கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்
இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்.
பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது.
கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் சொல்லபடுகின்றது
இந்து தர்மம் சொல்லுமல்லவா? பூலோகத்தில் நீ ஏதாவது நன்மை செய்திருந்தால் அவர்கள் உனக்காக பிரார்த்திப்பார்கள், நீ செய்திருக்கும் நல்ல காரியத்திற்காக அவர்கள் உன்னை நினைவு கூற கூற நீ சொர்க்கத்தில் மிகுந்த நலமாய் இருப்பாய் என சொல்லும் அல்லவா? அதே தத்துவம் தான்
பேரோளியான இறைவனோடு கலந்துவிட்ட ஆன்மாக்களை ஒளியோடு நினைவு கூறவேண்டும் என்ற தத்துவ அடிப்படையில் மெழுகுவர்த்தி ஏற்றபடுகின்றது
இந்நாளில் கிறிஸ்தவர்களும் மற்றவர்கள் பசியாற்றுவார்கள், இறந்தவர் நினைவாக ஒருவனுக்கு பசியாற்றினால், அந்த ஆன்மா மகிழ்வடையும், இவன் நினைவாக சிலர் பசியாறுகின்றார்கள் என்றால் இவன் ஏதோ உருப்படியாக வாழ்ந்திருக்கின்றான் என வானலோக அதிபதிகளும் மகிழ்வார்கள்
அந்த ஆன்மா இன்னும் மகிழும்
அதனால் இன்றும் கிறிஸ்தவ கிராமங்களில் இந்நாளில் கஞ்சி ஊற்றும் நிகழ்வுகள் உண்டு
இந்நாளை ஏன் கடைபிடிக்க வேண்டும்?
நலமாய் இருக்கும் ஒரு மனிதன் மருத்துவமனைக்கு சென்று ஒரு சுற்று சுற்றிவந்தால்தான் தான் எவ்வளவு ஆசீர்வாதம் பெற்றவன் என தெரியும்
மருத்துவமனை போதிக்கும் உண்மை அது
கல்லறைகளை சுற்றி வந்தால்தான், உலக வாழ்வு நிலையற்றது என்பதும், அகங்காரம் ஆணவம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும், வெறும் மண்ணாக போகும் வாழ்வு இது என்பதும் புரியும்
மனிதனின் அகங்காரம் ஒழியும்
அதனால் இந்நாள் கட்டாயம் கடைபிடிக்கபட வேண்டியதே, யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்
எங்கள் ஊரின் கல்லறை தோட்டம் நினைவுக்கு வருகின்றது, என் கையினை பிடித்து வளர்த்தவர்களும், என்னோடு வளர்ந்தவர்களும், என்னை தொலைத்தே தீரவேண்டும் என பாகுபலி நாசராக அலைந்தவர்களும் அங்குதான் உறங்குகின்றார்கள்
தியாகம், வஞ்சகம், நட்பு, பொதுநலம், காதல், துரோகம் என எல்லாவற்றிற்கும் அக்கல்லறையில் எடுத்துகாட்டுகள் உண்டு
ஒவ்வொரு கல்லறையும் மனிதனின் ஒவ்வொரு குணத்தையும் காட்டிகொண்டே நிற்கின்றன
இருக்கும் போது மோதிகொண்டவர்கள், நான் யார் என சீறியவர்கள் எல்லாம் அங்கே ஒன்றாகத்தான் உறங்குகின்றார்கள்
வாழும்பொழுது பார்க்க முடியா சமத்துவம் கல்லறையில் தெரிகின்றது
இவ்வுலகம் ஒரு வாடகை பூமி, வந்து தங்கிவிட்டு முதலாளி கிளம்ப சொன்னதும் கிளம்பவேண்டியதுதான் எனும் தத்துவத்தை போதிக்குமிடம் மயான பூமி,
அதனால்தான் இந்துக்கள் சிவன் சுடலையாக மயானத்தில் ஆடுவதாக சொல்லி வைத்தார்கள், அவ்வளவு பெரும் தத்துவத்தை சொல்லும் இடமது,
ஏன் சொன்னார்கள்? ஏ மனிதா இதுதான் வாழ்க்கை இதுதான் உண்மை, அந்த உண்மையே சிவம் அவரிடம் சரணடைந்துவிடு
ஒருவன் உலகில் தங்கி இருந்த தற்காலிக அடையாளம்தான் இக்கல்லறைகள்
அந்த எல்லா ஆத்துமங்களுக்காகவும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.
எல்லா ஆன்மாக்களுக்கும் இறைவன் இளைப்பாறுதல் கொடுக்கட்டும்
வாழ்வில் கண்டு, இனி காணமுடியா எத்தனையோ முகங்கள் நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன , குறிப்பாக சமீபத்தில் உதிர்ந்துவிட்ட அந்த மொட்டு
அதில் பெரும் சோகம் மனதை கனக்க செய்கின்றது.