கண்ணெதிரே தோன்றினார் குண்டு கல்யாணம்…

சற்றுமுன் ஒரு கடைக்குள் நுழையும் பொழுது அவர் நின்றுகொண்டிருந்தார், அதே உருவம் அந்த உருவத்திற்கு ஏற்ற வட்ட முகம், எங்கோ பார்த்தது போல இருக்கின்றது என உற்றுபார்த்தால் தில்லு முல்லு ரஜினியுடனும், அதிமுக மேடையிலும் பார்த்தே அதே முகம். அந்த குண்டு கல்யாணம்

திரையில் பார்ப்பது போலவே இருந்தார், ஜெயலலிதா கட்சியில் ஏன் அவர் இணைந்தார் என்பதற்கு பல காரணங்களில் சில காரணம் உடனே விளங்கியது அதாவது அவ்வளவு கெத்தாக நின்றுகொண்டிருந்தார், பார்வை உட்பட‌

“அண்ணே.. அம்மா நம்மள இப்படி விட்டுட்டு போயிருச்சே அண்ணேன்ன். இனி தமிழ்நாட்டுக்கு யார் இருக்கா அண்ணே.. ” என கட்டிபிடித்து அழ ஆசைதான், ஆனால் பொதுஇடம் என்பதால் உணர்ச்சியினை கட்டுபடுத்த வேண்டியதாயிற்று..

மனிதர் வெகு பிசியாக போனை பார்ப்பதும், நூடுல்ஸ் பாக்கெட்டை புரட்டுவதுமாக இருந்தார், பார்த்து புன்னகைத்தால் புன்னகைத்துவிட்டு மறுபடியும் நூடுல்ஸ் பாக்கெட்டுக்குள் தலையினை விட்டு தேடினார்

அய்யா இப்பொழுது அரசியல் கூட்டங்களில் உங்களை காண முடியவில்லையே ஏன் என்றவுடன் சிலிர்ந்துவிட்டார், “இப்பொழுதும் பேசிகொண்டிருக்கின்றேன்..” என சொல்லிவிட்டு மறுபடியும் போனிலும் நூடுல்ஸிலும் புகுந்துகொண்டார்

அய்யா எந்த அணி தினகரனா பழனிச்சாமியா? அக்கட்சியின் எதிர்காலம் என்னாகும் என கேட்க வாய் வரை வார்த்தை வந்தது, கேட்டிருக்கலாம் இடம், பொருள், ஏவல் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை

ஆனால் இம்மூன்றையும் தாண்டி உருவம் என்றொரு விஷயம் உண்டல்லவா? ஏதும் கேட்டு, “என்னடா சொன்னாய். ஓங்கி அடித்தால்..” என கிளம்பிவிட்டால் என்ன செய்வது? அதனால் கேட்கவில்லை

கொஞ்சம் பேசியிருந்தால் போனவருடம் மோடி வந்து திறந்த விவேகானந்தர் சிலை பக்கத்தில்தான் இருக்கின்றது என சொல்லியிருப்பேன் , , அதன் பின் என்னை அள்ளிகொண்டுதான் சென்றிருப்பார்கள் என்பது தெரிந்ததால் நாவை மிக கஷ்டபட்டு கட்டுபடுத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்

அத்தோடு நகர்ந்தால் அவரோ போனில் மனைவியிடம் “அம்மா.. அம்மா சொல்லு அம்மா” என அதி தீவிரமாக ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டாக வாட்சப்பில் காட்டிகொட்டிருந்தார், “அம்மா இதாம்மா என அவர் கத்திகொண்டிருந்தது கடை முழுக்க எதிரொலித்துகொண்டிருந்தது

ஆக எப்பொழுதும் “அம்மா.. அம்மா” என கத்தவேண்டும் என்றொரு கட்டம் அவர் ஜாதகத்தில் நிரந்தரமாக அமைந்துவிட்டது …