கந்தர் அனுபூதி : 06
“திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்புமதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயாபரனே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்
“திணியான மனோ சிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே”
“திணியான மனோ சிலை” என்றால் மிக உறுதியான பாறை என பொருள், மிக மிக இறுக்கமான தன் பாறை மனதை பற்றி சொல்கின்றார் அருணகிரியார்
மேலும் தொடர்கின்றார் “மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்பு மதோ” அதாவது அந்த பாறையில் உன் பாதம்பட்டு தாமரை மலராதோ என்கின்றார், என் கல்போன்ற மனதில் உன் பாதம்பட்டு அங்கு தாமரை மலராதோ என மருகும் அருணகிரியார் அடுத்து பாடுகின்றார்
பாறையில் எதுவும் வளராது பாறை எதனையும் உள்வங்காது, பாறை எதனோடும் ஒட்டாது
குழைந்த நிலமே எல்லாவற்றையும் தன்னில் உள்வாங்கும், தன்னில் ஏற்று பதியவைத்து வளர்க்கும், இளகிய நிலமே விளைச்சலை கொடுக்கும்
கலமனதில் ஞானம் விளையாது, மனதை இளக வைத்து பதமாக்கி ஞானம் விளைய வழிசெய் முருகா என்கின்றார் அருணகிரியார்
அடுத்தவரி “பணியா என வள்ளி பதம் பணியும்” என வருகின்றது
பணி என்றால் கட்டளைக்கு பணிதல் ,வள்ளிக்கு முருகன் பணிந்து உனக்கு நான் என்ன பணிவிடைசெய்ய வேண்டும் என கேட்கின்றாராம்
(பொதுவாக இந்து மரபில் சிவன் சக்திக்கும் முருகன் வள்ளிக்கும் பணிவிடை செய்வதாக செய்திகள் உண்டு, அந்த பெரும் தெய்வங்களின் பணிவினையுன் அன்பையும் எடுத்துகாட்ட இப்படி திருவிளையாடல்கள் உண்டு
கிருஷ்ணன் ராதை பாதத்தை தாங்கினான் என்பதும் இந்த தத்துவமே
இவை அந்த பரம்பொருள் சக்தியின் தயையினையும் கருணையினையுன் அன்பையும் எடுத்துகாட்டும் விஷயக்கள்)
கடைசி வரி “தணியா அதிமோக தயா பரனே”. கொஞ்சமும் குறையாத மிக விருப்பமும் அன்பும் கொண்ட கருணையுள்ளம் கொண்டவனே என்பது பொருள்
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“வள்ளிக்கு தேடி வந்து பணிவிடை செய்யும் பெருமானே, இந்த மானுட பிறவிக்கும் கல்நெஞ்சம் அகன்று ஞானம் பிறக்க வழிசெய்ய மாட்டாயோ?” என இறைஞ்சுகின்றார்
இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தால் பொருள் இதுதான் என்றாலும் கொஞ்சம் ஆழமாக காணலாம்
இந்த அனுபூதி பாடலின் தொடக்கத்திலே பட்டர் பாடும் பாடல் வரி இங்கு கவனிக்கதக்கது, நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்” என சொல்லி பாடுகின்றார்
கல்மனம் கரையவேண்டும் கரைந்து அங்கு ஞானம் பெருக வேண்டும் என பாடலை தொடங்கினார்
அதே பாடலைத்தான் இங்கும் பாடுகின்றார்
கல்மனம் கரைந்தால் ஞானம் பெருகும் என்பதைத்தான் இப்பாடலின் முதல் வரியிலே கேட்கின்றார் அருணகிரியார் “திணியான மனோ சிலை மீது” என்பது அதுதான்
