ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 07

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 07

“பிண்ட தினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு”

இக்குறள் “பிண்டத்தின் உள்ளே பேராது (பெயராத)இறைவனை கண்டு தான் அர்ச்சுக்குமாறு” என பிரிந்து பொருள் தரும்

அதாது பிண்டம் என்றால் உடல், அந்த உடல் அசையாமல் (பெயராமல்) அப்படியே அமர்ந்து இறைவனை கண்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது பொருள்

இந்த குறள் யோக நிலையில் பிண்டமாகிய இந்த உடலை அசைக்காமல் வைத்து புருவநெற்றியில் சிந்தையினை நிறுத்தி யோக உச்சியில் அந்த புருவ மத்தியில் சிவனை காணும் உன்னத நிலையினை விளக்குகின்றது

பத்மாசனத்தில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் இருந்து ஒரே சிந்தனையாய் இறைவனை தேடி ஞான கண்ணில் அவனை காணும் வகையினை போதிக்கின்றது இக்குறள்

ஆலயம் ஆலயமாக ஓடும் பக்தி யோகம் ஒரு பக்கமென்றால் ஆடாமல் அசையாமல் அமர்ந்து மனதால் இறைவனை தியானிக்கும் ஞான யோகம் இன்னொரு வகை

அந்த ஞான யோகத்தைத்தான் தன் இந்த குறளில் சொல்கின்றார் ஒளவையார்

இந்த தத்துவத்தை திருமூலர் போன்ற பல ஞானியரும் பல இடங்களில் சொல்கின்றார்கள், கீதையில் பகவான் கண்ணனே 5ம் அத்தியாயத்தில் சொல்கின்றான்

“அர்ஜூனா எவன் தன் ஆசை புலனை அடக்கி புலன் வகை ஆசைகளை வெளி தள்ளி புருவநெற்றியில் கவனத்தை வைத்து , மனம் புலன் அறிவு இவற்றிலெல்லாம் என்னையே நிரப்பி யோகநிலையில் தேடுகின்றானோ, அவன் யோகசித்தி பெற்று என்னை காண்பான்”