கமலஹாசன் பிறந்த நாள்
தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ கலைஞன்
சீனிவாச கமலஹாசன்.
6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர்.
பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜம்பபான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). ஒருவர் கண்ணை உருட்டியே நடிப்பார், இரு கண்களும் ஒவ்வொரு நடிப்பு கொடுக்கும் வியப்பு அவர், இன்னொருவர் கையை மட்டும் உயர்த்தி நடிப்பார், அது நடிப்பென்று நாம் நம்பிதொலைக்கவேண்டும்
.
இந்த இருவரும் கொடிகட்டி பறந்த காலத்தில் இருவர் மடியிலுமே வளர்ந்த குழந்தை கமலஹாசன், இருவரின் பாதிப்பும் இன்றளவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவரிடம் இன்றளவும் உண்டு அரசியலை தவிர
இருவரும் கொடிகட்டி பறந்த காலத்தில் கமல் என்ன செய்துகொண்டிருந்தார்??
இந்த இடைகாலத்தில் அவர் நடனம்,இயக்கம்,எடிட்டிங்,கவிதை,பன்மொழி என சகலத்தையும் கற்று தேர்ந்தார்.
அதனால்தான் அவரோடு குழந்தை நட்சதிரங்களாக மின்னிய எல்லோரையும் விட அவர் மிஞ்சி நிற்கின்றார். நிறைய பேர் நடித்தார்கள், இருவரே இறுதியில் முத்திரை பதித்தார்கள் ஒருவர் கமல் இன்னொருவர் ஸ்ரிதேவி.
உதாரணமாக நடிகை ஷாம்லியினை செல்லலாம், அஞ்சலி படம் வரும்பொழுது வருங்கால ஸ்ரிதேவி ரெடி என்றார்கள், துர்கா படம் வரும்பொழுது லேடி கமல் ரெடி என்றார்கள்
இன்று அவரால் பிரகாசிக்கமுடியவில்லை காரணம், இடைப்பட காலம் அப்படி அவரைபோன்றவர்கள் சினிமாவிலிருந்து விலகி பின் வந்து போராடி பலர் காணமலே போயினர்.
கமல் நிலைத்திருக்க அவரின் போராட்டமே காரணம்
நடினகனாக கூட அல்லம் நடன இயக்குனராக,எடிட்டராக, அல்லது ஏதோ ஒரு வடிவத்தில் சினிமாவில் இருக்க போராடியவர், பின்னாளைய பாலசந்தர் படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என காட்டின, பால சந்தரின் கோட் சூட்டோ அல்லது பாரதிராஜாவின் கோவணமோ அவர் அவர் பாணியில் பட்டையை கிளப்பியிருப்பார்.
குடிகாரனோ, மன்மத லீலை பாத்திரமோ, சிவப்பு ரோஜாவோ,அல்லது மனநோயாளி வேடமோ, எந்த மொழியோ அல்லது தமிழின் பல வடிவமோ அவரால் மட்டுமே அவ்வளவு அழகாக வெளிக்கொண்ரமுடியும். சகல வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்து குவித்தவர்
சும்மா சொல்லகூடாது மனிதர் அழகர்தான், அதனிலும் அழகு அவரின் நடிப்பு.
அந்த சலங்கை ஒலி நடனம் இனி ஒருவர் அவ்வளவு நளினமாக ஆடிவிட முடியுமா? பரத முனிவர் வந்தால் கூட முடியாது. பெரும் அழகியான ஜெயபிரதாவின் புன்னகை முன்னால் அதன் அழகு கொஞ்சம் குறையத்தான் செய்தது
பிரம்மனின் பெரும் அழகு படைப்பு ஜெயப்பிரதா, கமல் மனித குலத்தின் கலை வடிவம், பின் தங்கியதில் ஆச்சரியமில்லை
கிட்டதட்ட 1989க்கு முன்னாலே அவரின் ஒரு சுற்று முடிந்தது, அதன் பின் வந்ததெல்லாம் பரிசோதனை படங்கள், ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக முயற்சி செய்வார். பல வெற்றிபெற்றன பல சறுக்கின.ஆனால் மனிதர் கொஞ்சமும் அசரவில்லை.
திறமையான டைரக்டர்கள் கையில் கிடைத்தபொழுது அற்புதமான படங்கள் கிடைத்தன, பாலசந்தரின் முத்திரைகள்,16 வயதினிலே உச்சமாக “நாயகன்”, இனி ஒரு இயக்குநர் மணிரத்தம் அளவிற்கு கமலஹாசனை பயன்படுத்தமுடியும் என எதிர்பார்க்கமுடியும்?, அப்படியே வரதராஜ முதலியாரை நிறுத்தினார்,
உச்சமாக இந்தியன் தாத்தா.
