கமலஹாசன்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை என ஆகிவிட்டது, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, அதில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன்
சீனிவாச கமலஹாசன்.
கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார்.
6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர்.
பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார்
இந்த இடைகாலத்தில் அவர் நடனம்,இயக்கம்,எடிட்டிங்,கவிதை,பன்மொழி என சகலத்தையும் கற்று தேர்ந்தார்.
நடன இயக்குனராக,எடிட்டராக, அல்லது ஏதோ ஒரு வடிவத்தில் சினிமாவில் இருக்க போராடியவர்.
சாருஹாசன் போன்ற மென்மையான குரல் உடைய கமலஹாசன் தன் குரலை கூட கடினமாக மாற்றினார், அந்த அளவு உழைப்பு
பாலசந்தர் படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என காட்டின, பால சந்தரின் கோட் சூட்டோ அல்லது பாரதிராஜாவின் கோவணமோ அவர் அவர் பாணியில் பட்டையை கிளப்பியிருப்பார்,
குடிகாரனோ, மன்மத லீலை பாத்திரமோ, சிவப்பு ரோஜாவோ,அல்லது மனநோயாளி வேடமோ, எந்த மொழியோ அல்லது தமிழின் பல வடிவமோ அவரால் மட்டுமே அவ்வளவு அழகாக வெளிக்கொண்ரமுடியும். சகல வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்து குவித்தவர்
சும்மா சொல்லகூடாது மனிதர் அழகர்தான், அதனிலும் அழகு அவரின் நடிப்பு.
அந்த சலங்கை ஒலி நடனம் இனி ஒருவர் அவ்வளவு நளினமாக ஆடிவிட முடியுமா? பரத முனிவர் வந்தால் கூட முடியாது.
கிட்டதட்ட 1985க்கு முன்னாலே அவரின் ஒரு சுற்று முடிந்தது, அதன் பின் வந்ததெல்லாம் பரிசோதனை படங்கள், ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக முயற்சி செய்வார். பல வெற்றிபெற்றன பல சறுக்கின.ஆனால் மனிதர் கொஞ்சமும் அசரவில்லை.
சினிமாவில் சம்பாதித்து எஸ்டேட்,மண்டபம்,அரசியல் என குவிப்பவர்கள் மத்தியில் பணத்தை மறுபடியும் சினிமாவில் முதலீடு செய்பவர் அவர் மட்டுமே, கேட்டால் சொல்வார்
“விவசாயி வேறு என்ன செய்வான்”
திறமையான டைரக்டர்கள் கையில் கிடைத்தபொழுது அற்புதமான படங்கள் கிடைத்தன, பாலசந்தரின் முத்திரைகள்,16 வயதினிலே
உச்சமாக “நாயகன்”, இனி ஒரு இயக்குநர் மணிரத்தம் அளவிற்கு கமலஹாசனை பயன்படுத்தமுடியும் என எதிர்பார்க்கமுடியும்?,
அப்படியே வரதராஜ முதலியாரை நிறுத்தினார், உச்சமாக இந்தியன் தாத்தா.
நிச்சயமாக சொல்லலாம், சிவாஜிகணேசனுக்கு பின் தமிழக சினிமாவில் நடிப்பிற்கோர் அடையாளம்.
(எத்தனையோ படங்களில் கமலஹாசன் நடித்திருந்தாலும் அவர் தனித்து தெரிவார், அவரை விட்டு கண்கள் அகலாது
ஆனால் சிங்காரவேலன், மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா போன்ற படங்களில் கமலஹாசனை மறக்க முடியாது
ஆம் அதில் மட்டும்தான் மங்கலாக தெரிவார், காரணம் குஷ்பு)
நல்ல நடிகர், ஆனால் தமிழக ரசனையை விட மேம்பட்ட ரசனையுள்ள இயக்குனர், அதனால்தான் மிக சிறந்த படங்களான ஹேராம்,விருமாண்டி போன்றவை அதன் உயரத்தை எட்டவில்லை. காரணம் அவரின் ரசனை சராசரி தமிழக ரசனை அல்ல.
நீங்கள் உளவுதுறை பிரியராக இருந்தால் கொண்டாடும் படம் விக்ரம், 1980களின் காலப்படி அது மிகமிக விறுவிறுப்பான படம், சுஜாதாவும் கமலஹாசனும் இணைந்து மிரட்டியது, ஆனால் பெரிய வெற்றி இல்லை. ஏன் என்றால் அதுதான் தமிழ்நாடு. விஸ்வரூபத்தில் அதைவிட அழகாக ஆப்கன் நிலமையும் அல்கய்தா அமைப்பையும் காட்டினார்.
12 வயதிலிருந்து அவர்மேல் பொழியபட்ட அவமானங்கள் அதிகம், இன்றுவரை அடிக்கடி சர்ச்சையில் அடிபடுவார். ஆனால் ஏதும் அவரை சினிமாவிலிருந்து பிரிக்கவில்லை.
