ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 01
“தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி”
இக்குறள் “தோன்றியது எல்லாம் தொடக்கம் அறுத்து உய்வெளியாய் தோன்றியகால் தூய ஒளி” என பிரிந்து பொருள் தரும்
அதாவது இந்த உலகில் தோன்றிய எல்லாவற்றின் மூலம் எது என்பதை உணர்ந்தும், அப்படியே உள்ளத்தில் தோன்றும் எல்லா ஆசைகளின் மூலம் எது என்பதை உணர்ந்து அந்த ஆசைகளை களைந்தும் மனதால், மனவெளியில் அந்த ஆசை மயக்கங்களை எல்லாம் அகற்றி வெறும் வெளியாக வைத்து வெறுமையாக்கினால் அங்கு ஈசனின் ஒளி பெருகும் என்பது பாடலின் பொருள்.
மனதில் லவுகீக ஆசை உணர்ச்சிகள் பெருகிநிரம்பி இன்னும் பெருகிகொண்டே இருந்தால் அங்கு பரம்பொருளின் ஞானஒளி துலங்காது, மனம் வெறுமையானாலே அங்கு பரமனின் சுடர் ஒளிவிடும் என்கின்றார் ஒளவையார்.
இதைத்தான் “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” என்றார் மாணிக்க வாசகர்
ஆதிசங்கரர் தன் ஆன்ம போதனை நூலில் சொல்கின்றார்
“சர்வகம் சச்சிதாத்மனம் ஞானசக்ஷுர்நிரீக்ஷதே
அஞ்ஞானசக்ஷுர்நேக்ஷேத பாஸ்வந்தம் பானுமந்தவத்” என ஸ்லோகம் ஒன்றை சொல்கின்றார், அதற்கு பொருள் இப்படி வரும்
“சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப்
பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான்
ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர்
பானுவை அந்தன் போலப் பார்”
ஞானசூரியன் போல் மின்னும் பிரம்மத்தை ஞானகண்ணால் பார்க்கமுடியும் என்கின்றார் ஆதிசங்கரர், ஒளவை அந்த காட்சிக்குரிய வழியினை இக்குறளில் போதிக்கின்றார்