நிச்சயமாக சொல்லலாம், சிவாஜிகணேசனுக்கு பின் தமிழக சினிமாவில் நடிப்பிற்கோர் அடையாளம்.
நல்ல நடிகர், ஆனால் தமிழக ரசனையை விட மேம்பட்ட ரசனையுள்ள இயக்குனர், அதனால்தான் மிக சிறந்த படங்களான ஹேராம்,விருமாண்டி போன்றவை அதன் உயரத்தை எட்டவில்லை.
காரணம் அவரின் ரசனை சராசரி தமிழக ரசனை அல்ல.
இயக்குநகராக அவர் இயக்கிய சில படங்களை ரசிக்க பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும், அதாவது வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், பெரியாரிசம், நிகழ்கால அரசியல், படம் எடுக்கும்பொழுது நடந்த அரசியல் சர்ச்சை இன்னும் ஏராளமான விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்
அப்படி அந்த விஷயங்கள் உங்கள் மனதில் இருந்தால் அவர் இயக்கிய படங்களின் ரசனை புரியும்
இந்திய மதவெறி சர்ச்சைகளையும், இந்திய பாகிஸ்தான் பிரிவினையினையும் கமலின் ஹேராம் காட்டியது போல இன்னொரு படம் சத்தியமாக விளக்க முடியாது
சிவபெருமானே சினிமாவில் தமிழில் பேசும்போது, காந்தி தமிழில் பேசினால் என்ன? என எதிர்பார்த்த தமிழ் சமூகம் அதனை புறக்கணித்திருக்கலாம்
ஆனால் 1945களில் தொடங்கிய மத கலவரம், 1998களில் நடப்பது போல காண்பித்து, அந்த வயதான முதியவர் “இன்னுமாடா..இன்னுமா நிறுத்தல” என சொல்லும்பொழுது தேசபற்றோர் வாய்விட்டு அழாமல் இருக்க முடியாது
கிராமத்து வஞ்சனைகளை, உறவாடி கெடுக்கும் கொடுமைகளை நீங்கள் அனுவத்திருந்தால் “விருமாண்டி” மிக சிறந்த படமாக தெரியும், ஒரு நகரவாசி இந்த அளவு கிராம வஞ்சகங்களை எப்படி சிந்தித்திருக்கின்றார் என்றால் கமலஹாசனின் திறமை புரியும்
தேவர் மகனை பார்த்திருந்தால் பங்காளிகள் பிரச்சினையும், கிராமத்து வன்மும், அதில் படித்தவன் சிக்கினாலும் அவனை ஆடிமாத காற்று பஞ்சாக அலையவிடுவார்கள் என்பதும் புரியும்
தசாவாதரம் படம் புரிய உயிரியல் யுத்தம் என்றால் என்ன? அதன் கொடூரம் என்ன? என்றோ நடந்த விஷயங்கள் பின்னாளில் எப்படி சம்பந்தபடுகின்றது என சுஜாதாவின் அற்புத வரிகளை படித்திருந்தால் புரியும்.
நீங்கள் உளவுதுறை பிரியராக இருந்தால் கொண்டாடும் படம் விக்ரம், 1980களின் காலப்படி அது மிகமிக விறுவிறுப்பான படம், சுஜாதாவும் கமலஹாசனும் இணைந்து மிரட்டியது, ஆனால் பெரிய வெற்றி இல்லை. ஏன் என்றால் அதுதான் தமிழ்நாடு. விஸ்வரூபத்தில் அதைவிட அழகாக ஆப்கன் நிலமையும் அல்கய்தா அமைப்பையும் காட்டினார்.
