கண்ணனின் ஆசிபெற்ற கலைஞர்கள் …
எத்தனை நடிகர்கள் வந்தாலும், எத்தனை பேர் வேடமிட்டாலும் அந்த ராமராவினை போல ஒருவருக்கு கிருஷ்ணர் வேடம் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தாது.
பெயர்தான் “ராம”ராவ் மற்றபடி அவருக்கு வாழ்வு கொடுத்தது எல்லாம் கண்ணனின் வேடங்கள்.
கர்ணன் எனும் சிவாஜிபடத்தினை கண்டால், ராமராவ் கிருஷ்ணனாக வரும் காட்சிகள் கொஞ்சம்தான். ஆனால் அப்படத்தில் தனித்து நிற்பவர் சிவாஜி கணேசன் அல்ல, மாறாக ராமராவ் தான்.
அந்த படம் முடியும்பொழுது பார்பவருக்கு கர்ணன் மீதான பாதிப்பு நீங்கி, கண்ணன் மீதான அபிமானமே ஓங்கி நின்றது,
அது நிச்சயமாக ராமராவின் படம். அந்த கண்ணன் பாத்திரத்தினை அப்படி அட்டகாசமாக செய்திருந்தார் ராமாராவ், சாட்சாத் அதே புன்னகை, அதே பார்வை அதே தந்திர சிரிப்பு.
தலையினை ஆட்டி அவர் பேசும் பேச்சிலே கண்ணனை அப்படியே கண்முன் கொண்டுவந்திருந்தார்.
ஆந்திராவில் அவருக்கு ஒரு கிராமத்தில் சிலை வைக்கும் பொழுது, அவர் கிருஷ்ண கோலத்தில் நிற்கும் சிலையினைத்தான் கேட்டார்களாம்.
கிருஷ்ணன் இப்படித்தான் இருந்தான், இப்படித்தான் வெண்ணை உருட்டினான், இப்படித்தான் கீதையினை போதித்தான் என அழியா படங்களை கொடுத்தவன் ராஜாரவிவர்மன்.
அவன் தான் இன்று நாம் காணும் கண்ணனின் அற்புத ஓவியங்களை எல்லாம் நமக்கு கொடுத்தவன்.
ரவிவர்மனுக்கு பின் கண்ணனை நம் முன் காட்டியவர் என்.டி ராமராவ். அந்த அம்சம் அவருக்கு வாய்த்திருக்கின்றது.
பாடல்களில் பாரதியாரும், கண்ணதாசனும் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தனர்.
கண்ணா என பாரதியும், கண்ணதாசனும் உருகிய உருக்கமும், கொண்டாடிய கொண்டாட்டமும் கொஞ்சம் அல்ல..
கண்ணதாசனின் ஏராளமான பாடல்களுக்கு, தன் ஒரே பாடலான “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா..” மூலம் பதில் சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி
கோகுலாஷ்டமியில் இவர்களை போல பலர் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றார்கள்
ஆனாலும் ரவிவர்மனின் ஓவியமும், என்டிஆரின் குறும்பான கம்பீர முகமும் கூடவே கண்ணதாசனின் “ஆயர்பாடி மாளிகையில்” பாடலும் கோகுலாஷ்டமியினை மேலும் சிறப்புபடுத்துபவை
நிச்சயம் கண்ணனின் ஆசிபெற்ற கலைஞர்கள் அவர்கள்..