ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 04
“உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்”
இக்குறள் “உறக்கம் உணர்வோடும் உயிர்ப்பின்மை அற்றால் பிறப்பின்றி வீடாம் பரம்”
உறக்கத்தை குறைத்து, பசி உள்ளிட்ட உணர்வுகள் அற்றுபோகும்படி செய்து, லவுகீக உயிர்நிலை அதாவது அங்குமிங்கும் ஓடோடி திரியும் அந்த இயக்கத்தை ஒழித்து சமாதிநிலை எனும் உன்னத நிலைக்கு வந்தால் பிறப்பில்லா நிலையினை அடையலாம் என்பது பொருள்
உறக்கம், பசி, இதர உணர்வெல்லாவும் உயிர்த்திருக்கின்றோம் என்பதை காட்ட அசைவும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானவை அது இன்றி வாழ்வில்லை எனும்பொழுது இக்குறள் எப்படி சாத்தியமாகும் என்றால் இது சித்தர்களுக்கு சாத்தியம்
அதாவது முழு சிந்தையும் உணர்வும் சிவனில் கலக்க வேண்டும் என்பது இங்கு சொல்லபடும்தத்துவம். எல்லா நிலையிலும் சிவனில் கலந்திருக்கும் பொழுது உறங்குவதும் உண்பதும் இதர நினைவுகளும் சிவநினைவுடன் நடக்கும்
அப்பொழுது அவர்கள் உறக்கமும் உணர்வும் எல்லாமும் சிவமாகும், மானிட உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு அவர்கள் செல்வார்கள், பிரபஞ்சத்தில் கலந்த பெருநிலையினை எட்டுவார்கள்
அந்நிலையில் பிரபஞ்ச பெரும் சக்தி அவர்களை இயக்கும்
இந்த பிரபஞ்சத்தின் உயிர்சக்தியே நீராக மாறி மண்ணுக்கு வந்து பயிராக மாறி மானுடனுக்கு உணவாகி உடலுக்கு சக்தி கொடுக்கின்றது
உறக்கம் எனும் ஓய்வில் உடல் அந்த ச்கதியினை இன்னும் பெரிதாக்குகின்றது
ஆனால் பிரபஞ்சத்தில் கலந்த ஞானியால் இந்த சக்தியினை நேரடியாக பிரபஞ்சத்தில் இருந்தே பெற்றுகொள்ளமுடியும்
அவர்களுக்கு உறக்கமுமில்லை, பசியுமில்லை, ஏன் அவர்களால் சமாதி நிலை எனும் அசையா பெருநிலையில் கூட அவர்களால் வாழமுடியும்
அவர்கள் உண்பது உறங்குவது போல் தோன்றினாலும் அது வெறும் காட்சியன்றி நிஜம் அல்ல
இந்த உன்னத ஞானிகளை வெட்டினால் கூட அவர்களுக்கு வலிக்காது, நேரூர் பிரம்மானந்தரும் ரமணரும் இதற்கு பெரும் உதாரணங்கள்
அப்படிபட்ட பெரும் ஞானநிலை அடையும் சித்தர்களுக்கு, உறக்கம், பசி இதர உணர்வையெல்லாம் ஒடுக்கி சமாதி நிலை எனும் பெரும் நிலை எட்டியவர்களுக்கு பிறப்பில்லை என்பது பாடலின் பொருள்