நடிப்பை நடிப்பாக மட்டும் பார்த்த நடிகர்கள் குறைவு, அதிலும் நடிப்பினை இறுதிவரை நேசித்தவர்கள் குறைவு,
அவர்களில் எம்.ஆர் ராதா முக்கியமானவர். சினிமா வாய்ப்புகள் குவிந்தபொழுதும் நாடகங்களில் நடித்து கொண்டு நடிப்பினை நிரூபித்தவர். ஆர்.எஸ் மனோகர் போன்ற அபூர்வங்களும் உண்டு
அவர்களின் கடைசி வாரிசு கமலஹாசன்
நிச்சயம் அவரை சினிமாவில் யாரும் உருவாக்கவில்லை, அவராகத்தான் உருவானார், ஏதோ ஒரு இடத்தில் இருக்க அவர் போராடியபொழுதுதான் பாலசந்தர் அவரை நடிகராக்கினார்
நடிகர் என்பது அவரின் பல முகங்களில் ஒன்று, அது மட்டும்தான் உலகிற்கு தெரிகின்றது, ஆனால் அவருக்கு சினிமாவில் எல்லா விஷயமும் அத்துபடி என்பது மறுக்கமுடியா விஷயம், பாடுவது உட்பட.
எத்தனையோ தொழில்நுட்பங்களையும், பரிசோதனைகளையும் அவர்தான் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.
ஒரு விஷயம் கமலஹாசனை பற்றி சொல்லவேண்டும், அவரின் சில சர்ச்சைகளுக்கு அதுதான் காரணம்
காலத்தால் முந்திகொள்வார் அவர், அதாவது தமிழகத்திற்கும் அவருக்கும் கிட்டதட்ட 30 ஆண்டுகால சிந்தனை இடைவெளி, அவரின் சர்ச்சைகளுக்கும் அவரை சிலர் புரிந்துகொள்ள முடியாயாமல் போனதற்கும் அதுதான் காரணம்
உதாரணம் விகரம் படம், அட்டகாசமான படம். அன்று தமிழக மக்களுக்கு உளவுதுறை பற்றிய அறிவோ புத்தகமோ இல்லை, படம் தோற்றது
அப்படம் 2001க்கு பின் வந்திருந்தால் பெரு வெற்றி பெற்றிருக்கும்.
1989களில் புன்னகை மன்னன் படத்திலே ஈழ சிக்கலின் உண்மை தன்மையினை பட்டும் படாமல் சொன்னவர் கமலஹாசன், சிலர் சீறினார்கள் பின்னாளில் அது உண்மையாயிற்று
ஹேராம் படம் இப்பொழுது வரவேண்டியது, காந்தி அதிகமாக விமர்சிக்கபடும் இந்த நேரம் வந்து செருப்படி கொடுக்கவேண்டிய அப்படம் காலத்தால் முந்திகொண்டது
ஏன் முத்த காட்சிகள் கூட இன்று சர்வ சாதாரணம். இப்படி ஏராளமான விஷயங்கள் உண்டு.
நிச்சயம் கமல் அறிவாளி, அவர் முன் கூட்டியே சொல்லபடும் விஷயங்களை புரிந்துகொள்ளாமல் அவரை விமர்சிப்பார்கள். அவர் சொன்னது சரி என உணரும் காலங்களில் அவரை மறந்திருப்பார்கள்.
அப்படி இப்பொழுது தமிழக அரசியலில் அவரால் சில சலசலப்பு ஏற்படுகின்றது, அவர் முன்கூட்டியே சொல்கின்றார் வழக்கம் போல பலருக்கு புரியவில்லை
ஆனால் இன்னொரு காலத்தில் உணர்ந்துகொள்வோம்
அவரின் அரசியல் சர்ச்சையினை விடுங்கள், வீர தமிழர்களில் ஒருவரான மாவீரன் மருதநாயகத்தை திரைபடமாக்கும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை
அம்முயற்சி பெற்றிபெறட்டும்
தமிழகத்தின் தனிபெரும் கலைஞானியான, சினிமாவில் ஒரே ஆல்ரவுண்டர் ஆன கமலஹாசனின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்கள்
அவரிடம் நாம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் , எம்.ஆர் ராதா ராமசந்திரனிடம் சொன்ன அந்த ஒன்றுதான் “டேய் ராமசந்திரா உனக்கு எதற்கு அரசியல்?” என்றார் ராதா
நாமோ கமலஹாசனை கைகூப்பி கேட்கின்றோம்
அய்யா அரசியலில் சிக்கி சீரழிய, அரசியலை கெடுக்க ஆயிரம்பேர் உண்டு, ஆனால் சினிமாவிற்கு உங்களை விட்டால் யாருண்டு
சிங்கத்து பால் தங்க தட்டிலேதான் வைக்கபட வேண்டும், காக்கைகளை விரட்ட கருங்கல் போதும் வைரக்கல் வேண்டாம்
அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் அழகும் சிறப்பும்
அந்த அரசியலுக்கு நீங்கள் செல்லவே வேண்டாம், தயவு செய்து நல்ல நடிகனாகவே இருந்துவிடுங்கள்
தமிழகம் உங்களிடம் எதிர்பார்ப்பது அதுதான், மருதநாயகமாக உங்களை எதிர்பார்க்கின்றோமே அன்றி மதுரை பக்கம் பக்கம் புலம்பும் அரசியல்வாதியாக அல்ல‌
தயவு செய்து நடிகனான தொடருங்கள், உங்கள் உண்மை ரசிகர்கள் விரும்புவதும் அதுதான்
நீங்கள் ஆயிரம் பிறை கண்டு பல்லாயிரம் வேடம் நடிக்கவாழ்த்துக்கள்

[ November 7, 2018 ]

Image may contain: 1 person, smiling