இங்கு சிலை என்பது மனதின் உருவம் என்ற வகையில் பொருளாகின்றது, மனம் எப்படியான பொருளில் இருக்கின்றது என்பதைத்தான் இங்கு நுணுக்கமாக சொல்கின்றார் பட்டர்
கல்மனம் என்பது அந்த காரணங்கள் நிரம்பியது, அவை மனம்,புத்தி,சித்தம், அஹங்காரம் என நான்காகும்
மனம் என்பது இங்கு எண்ணம், எண்ணம் அலைபாயும் தன்மை உடையது, உலகின் வேகமான விஷயம் மானிட எண்ணங்கள் , அது ஒலியினை விட ஒளியினை விட வேகமானது
சூரன் 108 அண்டங்களுக்கு தேரில் சென்றான் என்பது மனதின் வேகத்தை குறிப்பது, ஒரு இடத்தில் நில்லாததும் நொடியில் பல இடங்களுக்கு பயணிப்பதுமான தன்மை கொண்டது எண்ணங்கள்
அந்த எண்ணங்களை சிந்தனைகளை அடக்குவதும் சிரமம்
ஒரு விஷயம் இப்படி என தனக்கு தானே முடிவெடுத்து கொள்வதுதான் புத்தி, அது சரியா தவறா என அலசி ஆராயமால் மாயையில் மயங்கி தானே ஒரு வட்டமிட்டு பொருள் கொள்வது புத்தி
பல வகையான எண்ணமும் அது கொடுக்கும் ஆசையும் சித்தம்
தான் எனும் அகந்தையினை கொண்டு, நான் தான் எனக்கு என்னுடையது என அகந்தை கொண்டிருப்பது அகங்காரம்
கல்மனம் என்பது இந்த நான்கு அந்த காரணங்களையும் கொண்டிருக்கும், இது நிரம்பிய மனம் இறுக்கமான பாறை போன்றது அங்கு எதுவும் நல்ல குணமோ, இறை சிந்தனையோ வளராது.
இந்த இடத்தில்தான் இந்த மனதில்தான் முருகனின் பாதம் படவேண்டும், அவன் தன் மனதில் கால்பதித்து நின்றால் அந்த பாதம் பணிந்தால் தாமரை மலரும் என்கின்றார் அருணகிரியார்
எத்தனையோ மலர் இருக்கும்பொழுது தாமரையினை ஏன் சொன்னார்?
இந்து மரபில்தாமரை என்பது ஞான குறியீடு, அந்த ஞானம் முருகனால் அருளபடும் என்பதைத்தான் இந்த வடிவில் சொன்னார்
கல்மனம் என்பது அந்தகரணம் சூழ்ந்த மனம், மாயை நிரம்பிய மனதில் முருகபெருமான் பாதம் பட்டாலே கல்மனம் கரைந்து ஞானம் பெருகும் என்பதை சொல்கின்றார் அருணகிரியார்
முருகபெருமான் பாதம் பணிந்தால் எல்லா ஞானமும் வரும் என்பது பொருள்
அடுத்து வள்ளி பாதம் முருகன் பணிகின்றார் என்கின்றார், இது இருபொருளில் வரும்
முதலாவது முருகபெருமானின் மனைவி வள்ளி என்பவள் பூலோகவாசி, மலையில் வாழும் குறவர் இன பெண், அவளை முருகபெருமான் மணந்து கொண்டார் என்பது புராணம்
அதை இன்னொரு நோக்கில் கண்டால் மானிடரை நோக்கி வந்து அவர்களில் ஒருவரை தன்னோடு ஏற்ற முதல் தெய்வம் முருகபெருமானேதான்
இங்கு வள்ளி என்பவர் ஒரு தத்துவமாகின்றார், தெய்வம் இறங்கி வந்து மனிதரை தேர்ந்துகொண்டு ஆட்கொள்ளும் எனும் தத்துவம் அது
அவ்வகையில் மானிட ஆத்மா தனக்காக காத்திருந்தால் முருகன் ஓடிவந்து தன்னோடு சேர்த்து கொள்கின்றார் என்பதும் பொருள்