உளவுதுறையும், அமெரிக்க தாக்குதல் தொடர்பான விஞ்ஞான வளர்ச்சியும், உளவாளிகள் உலகமும், தீவிரவாதிகளின் கொடூர திட்டமும் தொடர்ந்து படித்திருந்தால் விஸ்வரூபம் புரியும்
விரும்பிய பொருள் நிர்பந்த்தால் கிடைக்காத நிலையில், லட்சியத்தினை சில நிர்பந்தங்காளால் அடைந்த ஒருவனின் திடீர் மரண ஆயத்த பரிதவிப்பினை உத்தம வில்லன் படம் விளக்கியிருந்தது
தையம் எனும் கிராம நடனமும், அந்த சாகா வரம்பெற்ற பிராமணன் கதையும் தெரிந்திருந்தால் அப்படம் மிக ரசனைக்குரியதே
ஆக கமலஹாசனை புரிய நாமும் சில விஷயங்களை அறிந்திருக்கவேண்டும் அல்லது அனுபவத்திருக்கவேண்டும், அதுதான் அடிப்படை
புராணம், இதிகாசம், இலக்கியம், கவிதை, நடனம் , விஞ்ஞானம், உளவுதுறை, வரலாறு, காதல் வேடம் நோயாளி வேடம் நகைச்சுவை எனும் மானிட உணர்வுகள், தொழில்நுட்பம், பாடல், இயக்கம், ஒப்பனை, பல மொழி, பல பிரிவு தமிழ் நிபுணத்துவம் என சகல துறைகளிலும் தேர்ச்சியுற்ற ஒருவன் கலையுலகில் இன்று உண்டென்றால் கமலுக்கும் முன்னாலும் பின்னாலும் ஒருவருமே இல்லை
அந்த இடத்தில் கமலஹாசன் மட்டுமே இருக்கின்றார்
இரு படம் ஓடிவிட்டால் முதலமைச்சர்,5 படம் ஓடினால் பிரதமர் என கனவு காணும் திரையுலகில், சகல வாய்ப்புகள் இருந்தும் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்த்து, தன்னை ஒரு கலைஞன் எனும் நிலையிலிருந்து சிறிதும் மாற்றிகொள்ளாத தன்மைக்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.
56 வருடமாக தமிழ் சினிமாவை நேசிப்பவர், சகல நவீன தொழில்நுட்பத்தையும் தமிழுக்கு அறிமுகபடுத்துபவர். நல்ல வாசிப்பாளர்,அருமையான நடிகர், ஆனாலும் சர்ச்சை அவருக்கு புதிதல்ல.
12 வயதிலிருந்து அவர்மேல் பொழியபட்ட அவமானங்கள் அதிகம், இன்றுவரை அடிக்கடி சர்ச்சையில் அடிபடுவார். ஆனால் ஏதும் அவரை சினிமாவிலிருந்து பிரிக்கவில்லை.
நடிப்பை நடிப்பாக மட்டும் பார்த்த நடிகர்கள் குறைவு, அதிலும் நடிப்பினை இறுதிவரை நேசித்தவர்கள் குறைவு, அவர்களில் எம்.ஆர் ராதா முக்கியமானவர். சினிமா வாய்ப்புகள் குவிந்தபொழுதும் நாடகங்களில் நடித்து கொண்டு நடிப்பினை நிரூபித்தவர். ஆர்.எஸ் மனோகர் போன்ற அபூர்வங்களும் உண்டு.
நாசர் அவ்வரிசையில் இருந்தார், தேவதை அவதாரம் போன்ற படங்கள் சுட்டுகொண்டபின் ஒதுங்கிகொண்டார்.
அக அந்த வரிசையில் இன்று எஞ்சி இருப்பது கமலஹாசன் மட்டுமே, சினிமாவை தவிர அவர் ஏதும் யோசிப்பதில்லை. ஒருமுறை அவரிடம் கேட்டார்கள்,நீங்கள் ஏன் அரசியலுக்கு வரகூடாது
அவர் சொன்னார் “மன்னிக்கணும் எனக்கு ஓரளவிற்கு மேல் நடிப்பு வராது”
இதற்காகவே அவருக்கு கைதட்டலாம்,
சினிமாவை சுவாசிக்கும் அவர், இந்த உலகில் சுவாசிக்க ஆரம்பித்து 59 வருடம் ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் அவர் வாழ்ந்து நல்ல படைப்புக்களை தர வாழ்த்துவோம்,
ஹேப்பி பெர்த்டே கமலஹாசன் அதோடு கூட உங்களின் கனவு படமும் ஓர் அபூர்வ மனிதனுமான மருதநாயகம் படமும் வரட்டும் என வாழ்த்துகின்றோம்
நிச்சயம் மருதநாயகம் பெரும் வரலாறு, நெப்போலியன் போல ஒரு மாவீரனாக எழும்பிருக்கவேண்டியவன், ஆனால் வரலாறு மாறிவிட்டது
அந்த வரலாறை, சினிமா வரலாறான கமலஹாசனை தவிர யாரால் சிறப்பாக கொண்டுவரமுடியும்?
