ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 04

“எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்”

இக்குறள் “எல்லார்க்கும் ஒன்றே சிவமாவது என்று உணர்ந்த பல்லோர்க்கு உண்டோ பவம்” என பிரிந்து பொருள் தரும்

“பவம்” என்றால் பிறப்பு அல்லது உலக வாழ்க்கை என பொருள்

அதாவது எல்லா உயிர்லிலும் சிவமே உள்ளது, எல்லா உயிரும் அதன் இயக்கமும் சிவ வடிவம் என்ற உண்மையினை உணர்ந்தோருக்கு பிறப்போ உலக வாழ்க்கையோ அடுத்து இல்லை அவர்களுக்கு பிறவி இல்லா முக்தி நிலை கிட்டும் என்பது பாடலின் பொருள்

எல்லா உயிர்களிலும் சிவமே உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுதலே முழு ஞானம் என்கின்றார் ஒளவையார்.

“பாரடங்க வுள்ளதும் பரந்தவான முள்ளதும்
ஓரிடமு மன்றியே யொன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமு மன்றியே யகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே” என்கின்றது சிவாக்கியார் பாடல்

அதாவது பூமியில் அடங்கியுள்ள யாவிலும் ஆகாயமாக விரிந்துள்ள அனைத்திலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்த பரம்பொருளே சோதியாக உள்ளது. அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபஈத்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும் மெய்ப் பொருளாக விளங்கி நிற்கின்றது. அதனை அறிந்து தன சீவனிலே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே என்பது பொருள்

எல்லாவற்றுக்கும் மேலாக கீதையில் கண்ணன் சொல்கின்றான், இதோ அந்த ஸ்லோகம்

“‍ஸ்ர்வபூதானாம் ஹ்ருத்தே அர்ஜுன திஷ்ட்டதி ப்ப்ராமயன் லர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா”

“அர்ஜூனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்”

இதைத்தான் எல்லா உயிர்களிலும் இருப்பது சிவனே, எல்லா உயிர்களின் இயக்கமும் சிந்தனையும் அவனே அதை தெரிந்து கொள்வதே ஞானம் என கீதையும் ஞானியரும் சொன்னதை இங்கே தானும் சொல்லி போதிக்கின்றார் ஒளவையார்