ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 06

“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்”

இக்குறள் “ஒன்றே தான் ஊழி முதலாகி பல்லுயிருக்கும் ஒன்றாகி நிற்கும் சிவம்” என பொருள் தரும்

ஊழிக்காலம் முடிந்து உயிர்கள் தோன்றுவது சிவம் எனும் மூலத்தில் இருந்தே, அதனால் எல்லா உயிர்களிலும் இருப்பது அந்த ஒரே சிவனே என்பது பாடலின் பொருள்

ஊழிகாலத்தை பற்றி சொல்வது என்பது முடிவினை குறிப்பது, அதாவது சிவமே எல்லா யுகங்களின் தொடக்கமாகவும் இருக்கின்றார் முடிவுமாகவும் இருக்கின்றார், எல்லா உயிர்களும் அவரில் இருந்தே தொடங்குகின்றது அந்த சிவனிலே அடைகலமாகி ஒடுங்கி கலக்கவும் செய்கின்றது

கடலில் இருந்து உருவாகும் மேகம் மழையாக பொழிந்து அந்த ஆறுகள் கடலுக்கே திரும்புவது போல, சிவம் எனும் மகா சக்தியில் இருந்து தோன்றும் உயிர்கள் அவரிடமே திரும்புகின்றன

அந்த சர்வேசுவரனில் இருந்தே எல்லா உயிர்களும் உருவாகின்றன, அந்த உயிர்களிலே சிவமே நிற்கின்றது, எல்லா உயிரிலும் நிற்கும் சிவமானது அந்த உயிர்களின் காலம் முடிந்தபின் ஆற்றினை கடல் சேர்ப்பது போல் சேர்த்து கொள்கின்றது

இங்கு எல்லா உயிருமே சிவம், எல்லாமே சிவத்தில் இருந்து வந்தது அந்த சிவம் எனும் பரம்பொருளிலே முடிகின்றது