ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 02

“சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்”

இக்குறள் “சிந்தை சிவமாக காண்பவர் சிந்தையில் சிந்தித்திருக்கும் சிவம்” என பொருள்தரும்

எப்பொழுதும் சிவசிந்தனையிலே இருப்பவர் மனதில் சிவம் நிரந்தரமாக குடிவரும் என்பது பொருள், சதா சர்வகாலமும் சிவனில் நிலைத்திருக்கும் மனம் சிவனின் அம்சமும் தன்மையும் பெறுகின்றது, இந்த நிலையினை எட்டியவர்களே சித்தர்கள்

குருவழி எனும் அதிகாரத்தில் ஏன் இதனை ஒளவையார் சொல்கின்றார் என்றால், நல்ல ஆன்மீக குருவின் மனம் முழுக்க சிவனில் கரைந்திருக்கும், அந்த மனம் முழுக்க சிவம் எழும்பியிருக்கும்

அந்த குருவினை வணங்குதலும் சிவனை வணங்குதலும் ஒன்றே

இதனை பெருமிழலை நாயனார் வாழ்விலும் காணலாம், அவர் சிவனை வணங்கவில்லை மாறாக தன் குருநாதராக சுந்தர மூர்த்தி நாயனாரை மனதால் வணங்கி அவர் நினைவாலே வாழ்ந்து அப்படியே சிவநிலை அடைந்து கயிலாய பாக்கியமும் பெற்றார்

குருவில் சிவன் இருக்கின்றார், நல்ல குருவினை பணிந்து ஏற்றுகொண்டு அவரை வணங்குவதும் சிவனை வணங்குவதற்கு சமமே என்பது குறளின் பொருள்