இரண்டாம் பொருள் ஜாதகரீதியானது, வள்ளி எனும் அந்த பெயர் சுக்கிரன் தொடர்புடையது, அறிவும் செல்வமும் சுக்கிரனின் அடையாளமாக கருதபடும்
முருகபெருமான் முன்னால் நம் அறிவும் செல்வமும் ஒன்றுமில்லை என பணிந்தால், அகங்காரம் நீக்கி அவரை பணிந்தால் அனுபூதி நிலை ஏற்படும் என்பது இன்னொரு பொருள்
செல்வமும் ஆசையும் வாழ்வும் வசதியும் செல்வாக்கும் அறிவும் எல்லாமே முருகன் என பணிந்து பணிசெய்தால் முழு ஞானம் வாய்க்கும் என்பது இன்னொரு பொருள்
இப்படி முருகபெருமானின் அருள் வேண்டி, கல் நெஞ்சமும் கரைய வேண்டி, தன் செல்வமும் ஆஸ்தியும் அறிவும் ஒன்றுமில்லை என உணர்ந்து அருள் வேண்டி பணிந்தால் என்னாகும் என்பதைத்தான் அடுத்த வரியில் சொல்கின்றார்
“தணியா அதிமோக தயா பரனே” என்கின்றார்
பரம் என்றால் பரந்து விரிந்த மிக மிக உயரமான என பொருள், தயா என்றால் கருணை
தணியா அதிமோக என்றால், கொஞ்சமும் குறைவில்லாமல் ஒரே ஒரு எண்ணமாக அதையே வேகமாக செயல்படுவது என பொருள்
மோகம் என்றால் மனதை ஒரே இடத்தில் குவித்து முழு விருப்புடன் செயலாற்றுவது என்பதாகும், அங்கு வேறு சிந்தனை எழாது, மனம் முழுக்க அங்கேதான் குவிந்திருக்கும்
அந்த கொஞ்சமும் குறையாத தன்மையினை, வேகமாக எழும் அந்த செயலை இங்கு “தணியா அதிமோக” என்கின்றார் அருணகிரியார்
வள்ளிமேல் முருகன் தீராகாதலும் மோகமும் கொண்டிருக்கின்றான் என்பது மானிட ஆத்மாக்களை பரம்பொருள் அந்த அளவு நேசிக்கின்றார் விரும்புகின்றார் என பொருளாகின்றது
அதாவது அடியார்கள் தன்னை பணிந்தால் கொஞ்சமும் குறையாத வேகத்தில் ஒரே நோக்கமாக வந்து முருகன் அருள்பாலிப்பான் என்பது பொருள், மிக விரைவாக வந்து பக்தர்களை கைதூக்கி நிமிர்த்தி ஞானம் அருள்வான் என்பது பொருள்
இந்த பாடலில் அனுபூதி நிலை எப்படி வரும் என்பதை விளக்குகின்றார் அருணகிரியார்
அனுபூதி நிலை எனும் நிறைவு நிலை வரவேண்டும் என்றால் கல் மனது இலகுவான தாமரை போல மாற வேண்டும், அதற்கு முருகபெருமானின் அருள் வேண்டும்
அகங்காரமும் அந்தகாரணங்களும் நிரம்பிய மனம் கல் போன்றது, அந்த கல்லில் எதுவும் வராது, முருகபெருமானின் கருணை அந்த கல்லை இளக செய்து தடாகமாக்கி ஞான தாமரை மலர செய்யும் என சொல்கின்றார் அருணகிரியார்
அதுவும் வள்ளியினை தேடி வந்த முருகன் போல மானிடரை தேடிவந்து ஞானம் கொட்டுவான் முருகன் என்பதுபொருள்
மானிட ஆசைகள் செல்வம் அறிவு எல்லாம் அந்த பாதத்தில் கொட்டினால் ஞானம்பெருகும், மானிட சிந்தனையும் அறிவும் செல்வமும் ஒன்றுமில்லை என உணர்ந்து அவன் பாதம் அண்டினால் ஞானம் இன்னும் பெருகும்
