கலைஞரின் வைரவிழாவிற்கு யாரை அழைக்கலாம்?

கலைஞரின் வைரவிழா கூட்டத்திற்கு யாரை அழைக்கலாம், யாரை அழைக்க கூடாது என முகநூலில் யுத்தமே நடக்கின்றது

கலைஞர் எல்லோருடனும் பழகியவர், எல்லோரையும் அரவணைத்து சென்றவர், தேசிய அளவில் எல்லா முதிர்ந்த தலைவர்களிடமும் அவருக்கு நட்பு உண்டு. காங்கிரஸ் பாஜக என இரு மந்திரிசபையிலும் இருந்திருக்கின்றார்

மூன்றாவது அணி அமையும்பொழுது அதிலும் இருந்திருக்கின்றார்

ஆக சோனியா, வாஜ்பாய் முதல் முதல்வர் பழனிச்சாமி வரை எல்லா தலைவர்களையும் அழைக்க அவருக்கு தகுதியும், உரிமையும் உள்ளது

இது அரசியல் வைரவிழா, அது மட்டும்தான். ஆக வாஜ்பாய் முதல் இன்றிருக்கும் மோடி வரை தாரளமாய் அழைக்கலாம்

மிசா காலங்களில் இதே பிஜேபியின் முன்னோடிகள் கலைஞருக்கு ஆதரவாய் நின்ற, பேசிய காலங்களும் உண்டு, டெசோ என கலைஞர் அழைத்தவுடன் வந்து நின்ற வடக்கத்திய தலைவர்கள் உண்டு

அதனால் அழைக்கபட வேண்டிய தலைவர்கள் ஏராளம், ஒருவர் கூட விடுபட முடியாது, கலைஞரின் வரலாறு அப்படி

எழுத்து, சினிமா, இலக்கியம், பத்திரிகை, கவிதை, வசனம், சின்னதிரை என பல்வேறு திசைகளில் நெடுங்காலம் பயணித்தவர், அந்த துறையின் ஜாம்பவான்களை அழைத்து இன்னும் பல விழாக்களை நடத்தலாம்

ஆனால் இன்று மேற்கண்ட துறைகளில் அவருடன் சரிக்கு சரி அமர யாருமில்லை, இருக்கும் தலைமுறை இரு தலைமுறை பின் தங்கியது. ஆனாலும் வாழ்த்தலாம் அவரிடம் ஆசி வாங்கலாம்.

கலைஞர் ஆத்திக கூட்டமாக இருக்கலாம், ஆனால் அவர்தான் சுக்கிராசாரியார்.

தமிழிசையினை ஏன் அழைக்கவேண்டும் என சிலர் கேட்கின்றனர்

இந்த திமுகவினருக்கு அரசியல் தெரியவில்லை, தமிழிசையினை அழைத்து கலைஞர் வைரவிழாவில் 4 வார்த்தை கலைஞரை புகழ்ந்து பேச சொன்னால் எப்படி இருக்கும்?

தமிழிசை பேசித்தான் ஆகவேண்டும், கலைஞரை புகழ்ந்துதான் ஆகவேண்டும், அப்பொழுது எல்லா திமுகவினரும் கைதட்டி ரசிக்கலாம், எப்படி இருக்கும் காட்சி? இந்த தந்திரமெல்லாம் அவர்களுக்கு வரவே இல்லை

கலைஞர் நலமாக இருந்தால், நேரில் சென்று தமிழிசையினை அழைத்திருப்பார், எப்படி தெரியுமா?

“தினமும் ஒரு தாழ்த்தபட்டவன் வீட்டில் உண்பேன் என சொன்னது நீதானே அம்மா, இதோ ஒரு சூத்திரனின் விழாவிற்கு அழைக்கின்றேன் உன் மேன்மக்கள் பரிவாரங்களோடு வந்துவிடு, வந்து சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள், தாழ்த்தபட்ட சூத்திரன் அழைக்கின்றேன்”

தமிழிசை கொஞ்ச நேரத்திற்கு பேசமுடியுமா?

அதோடு எங்கு செல்லுவார் தெரியுமா? சிறையில் வைகோவினை சந்திக்க, சென்று அழைப்பு விடுத்துவிட்டு என்ன சொல்வார்?

“தம்பி… ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் நீ திருந்துவாய் என எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றேன்

என் நூற்றாண்டு விழாவிற்குள்ளாவது திருந்திவிடுவாயா? இல்லை இப்படித்தான் இருப்பாயா?”

அதுதான் கலைஞர், யாரையும் அவர் விலக்குவதில்லை, எதிரிகளும் தன்னை புகழ்ந்து பேச ஒரு வாய்ப்பபினை அவர் உருவாக்கி அவர்களை பேசவைத்து மனதிற்குள் ரசிப்பார்

தன்னை தொலைக்க தேடிய இந்திராகாந்தியினையே பிடித்து தன்னைபற்றி நாலு நல்லவார்த்தை சொல்லவைத்த கில்லாடி கலைஞர்,

அந்த அம்மா லேசுபட்டதா? “அது கலைஞர் எதிர்த்தாலும்,ஆதரித்தாலும் அதில் உறுதியாக இருப்பார்” என பட்டும் படாமலும் சொல்லிவிட்டு நழுவியது

இந்த திமுகவினருக்கு அந்த வியூகம் எல்லாம் தெரியவில்லை, அப்படி தெரிந்தால் இந்நேரம் தமிழிசையினை “சிக்க” வைத்திருப்பார்கள்

அந்த தமிழிசையும் வந்து அசடு வழிய திக்கி திணறியிருக்கும்..