சினிமாவில் சம்பாதித்து எஸ்டேட்,மண்டபம்,அரசியல் என குவிப்பவர்கள் மத்தியில் பணத்தை மறுபடியும் சினிமாவில் முதலீடு செய்பவர் அவர் மட்டுமே, கேட்டால் சொல்லுவார்
“விவசாயி வேறு என்ன செய்வான்??”
மிக அருமையான உவமை அது, விவசாயியாக வாழ்ந்தால் அது புரியும். இன்றைய காலத்தில் மகா நஷ்டமான தொழில் விவசாயம், கள்ள கணக்கு காட்ட விவசாயத்தை தவிர இன்னொரு தொழில் சாத்தியமில்லாதது, அவ்வளவு சிரமமும் நஷ்டமும்
ஆனால் விவசாயி மனம் அதிலே லயிக்கும், கிணற்றில் அரை சொட்டு நீர் இருந்தாலும் அவன் மனம் மண்வெட்டி பிடிக்க நினைக்கும், லாபமோ நட்டமோ அவன் கவனம் அதிலேதான் இருக்கும்
லாபம் என்றால் மறுபடி அதிலே முதலீடு, நஷ்டம் என்றாலும் அதிலே மறுபடியும் கிளறிகொண்டிருப்பது, காரணம் விவசாயியின் மனம் அதில் கலந்துவிட்டது, எந்த சக்தியாலும் அதனை பிரிக்கமுடியாது
கலைஞரின் மனம் கட்சியிலும், கண்ணதாசனின் மனம் கவிதையிலும், சுஜாதாவின் மனம் எழுத்திலும் கலந்துவிட்டதனை போல கமலஹாசனின் மனமும் சினிமாவோடு கலந்தது
எப்பொழுதும் சொல்வது போல இம்மாதிரி கலையடிமைகளுடன் அல்லது விஞ்ஞானிகளுடன் வாழ்வது முடியாத விஷயம், பாரதி செல்லம்மா போலவோ கண்ணதாசனின் பொன்னம்மா போலவோ ஒரு அவதாரத்தால்தான் அது முடியும்
அப்படி ஒரு பெண் கமலுக்கு வாய்க்கவில்லை, அது ஒன்றே அவர் பெற்ற சகல சர்ச்சைகளுக்கும் காரணம். பிடித்த விஷயம் தொழிலாய் அமைந்துவிட்டால் அது ஒரு தவம், அது ஒரு போதை அதனை தவிர ஏதும் சிந்திகாத ஒரு மோன நிலை வரும்
அந்நிலையில் சிக்கிகொண்ட கலைஞர்தான் கமலஹாசன், இன்று வரை அவரை தொடரும் சர்ச்சைகளுக்கு அதுதான் காரணம்
ஆனால் எந்த சிக்கலும் அவரை பாதிக்காது, கலைஞரின் நெடிய அரசியல் பயணம் போல, கமலில் சினிமா பயணமும் எதனாலும் பாதிக்காது
இந்த கவுதமி பிரச்சினை எல்லாம் உமிக்கு சமம், ஊதி தள்ளிவிடுவார்.
தென்னக மொழி எல்லாமும் பேசுவார், இந்திய மொழிகள் தெரியும், வெளிநாட்டு மொழிவளமும் உண்டு. அதெல்லாம் கூட ஆச்சரியமில்லை, அவரின் தமிழ்தான் ஆச்சரியம்
சுருக்கமாக இப்படி சொல்லலாம்
தமிழக தமிழ் பல வகையில் பேசப்படும், நெல்லையில் மட்டும் கடற்புரம், தேரிக்காடு, நெல்லை, அம்பை, ஆரல்வாய்மொழி என ஐந்து வகை தமிழ் உண்டு, ஆறாம் வகையாக நெல்லை கிராம சொல்வழக்கு சாட்சாத் ஈழத்தமிழ் சாயலிலே இருக்கும்
நெல்லையிலே இப்படி என்றால் மொத்த தமிழ்நாட்டின் தமிழ் பேச்சு கிட்டதட்ட சென்னை, பாலக்காடு தமிழ் உட்பட 70ஐ தாண்டி இருக்கலாம்
இந்த 70 பிரிவுகளையும் பேச சொல்லுங்கள், மிக அற்புதமாக பேசுவார் கமலஹாசன்.
