ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 03
“ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்”
இக்குறள் “ஆகமும் சீவனும் ஆசையும் தானாகி ஏகமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து வரும்
ஆகம் என்றால் உடல், சீவன் என்றால் உடலை இயக்கும் உயிராகிய ஜீவன், ஆசை என்பது ஒவ்வொருவரின் கர்மா அல்லது வாழ்க்கையினை செலுத்தும் ஆசை
ஆக இந்த உடலாகவும் அதிலிருக்கும் உயிராகவும், உடலுக்கும் உயிருக்குமான தொடர்பான அந்த ஆசையாகவும் விளங்குவது சிவம் என்கின்றார் ஒளவையார்
இது அப்படியே கீதையின் சாயலை ஒத்திருப்பதை காணலாம், எல்லாமுமாய அமைந்து எல்லாவற்றிலிரும் இருந்து எல்லாவற்றையும் இயக்குபவன் நான் என்பது இதுதான்
இங்கு காணும் எல்லாம் சிவம், காண்பவையில் இருக்கும் காணாதவை எல்லாம் சிவம், ஒவ்வொருவரின் குணாதிசயம் தேடல் என இந்த உலகை இயக்குவதும் சிவம் அதனால் எல்லாமே இங்கு சிவவடிவமே எல்லாமே சிவ இயக்கமே என்கின்றார் ஒளவையார்