ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 02

“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து”

இக்குறள் “பாலின்கள் நெய் போற் பர்ந்தெங்கும் நிற்குமே நூலின் கண் ஈசன் நுழைந்து” என பிரிந்து பொருள் தரும்

பாலுக்குள் நெய் இருப்பது போல எல்லா இடத்திலும் சிவன் நிறைந்து பரவி இடையேளியே இல்லாமல் தொடர்ந்து (நூலாக பிணைந்து) வியாபித்திருக்கின்றார் என்பது பொருள்

சிவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றார், நம் உடலிலும் இருக்கின்றார் ஆனால் பாலுக்குள் நெய் போல மறைந்திருக்கின்றார், பாலை பக்குவபடுத்தி தயிராக்கி கடைந்தால் நெய் வருவதை போல மனதை பக்குவமாக்கி கடைந்தால் சிவன் வெளிபடுவார் என்பது குறளின் பொருள்

பால் உறைமோரினால் தயிராவது போல மனம் ஞானியர் தொடர்பால் உறையவேண்டும், அந்த உறைந்த மனதை யோகத்தால் கடைந்தால் வெண்ணை திரள்வது போல ஞானம் திரளும், அந்த ஞானம் சிவம் எனும் பரம்பொருளை காட்டும் என்பது ஒளவையின் போதனை

ஒருவகையில் பார்கடலில் அமிர்தம் கடைந்த அந்த புராணமும் யோக தத்துவத்தை சொல்வதே, நம் மனதை யோகத்தால் கடைந்தால் நன்மை தீமைகள் இடையே மனதை கடைந்தால் முதலில் கெட்டவை எல்லாம் மே, எழும் அதை இறைவனே ஏற்று நம்மை காப்பார் , அதை தாண்டி இன்னும் ஆழமாக மனதை கடைந்தால் ஞானம் வெளிபடும் அந்த ஞானத்தில் முழு முக்தி நிலையினை அடையலாம்

இந்த பாற்கடல் தத்துவத்தைத்தான், யோகத்தால் சிவனை அடையலாம் எனும் தத்துவத்தைத்தான் இக்குறளில் மிக அழகான உருவகமாக பாடுகின்றார் ஒளவையார்