எல்லா வளங்களும் எல்லோருக்கும் பொங்கட்டும்
மனிதகுலம் தோன்றி, வேட்டையாடுதலை விட்டு ஆற்றங்கரையில் விவசாயம் தொடங்கி நிலையாக வாழ ஆரம்பித்தபொழுதே நாகரீக வாழ்வு ஆரம்பமாயிற்று.
மயன் நாகரீகம்,எகிப்து,சுமேரியா,சிந்து வெளி,சீனா என பெரும் பழைய நாகரீகங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் மிக பழமையானது ஆதிச்சநல்லூரில் புதைந்துகிடக்கும் பழம்நாகரீக உலகம்.
அதுதமிழனின் அடையாளம் என்பதற்காக இன்றுவரை அதில் கவனம் செலுத்தபடவில்லை, இன்னும் செலுத்தவும் மாட்டார்கள். ஆயிரம் உண்மைகளை கொண்டு உறங்கிகொண்டிருக்கின்றது அது, உறங்கட்டும் காலம் வரும் வரை உறங்கட்டும்.
அதைத்தான் மறைக்கமுடியுமே தவிர, அந்த தமிழ் நாகரீக வேளான்மை சமுதாயம் எப்படி வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது என்பதற்கு அடையாளமான விழாக்களை அவர்களால் எப்படி மறைக்கமுடியும்?
அதில் ஒன்று பொங்கல் விழா.
கவனித்துபாருங்கள், ஆயிரம் அற்புதங்களை உள்ளடக்கிய விழா.
அறுவடை முடிந்துவிட்டது, உழைப்பும் வீடுவந்தாகிவிட்டது, அவ்வளவுதான் இனி கொஞ்சநாள் ஓய்வு என கட்டிலில் மல்லாக படுக்கவில்லை அந்த இனம்.
சுத்தம் முதன்மையானது, சுத்தம் எப்பொழுது வரும்? தேவை இல்லாத குப்பைகளை தூக்கி எறிந்தால் வரும், எறிந்தால் அது குப்பை கூளமாகும், எரித்துவிட்டால் ஒன்றுமில்லை. அதுதான் போகி. ஆயத்த விழா.
உயிர்வாழ தேவை உணவு, உணவு கிடைக்க ஒரே வழி வேளான்மை , அதற்கு உறுதுணையான ஒவ்வொன்றாக நன்றியோடு நினைத்தார்கள்.
புத்தாடை அணிந்து புது அரிசி மாவில் பூமி அன்னைக்கு கோலமிட்டு நன்றியோடு மகிழ்ந்தார்கள், ஆற்று நீரை புதுபானையில் அள்ளி எடுத்து அதனை வணங்கினார்கள், பின் பொங்கலிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனை வணங்கினார்கள். பொங்கல் படையலில் மங்கல அடையாளம் மஞ்சள், தங்கள் வீட்டு பனங்கிழங்கு (இது தமிழரின் ஆரோக்கிய உணவில் ஒன்று) என ஒவ்வொன்றாய் அர்த்தமுள்ள பொருளாக அடுக்கினார்கள்.
பின்னாளில் இனிப்பின் அடையாளமான கரும்பும் இடம்பெற்றது.
அன்று வேளான்மைக்கு காரணமான பூமி,நீர், சூரியன் ஆகிய மூன்று வரங்களையும் நன்றியோடு நினைத்துகொண்டார்கள்.
அடுத்த நாள் அவர்களின் உற்ற உழைப்பாளி,உழவாளி, உரமும் பாலும் கொடுக்கும் மாட்டிற்கானது.
மாட்டை தமிழர் ஒரு விலங்காகவே பார்க்கவில்லை, தமது வீட்டில் ஒரு உறுப்பினரகாகவே கண்டனர், அதற்கு மேல் அது ஒரு செல்வமாகவே பார்க்கபட்டது,
அந்த நாளை அதற்காகவே ஒதுக்கியிருந்தனர், அன்று மாடுதான் ஹீரோ, அதற்கு அலங்காரமிட்டு அதனை நன்றியோடு நினைத்து வணங்கினர், உலகிலே எந்த இனத்திற்காவது இந்த குணம் இருந்ததென்று நினைக்கின்றீர்கள்?
அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல், அதாவது கனிகளும் இன்னும் பல மங்கள பொருட்களும் எடுத்துகொண்டு உறவினர்களை காண செல்லுவார்கள், அல்லது எல்லா சுற்றத்தாரோடும் கலந்து மகிழ்வார்கள், பெரும் கோயில்களை காண செல்வதும் உண்டு.
இவ்வாறாக தனக்கு உணவளிக்கும் இயற்கையை, தன்னோடு உழைக்கும் மாட்டை, தனக்கு உறுதுணையான சுற்றத்தை நன்றியோடு நினைக்க தெரிநது அதற்கு நாள்குறித்து கொண்டாடிய இனம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கவேண்டும்?