தன்னை அண்டிய அடியாருக்கு முருகன் தாமதிப்பதில்லை, காத்திருக்க வைப்பதுமில்லை, குறையாத வேகத்துடன் தன் அடியார் ஞானம் பெற்று சித்தியடை வேண்டும் என்ற வேகத்துடன் அடியாரின் ஆன்மா மேலான மோகத்துடன் பெரும் கருணையும் தயையும் கொண்ட அந்த முருகபெருமான் வேகமாக வந்து அரவணைக்கின்றான், அவன் அரவணைக்கும் அந்நிலைதான் அனுபூதி நிலை எனப்படும் என்கின்றார் அருணகிரியார்
அந்த கரணம் எனும் மனம், புத்தி, சித்தம் , அகங்காரம் என நான்கும் நீங்கிய மனம், தான் அனும் அகந்தை நீங்கிய மனம் தாமரை போல ஞானம் மலரும் இடம் முருகபெருமானால் அது சாத்தியம் எனும் அருணகிரிநாதர், மானிட தன் அறிவு செல்வம் அகந்தை எல்லாம் நீங்கி முருகனிடம் பணிந்தால் முருகன் ஓடிவந்து அணைப்பான் என சொல்லும் அருணகிரிநாதர் இங்கு ஒரு யோக தத்துவத்தையும் சொல்கின்றார்
வள்ளி என்பவர் மானிட அடையாளம் என்பதை முன்பே பார்த்தோம், வள்ளிக்கு முருகன் பணிவிடை செய்கின்றான் என்பது ஆத்மாவின் முக்தி நிலைக்கு முருகன் உதவுகின்றான் என பொருளாகும்
அப்படி ஆத்மா முருகபெருமானை குறித்து யோகத்தில் நிலைக்கும் பொழுது, மானிட வள்ளி வானுயர் முருகனை நோக்கி நின்றது போல மனம் முழுக்க முருகபெருமானில் லயிக்கும் பொழுது, குறையாத வேகத்துடன் மூலாதாரத்தில் இருந்து எழும் சக்தி ஆயிரம் இதழ் கொண்ட தாமரை எனும் துரிய சக்கரத்தை அடையும், அதுவும் தணியா வேகத்துடன் மோகத்துடன் அடையும்
அந்நிலையில் மனம் அகந்தைநீங்கி ஞானத்தில் முருகபெருமானுடன் கலக்கும், அந்த நிலையே முழு அனுபூதி நிலை என்றாகும் என்கின்றார் அருணகிரியார்
அகந்தையும் ஆசையும் மாயையும் மானிட குணங்களும் கடந்து, அவற்றை ஒழித்து கல்செஞ்சில் இருந்து ஞான நிலைக்கு மனதை கொண்டுவந்தால் அந்த மனம் முருகபெருமானோடு முழுக்க கலந்தால் அதுதான் அனுபூதி நிலை என்கின்றார் அருணகிரியார்
அகந்தை நீக்குதலும், அறிவும் செல்வமும் கொண்ட எல்லா அகந்தையினையும் நீக்கி முருகனை சரணடைவதே ஞானம் கொடுக்கும், அந்த ஞானம் முழு அனுபூதி எனும் நிறைவான பேரானந்த நிம்மதியினை கொடுக்கும் என்பதே பாடலின் பொருள்
சுப்பிரமணிய புஜங்கத்தின் எட்டாம் பாடல் இப்படி சொல்கின்றது
“லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் ஸுரேசம்”
இது முருகபெருமான் வள்ளியோடு பள்ளிகொள்ளும் கோலத்தின் அர்த்தஜாம பூஜையின் பொழுது பாடபடும் ஸ்லோகம்
அதன் பொருள் இதுதான்
ஸ்வர்ணகேஹே’ தங்க கற்களால கட்டின ஒரு அறை.
‘லஸத் ஸ்வர்ணகேஹே’, அது ஒளி விடுகிறது.
‘ஸுமஸ்தோம’ – நல்ல வாசனை பூக்களால் ‘ஸஞ்ச்சன்ன’ – அலங்கரிக்கப்பட்ட ‘மாணிக்ய மஞ்சே’ மாணிக்க கட்டில். அதைச் சுற்றி தேவலோக பாரிஜாத மலர்கள் அலங்கரிகபட்டிருக்கின்றன
‘ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்’, ஆயிரம் சூரியர்களுக்கு சமமான ப்ரகாசத்தோடு ‘ஸமுத்யதி’ பகவான் விளங்குகிறார்.
