ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01

“தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு”

தன்னை அறியும் அறிவுதனை பெறில் பின்னை பிறப்பில்லை வீடு என்பது இக்குறளின் பொருளாகும்

அதாவது தன்னையே யார் என அறிந்து கொண்டால், நான் என்பது உடலா மனமா ஆத்மாவா என்பதை மிக தெளிவாக அறிந்து கொண்டால் அடுத்த பிறவி இல்லை, இந்த பிறவியே தான் யார் என்பதை அறிய கொடுக்கபட்டது என்பது குறளின் பொருளாகும்

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.” என இந்த தத்துவத்தை திருமூலர் திருமந்திரத்தில் சொல்வார்

அப்பர் சுவாமிகளும் தன் பாடலில் சொல்வார்

“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே” என்பார்

“தானென்ன பொருள் தன்னை தானேயறி”
மோன மந்திரசாரம் உண்டதில் தெரிவாயே”

என்பது ஞானவெட்டியானின் வரிகள் இது வள்ளுவ நாயனாராகவும் இருக்கலாம் என்பது ஆய்வு சொல்வது

“என்னையே நானறிய இருவினையும் ஈடழித்து
தன்னை அறிய தலம் எனக்கு சொன்னாண்டி” என்பது பட்டனத்து சித்தரின் தேடல் மொழி

“தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னை காட்டுவார்” என்பது பாம்பாட்டி சித்தரின் அனுபவ மொழி

ஆம், ஒவ்வொருவனும் தான் யார் என்பதை அறிந்தால் சிக்கலே இல்லை, உண்மையில் தான் யார் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் உண்டு அந்த பெயர் உடலுக்க்கா ஆத்மாவுக்கா எனும் கேள்வி எங்கு எழுமோ அதுதான் “தன்னை அறிதல்” என்பதன் தொடக்கம்

நான் என்பது உடல் என்றால் அது அழியகூடியது, அப்படியானால் அது நான் அல்ல‌

நான் என்பது ஆத்மவானால் அது பரம்பொருளில் இருந்து வந்து அங்கே கரையவும் கூடியது அப்படியானால் நான் என்பது ஆத்மாவும் அல்ல‌

அப்படியானால் நான் யார்?

நான் என்பது ஒன்றுமல்ல வெறும் மாயை, வானில் வந்து செல்லும் மின்னல் ஒளிபோல ஒரு மாயை, அதனை இயக்குவதும் நான் அல்ல, இயங்குபவனும் தான் அல்ல , தான் ஒன்றுமே இல்லை என அறியும் ஞானம்

இந்த ஞானத்தைத்தான் “என்ன அறிவித்து எனக்கருள் செய்து” என விநாயகர் அகவலில் பாடினார் ஒளவை

தான் ஒன்றுமில்லை எல்லாம் இறைவனின் இயக்கம் என அறிவதே ஞானம், அந்த ஞானம் கிடைத்தால் பிறவி இல்லை என்கின்றார் ஒளவையார்