கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா பரலோக மாதா
கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா.
அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை,
அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும்
தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை
முதலாவது பெஸ்கி எனும் இத்தாலியர் தமிழகம் வந்து, தமிழ் கற்று தன் பெயரை வீரமாமுனிவர் என மாற்றி, தேம்பவானி எழுதிய காமநாயக்கன் பட்டி எனும் ஊர்
அடுத்தது தென் நெல்லைமாவட்ட வடக்கன் குளம்
இந்த இரு ஊர்களிலும் மிக விமரிசையாக பரலோகமாதா விழா கொண்டாடபடும். காமநாயக்கன்பட்டி ஆலயம் தொன்மை மிக்கது,
ஆனால் வடக்கன்குளம் ஆலயம் அதனை விட தொன்மையானது.
இந்தியாவில் கோவாவிற்கு அடுத்து இரண்டாவது கட்டபட்ட கிறிஸ்தவ ஆலயம் என வரலாறு அதனைத்தான் சொல்கின்றது என்பார்கள். முன்பு தென்னக மக்களுக்கு தலமையகமாக அதுதான் விளங்கிற்று.
கோட்டார், தூத்துகுடி, பாளையங்கோட்டை மறைமாவட்டம் எல்லாம் பின்னாளில் உருவானது. அவற்றிற்கெல்லாம் தாய் போன்றது வடக்கன் குளம்.
வேளாங்கண்ணி ஆலயம் இதனை ஒப்பிடும்பொழுது காலத்தால் பிந்தியது.
வடக்கன் குளத்தில் கல்லால் ஆன பழம் ஆலயம் உண்டு, முழுக்க முழுக்க தமிழக பாரம்பரியபடி கல்தூண்களும் உத்திரமுமாக அது இன்றும் காட்சியளிக்கும். அப்படி ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை எங்கும் கண்டுவிட முடியாது, அவ்வாலயம் எவ்வளவு பழமையானது என்பதற்கு அந்த கல்தூணே சாட்சி.
மாதா காட்சிகொடுத்தது அந்த பழம் ஆலயத்தில்தான். தமிழகத்தில் தேவமாதா காட்சி கொடுத்த இடங்களில் அதுதான் பிரதானம்.
அதனை அடுத்திருக்கும் தற்போதைய ஆலயம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டபட்டது, வித்தியாசமான வடிவமைப்பு அது.
அரைவட்ட வடிவில் அமைக்கபட்ட ஆலயம், மையத்தில் மாதாவின் சொரூபம் அமைக்கபட்டிருக்கும். ஆலயத்தின் எப்பக்கம் இருந்து நோக்கினாலும் அச்சொரூபம் உங்களை நோக்கியது போலவே தோன்றும், அந்த அளவு அட்டகாசமாக கட்டியிருக்கின்றார்கள்.
மிக மிக அழகான ஆலயம் அது.
வடக்கன்குளம் பெரிய ஊர் என சொல்லமுடியாது, ஆனால் இந்த ஆலயத்தினையொட்டி பல கல்வி நிலையங்கள் எழும்பின, பாளையங்கோட்டையினை தமிழகத்து ஆக்ஸ்போர்டு என சொல்லும் முன்பே வடக்கன்குளத்தில் கல்வி நிலையங்கள் இருந்தன, அதுதான் முன்னோடி
யாழ்பாண தமிழர்களுக்கு நிகராக அன்றே வடக்கன் குளத்திலும் படித்த தலைமுறை உருவானது, 18ம் நூற்றாண்டிலே அம்மக்கள் ஆங்கிலேயருடன் பணிசெய்யும் பொருட்டு உலகின் எல்லா பாகத்திற்கும் சென்றனர்
இன்றும் அந்தநிலை அங்கு உண்டு, கல்வி அந்த ஊரினை அப்படி புரட்டிபோட்டிருக்கின்றது, இன்று பொறியியல் மருத்துவ கல்லூரி என அந்த பகுதி பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கின்றது.
அது பரலோக மாதாவின் அருளோ, அல்லது அந்த ஆலயம் அமைந்ததால் வந்த கல்வி புரட்சியோ ஆனால் அந்த ஊர் கல்வி நிலையங்கள் ஏராளமானோரை உருவாக்கியிருப்பது உண்மை, அந்த சேவை சாதாரணமானது அல்ல.
அப்பகுதியின் எல்லா மதத்தாரும், எல்லா சாதியினரும் அந்த ஊரால் பலன் பெற்றனர்.
அவ்வூரின் சகல வளங்களுக்கும் அந்த ஆலயமே பிராதனம்,இன்று அந்த ஊரில் திருவிழா.
பாரம்பரியம் உள்ள அந்த ஆலயத்திற்கும் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
அன்றே பெண்களுக்கும் உரிய கல்வி கிடைத்திருந்ததால் அவ்வூர் பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகம் என்பார்கள்.
உதாரணம் வேண்டுமென்றால், நம்ப வேண்டுமென்றால் நம் தமிழிசையினை பாருங்கள்.
அவரின் தாய் வடக்கன் குளத்துக்காரர்தான்.
பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிகொள்ளும் என்ற பிரார்த்தனை அவ்வாலயத்தில் இப்பொழுது ஒலித்து கொண்டிருக்கும்.
நாம் தமிழிசைக்கும் சேர்த்து வேண்டிகொள்ளலாம்.