அக்கால தமிழரும் அவரின் பொங்கல்பண்டிகையும் அப்படித்தான் இருந்தது,
உலகில் எல்லா குறிப்பிட்ட இனங்களுக்கும் அறுவடை திருவிழா உண்டு, யூதர் முதல் ஜப்பானியர் வரை உண்டு. ஆனால் தமிழர் சகல ஜீவராசிகளையும் நன்றியோடு நினைத்தது போல எந்த இனமும் நினைக்கவில்லை.
அன்று தனது நிலத்து அரிசி, தனது மண்ணின் பானை, தனது உழைப்பு,தனது மாடுகளுடன் தமிழன் கொண்டாடினான் பொங்கல், அதில் ஒரு மனநிறைவு மகிழ்ச்சி இருந்தது.
அந்த மகிழ்ச்சியில் மாடுபிடி விளையாட்டும் நடத்தினான், ஸ்பெயின் போல மாட்டை கொல்லும் கலாச்சாரம் நமக்கல்ல, அடக்கி வீரம்காண்பது மட்டுமே.
சூரியன் முதல் பூமிக்கு வரை நன்றிதெரிவித்தே ஒருவாரம் கொண்டாடினர் தமிழர்.
இன்று
தாய்லாந்து அரிசி, எங்கோ செய்யபட்ட பானை, அரேபிய எரிவாயு, என இறக்குமதியான பொருளுடனும் பொங்கலை கொண்டாடுகின்றனர்,
எங்கோ இருந்துவந்து நடித்துபிழைக்க வந்த கூட்டமெல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்லும், அரசியல்வாதிகளை விடுங்கள் அவர்கள் மாட்டிற்கு வோட்டுரிமை இருந்தால் அதனிடமும் சென்று முழங்கிகொண்டிருப்பார்கள்.
சாஸ்திரமாக பொங்கலை கொண்டாடுபவர் 80% உண்டு, அவர்களை வாழ்த்தலாம்.
பொங்கல் என்றால் மாடுபிடித்து மகிழ்ந்த தமிழன், இப்பொழுதெல்லாம் தியேட்டர் வாசலில் டிக்கெட்டிற்காய் அடித்துகொள்கின்றான், வாங்கிவிட்டால் ஆயிரம் காளைகளை அடக்கிய சந்தோஷம் வருகிறது.
அப்படியே தலைபொங்கல் சீர் வாங்கும்பொழுது நாளெல்லாம் பொங்கல்விழா வராதா என எண்ணவும் அவனுக்கு தோன்றுகிறது.
சில தமிழருக்கு திடிரென் திருவள்ளுவன் மேல் கோபமும் வருகின்றது, எந்த பாலை அவன் கொடுத்தால் என்ன? அரசாங்க அமிர்தபாலை தடைசெய்ய பொங்கலன்றா பிறக்கவேண்டும்?
தமிழக பொங்கலில் அடிஆதாரம் காவிரி டெல்டா, அங்கேயே மீத்தேன் பொங்கல் வைக்க தயாராகும் தேசமிது.
நினைக்க நினைக்க மனம் பல சிந்தனைக்குள் செல்லும்,
ஆனாலும் நாகரீகமான தமிழினத்தின் உயர்ந்த அடையாளங்களில் ஒன்று பொங்கல் விழா, அதோடு கூட தமிழரின் புகழை உலகெல்லாம் பரப்பிய தெய்வகவியாசான் வள்ளுவனின் பிறந்தநாள் கூட
தமிழகத்தில் ஜாதி,இனம்,மதம் என எல்லாம் கடந்து கொண்டாடும் பெருவிழா பொங்கல் விழா, உலகெல்லாம் சிதறி கிடந்தாலும் தமிழர்கள் மறக்காமல் கொண்டாடும் விழா
எல்லோருக்கும் தமிழர் திருவிழா வாழ்த்துக்கள்,
அப்படியே தமிழகத்தின் எல்லா மாடுகளுக்கும் , குறிப்பாக சாலையோரம் தனி ராஜாங்கம் நடத்தும் மாடுகளுக்கும் மாட்டுபொங்கல் வாழ்த்தையும் தெரிவிப்போம்.
பயணத்தில் இருக்கும் நண்பர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பிரார்த்திபோம்.
மகிழ்ச்சி, அன்பு,சகோதரத்துவம், கருணை, மனிதநேயம் எல்லாம் பொங்கலோ பொங்கல் என பொங்கி வழியட்டும்.
சொந்த மண்ணில், சொந்தகுடும்த்தாரோடு, உற்ற நண்பரோடு மகிழ்ந்து கலந்து கொண்டாடும் மகிழ்ச்சியை கடவுள் வாழும் சொர்க்கம் கூட கொடுக்கமுடியாது.
எல்லோருக்கும் வாய்க்காத பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது, விடாதீர்கள் கொண்டாடி களியுங்கள்.
எல்லா வளங்களும் எல்லோருக்கும் பொங்கட்டும்.