ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 09
“தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்”
இக்குறள் “தோற்றம் அது வீடாகி தொல்லை முதல் என்றாகி ஏத்தவரும் ஈசன் உளன்” என பிரிந்து பொருள் தரும்
அதாவது சிவனே மோட்ச வீடாகவும் விளங்குகின்றார், இந்த உலகத்தின் உயிர்களாகவும் அதன் கர்மாவாகவும் கர்ம இயக்கமாகவும் விளங்குகின்றான், எல்லா உயிர்க்கு மட்டுமல்ல அவற்றின் இயக்கம் சிந்தனை என எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது சிவனே என்கின்றார் ஒளவையார்
இக்குறள் ஒரு தேர்ந்த ஞானத்தை சொல்கின்றது, அதாவது இந்த உலகில் நடக்கும் நல்லது கெட்டது என எல்லாமே சிவனின் செயல், அவனே இந்த உலகை படைத்து உயிர்களையும் படைத்து அதனுள் இருந்து இயக்குகின்றான் என்கின்றது
இதனாலே உலகை முற்றும் உணர்ந்த ஞானிகள் இந்த உலகில் எதையும் வெறுக்க மாட்டார்கள், எதையும் மாற்றவும் முயற்சிக்கமாட்டார்கள் , யாருக்கும் கட்டளை இடவும் மாட்டார்கள்
காலத்தை யாரும் கட்டுபடுத்தமுடியாது என்பதை உணர்ந்த அந்த ஞானிகள் முழு அமைதியில் வெறும் பார்வையாளர்களாக இருந்து மட்டும் இந்த உலகை பார்த்துவிட்டு கடந்து செல்வார்கள்
காரணம் இங்கு நடக்கும் எல்லாமே சிவனின் இயக்கம் என்பதும் ஓவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும்
அந்த ஆதிமூலமே எல்லா உயிராகவும் உயிரின் இயக்கமாகவும் விளங்கும் என்பதை உணர்ந்தால் இங்கு எவ்வித சலனும், பேராசையும், ஆர்பாட்டமும், போட்டியும், போரும் எதுவும் இராது, ஆனால் அந்த ஞானம் ஞானியருக்கு மட்டுமே சாத்தியம்
அந்த ஞானத்தைத்தான் எல்லா உயிரிலும் இருந்து உலகின் எல்லா காட்சியினை நடத்துவதும் சிவமே, இங்கு மானிடர் வெறும் கருவிகளே என்பதை சொல்கின்றார் ஒளவை
தொல்லை என அவர் சொல்வது லவுகீக வாழ்வின் அனைத்து மானிட பலவீனங்களையும் சிக்கலையும் குறித்து சொல்வதாகும்
இதே குறள் கீதையிலும் ஒலிக்கும், மிக தெளிவாக ஒலிக்கும்
“அர்ஜூனா, எல்லா உயிரின் இயக்கம் நானே, நானே உயிர்களை படைத்து அதனில் இருந்து செயலாற்றுகின்றேன், இங்கு எல்லாவற்றையும் இயக்குபவன் நான்” எனும் அந்த வரியின் குறள் வடிவமே இந்த ஒளவை சொன்ன பாடல்