ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 08

“தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு”

இக்குறள் “தன்னை அறிந்து செறிந்து அடங்கி தான் அற்றால் பின்னை பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும்

தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு ஆத்மா என்பதை அறிந்து சிவனில் அடங்கி நான், எனது எனும் நிலையினை நினைப்பினை அகற்றினால் பிறப்பில்லா பெரும் நிலையினை அடையலாம் என்கின்றார் ஒளவையார்

இதைத்தான் ஞானம் அடைய “நான்” இறக்க வேண்டும் என சொன்னார் பகவான் ரமணர், நான் எனும் உடலை துறந்து தன் ஆத்மாவினை சிவ நினைவில் பூரணமாக கலப்பதே உன்னத தவயோக நிலையாகும்

தான், நான் என்பது அகங்காரம், நான் என்பது அகந்தை, தான் ஒரு ஆத்மா என்பதை உணர்தலே ஞானம், அகந்தை அழிய ஞானம் பிறக்கும்

அழியும் உடலை விடுத்து அழியா ஆன்மாவினை என்றும் நிலைத்த பரம்பொருளுடன் நினைவால் கலந்தால் பிறப்பற்ற நிலை அடையலாம்