாக பதிய ஆரம்பித்தேன், உண்மையில் இப்படி எல்லாம் எழுத முடியும் என்றோ, இத்தனை பேரை நண்பராக்க முடியும் என்றோ சத்தியமாக நினைத்ததில்லை
இப்பொழுது எனக்கே அச்சமாக இருக்கின்றது, நண்பர் கூட்டம் பெருகிவிட்டது, யார் யாரெல்லாமோ நம்மை கண்க்காணிக்கின்றார்கள், சிலர் பகிரங்கமாக, சிலர் ரகசியமாக
அப்படி நெல்லை மாவட்ட சன்டிவி நிருபரும் நம்மை கவனித்திருக்கின்றார். சமூகத்தின் பெரும் மதிப்பு மிக்கவர் அவர்
கடந்தவாரம் ஒரு நிகழ்வில் என் அன்னையினை சந்தித்திருக்கின்றார் , என்னை பற்றி விசாரித்திருக்கின்றார், நம் எழுத்துக்களை சொல்லியிருக்கின்றார்
இப்பொழுதுதான் இதய அறுவை சிகிச்சை செய்த தாய்க்கு பெற்ற வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியதாக மயக்கம் வந்திருக்கின்றது.
ஆனால் அவர் நல்லவிதமாக சொல்லியிருக்கின்றார், நாம் மிக சிறந்த எழுத்தை கொடுப்பதாகவும் நாம் இந்தியா வரும்பொழுது அவசியம் சந்திப்பதாகவும், அந்த மிகசிறிய ஊரில் இருந்து ஒருவன் இப்படி எழுதுவது பெரும் விஷயம் எனவும் சொல்லியிருக்கின்றார்
திட்டியே தீர்க்கும் தந்தைக்கு அன்று கண்ணீர் கட்டிற்று
“நீ நல்லா எழுதிரியாம், எல்லோருக்கும் பிடிக்குமாம் ஆனா இந்த பாவிபய ஊருலதான் உன்ன புரிஞ்சிக்க யாருமில்ல, வெளியூரிலியாது ஆள் இருக்கு அத நினைச்சி சந்தோஷபட்டுக்க”
உண்மையில் மிக நெகிழ்ச்சியான விஷயம் அது. ஆக சிறந்த எழுத்துக்களை அந்த ஊருக்காகத்தான் எழுதினேன்
ஆனால் பன்றிமுன் போட்ட முத்தாகிவிட்டது போகட்டும்
என் மீது ஊரில் விழுந்த பெரும் கறையினை தீர்க்க உதவிய அந்த நண்பருக்கு மிக்க நன்றி, நிச்சயமாக அவர் நன்றிக்குரியவர்.
அப்படியே நடக்க முடியாத காலத்திலும் வீட்டிற்கு வந்து மிரட்டிய அந்த மூதாட்டிக்கும் அவர்களை தூண்டி விட்டவர்களுக்கும் நன்றி
இல்லாவிட்டால் அந்த 4 தெருக்களை மட்டும் எழுதி, உலகில் காணாமலே போயிருப்பேன்.
கவனித்துகொண்டிருந்த தெய்வம் பெரும் ஆறுதலை கொடுத்திருக்கின்றது.
தாயும் தந்தையும் நம்மை புரிந்துகொண்டபின் மனம் புத்தம் புது உற்சாகம் கொள்கின்றது,
பெரும் விலங்கொன்று தகர்ந்தது போலவும், பெரும் பாரம் இறக்கி வைக்கபட்டதை போலவும் உணர்கின்றேன்
கோழிகளோடு குப்பை கிண்டிகொண்டிருந்த கழுகொன்று தன் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்