எந்த தமிழ்நடிகருக்காவது இது சாத்தியாமா? நிதானித்து பாருங்கள், அவரால் மட்டுமே சாத்தியம், அதனால்தான் மனிதரை ரசிக்கவேண்டி இருக்கின்றது
பாபநாசம் படத்தினையே எடுத்துகொள்ளுங்கள், அந்த தமிழ் மிக சுத்தமான பாபநாசம் வழக்கு அல்ல, அது இன்னும் வேறுமாதிரி வரும், வசன எழுத்து சுகா என்பதால் அது மத்திய நெல்லை வழக்கிற்கு ஒட்டி வந்தது
அதனை கேட்கும் பொழுதும், அந்த ஈசிச்சேரில் படுத்திருந்து பேசும் பொழுதும், அண்ணாச்சி.. என அவர் பேசிய காட்சிகளில் எல்லாம், மனதில் என்றோ கண்ட நெல்லை மக்களை மறுபடியும் பார்த்தது போன்றே இருந்தது
அதே கலகலப்பு, அது நகைச்சுவை, அதே குத்தல், அது பிடிவாதம், அதே குடும்பபாசம், உழைப்பு என கண்முன் நிறுத்தியிருந்தார்
இப்படி ஓவ்வொருவர் தமிழனின் மனதினையும் ஏதோ ஒரு வடிவில் பாதித்திருப்பவர் அவர், அவரின் சினிமா பாதிப்பு எல்லோர் மனங்களிலும் உண்டு, இதுதான் ஒரு நடிகனாக கமலின் வெற்றி
அசைக்கமுடியா வெற்றி
புதுமை சிந்தனை கொண்டவர்களோ, பெரும் அனுபவமும் தேடலும் இல்லாதவர்கள் சினிமாவில் நிலைக்க முடியாது.
கமல் கொடிபறக்க ஆரம்பித்த காலங்களில் அவர் வந்தார். அன்று அவர் பெரும் அறிவு ஜீவி,நிரம்ப படித்த நாகரீக அடையாளம். புதிய முயற்சி என பெரும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது
இவர்தான் கமலுக்கு போட்டி என்றார்கள், அவரும் அப்படியே நினைத்துகொண்டு புதுமை, அது இது அறிவு என சொல்லி நடித்தார் கொஞ்சநாளில் காணாமல் போனார், இன்று அவ்வபோழுது சிலநொடி காட்சிகளுக்கு வந்துசென்றார்
அவர் பிரதாப் போத்தன்
அதன் பின் கமலுக்கு நிகர் என சொல்ல யாருமில்லை, அந்த இடம் இன்றும் போட்டியின்றி அப்படியே இருக்கின்றது. திருப்பரங்குன்றம் என்றால் அடுத்த இடத்தை நான் பிடிப்பேன் என மலையேற கிளம்புவார்கள்
எவரெஸ்டில் ஏற எவன் வருவான்? ஒருவனுமில்லை. கமலுக்கான இடமும் அப்படியே
பொதுவாக காமெடி படங்கள் பார்க்கவிரும்பினால் என்னுடையே ஒரே சாய்ஸ் எம்ஜி ராமசந்திரன் படங்கள்தான். அவரின் முக சுருகமும், பார்வையும் பார்த்த உடன் சிரிப்பினை வரவழவைப்பவை. அதுவும் அவர் நடனம் ஆடும்பொழுது மியூட் செய்துவிட்டால் போதும் அப்படி ஒரு காமெடி காட்சி கிடைக்கும்
அப்படியாக ஆனந்த ஜோதி என்றொரு படம் பார்த்துகொண்டிருந்தேன், அதில் சிறுவயது கமலஹாசன் வந்தார், வில்லன் அசோகனை பற்றி எம்ஜிஆர் கமலிடம் திட்டிகொண்டிருந்தார் “அவன் பெரும் வல்லவன்”
சிறுவன் கமலஹாசன் இப்படி பதில் சொன்னார் ” சாதாரண வல்லவனா? சககலா வல்லவன்”
அந்த வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் பெரும் தீர்க்கதரிசி ” அவ்வாக்கு அசோகனுக்கு பொருந்தவில்லையே தவிர, கமலுக்கு மிக சரியாக பொருந்திற்று”
அந்த சர்வகலா வல்லவனை வாழ்த்துவோம், எல்லா நலமும் வளமும் அவருக்கு அமையட்டும்
இன்னும் சிறந்த படைப்புக்களை அவர் கொடுக்க, அவர் நம்பாத தெய்வத்திடம் அவருக்காக பிரார்த்திப்போம்.