ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 03

“குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்”

இக்குறள் “குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்கு அருவமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும்

சிவனையே குருவாக கொண்ட அகத்தியர், ரிஷிகள் போன்றவர்களை போல சிவனையே குருவாக கொண்டிராதவர்கள் அல்லது இந்த ரிஷிகள் ஞானிகளை போன்றோன்றோர்களை குருவாக கொண்டிராவர்களுக்கு சிவன் மறைவாய் நிற்பார், அவர்களால் சிவனை அடைய முடியாது என்பது குறளின் பொருள்

ஒரு நல்ல குரு , சிவனாக அல்லது சிவனில் நிறைந்த குரு ஒருவரால்தான் சிவனை அடையமுடியும் என்பது பாடலின் பொருள்

ஒளவையார் தன் குருவாக விநாயகரை கண்டவர் அதனால் தன் அகவலில் “குருவடிவாகி குவலயந்தன்னில்” என விநாயகனை போற்றி பாடுகின்றார்

இதனை திருமூலரும் சொல்கின்றார்

“சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.”

சிவத்தை அடைய ஞானத்தலைவனாகிய முருகப்பெருமானை அல்லது அவர் சீடர்களான முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை வழிபடுதலே முறை என்கின்றார் திருமூலர்

” “மூர்த்தி தளம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என்கின்றார் தாயுமானவர்

இக்குறள் சொல்வது இதுதான்

சிவனை குருவாக கொள்வது, அல்லது சிவனில் உதித்த முருகனையும் சிவனருளால் உருவான விநாயகரையும் வணங்குவது, அது அல்லாது சிவன் ஆட்கொண்ட ரிஷிகளை ஞானிகளை குருவாக ஏற்று பணிந்து சிரம் மேல் தாங்குவது அவைகளன்றி சிவனை உணரும் வழி இல்லை, ஞானம் அடையும் வழி இல்லை

நல்ல குருவினை அடையாளம் கண்டு பணிதலே ஞானம் அடையும் வழி என்கின்றார் ஒளவையார்