இந்த கோலத்தை தரிசித்தால் ‘ந்ருணாம் காமதோஹே’ மனிதர்களுக்கு எல்லா விதமான கர்ம வினைகளும் பூர்த்தியாகும். ‘ஸதா பாவயே கார்த்திகேயம் சுரேசம்’ , கார்த்திகை பெண்களால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த முருகப் பெருமானை ‘ஸுரேஷம்’ தேவர்களுக்கெல்லாம் தலைவனான அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியை ‘ஸதா பாவயே’ – நான் எப்போதும் த்யானிக்கிறேன் என பொருள்படும்
அதாவது மானிட ஆத்மாவும் பரமாத்மாவும் சங்கமிக்க்கும் நிலையில் பாடபடும் ஸ்லோகம்
இன்னும் ஒரு ஸ்லோகம் அந்த சுப்பிரமணிய புஜங்கத்தில் உண்டு
“ரணன்மஞ்ஜீராப்யாம் லலிதகமனாப்யாம் ஸுக்ருதினாம்
மனோவாஸ்தவ்யாப்யாம் மதித திமிராப்யாம் நகருசா |
நிதேயாப்யாம் பத்யா நிஜசிரஸி காமாக்ஷி ஸததம்
நமஸ்தே பாதாப்யாம் நலிணம்ருதுலாப்யாம் கிரிஸுதே”
“நிதேயாப்யாம் பத்யா நிஜசிரஸி காமாக்ஷி ஸததம்” காமாட்சி பாதத்தை சிவன் தாங்குகின்றார்
‘நிதேயாப்யாம் பத்யா நீஜ சிரஸி’ – உன் பதி தன்னுடைய சிரசில் இந்த பாதங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார்
பதியின் பாதத்தை சுமக்கும் கந்த பெருமானே, இந்த ஆத்மாக்களின் ஏக்கத்தையும் போக்குவாயோ என கெஞ்சும் ஸ்லோகம் அது
அந்த ஸ்லோகத்தின் வரிதான், அந்த ஸ்லோகத்தின் தழுவல்தான் இங்கு இப்பாடலாக அருணகிரி நாதரால் பாடபட்டிருக்கின்றது
தெய்வங்களின் சக்தியும் அவற்றின் தாத்பரியமும் மானிட அறிவால் புரிந்து கொள்ளமுடியாதது என்பதால் மானிடன் புரியும் படி மனைவி, கணவன் உறவுகளையும் அந்த பாச பந்த பிணைப்புக்களையும் சொன்னது இந்துமதம்
இது வெறும் பள்ளியறை காட்சி அல்ல, அந்த அவசியம் தெய்வங்களுக்கும் அல்ல
இது ஜீவாத்மாவினை பரமாத்மா தேடிவரும் காட்சி, அந்த பரமாத்மாவினை கண்டு ஜீவாத்மா மகிழ்ந்து கலந்து பெறும் அந்த பேரானந்த தத்துவம், ஆத்மாவின் நிறைவும் களிப்புமான அந்த அதி உன்னத ஆன்மீக நிலை
முருகபெருமான் வள்ளியினை தேடி வந்தான் என்பதும் வள்ளியினை மணந்தான் என்பதும் பூமிக்கும் முருகபெருமானுக்குமான தொடர்புகளை குறிப்பது, ஒரு இணைப்பை குறிப்பது
ஒரு விஷயங்களை இணைப்பதுதான் இணைக்கும் விஷயமாக இருக்க முடியும், இரு தொடர்பற்ற விஷயங்களை இணைப்பதுதான் இணைப்பு
பரம்பொருள் எனும் மூல சக்தியும் ஜீவாத்மா எனும் மனிதனையும் இணைக்கும் தத்துவம் முருகன்
இன்றைய விஞ்ஞான முடிவுகளை கொஞ்சம் இதனோடு பொருத்திபார்க்கலாம்
அதாவது இந்த பூமி தனியாகவும் சூரியன் தனியாகவும் இன்னும் கோள்களும் இவற்றை இயக்கும் சக்தி தனியாக இருப்பது போல தோன்றினாலும் எல்லாவற்றையும் இணைப்பது கண்ணுக்கு தெரியாத இழை என்கின்றது விஞ்ஞானம், அதனை கருப்பு சக்தி அறிந்துகொள்ளமுடியா சக்தி என்கின்றது அது
அந்த அறிந்துகொள்ள முடியாத பெரும் சக்தியினையே முருகபெருமான் வடிவில் கண்டது இந்துமதம்
பூமிக்கும் மூலபரம்பொருளுக்குமான இணைப்பு சக்தியே முருகன், வள்ளியினை அவர் தேடிவந்து தன்னோடு சேர்த்தார் என்பது பூலோக பரம்பொருளுக்கான இணைப்பே
முருகபெருமான் தன் பாதத்தை பூமியில் வைத்து மானிடர்களை பரம்பொருளோடு இணைத்து கொண்டிருக்கின்றார் அவரை பணிந்தால் எல்லா நலமும் கூடும் என்பதே பாடலின் நுணுக்கமான மறைபொருள்