கலைஞரை சந்தித்த கதை….
கலைஞரை சந்திக்க முயன்றபொழுது முதலில் உறுதிகொடுத்தவர் எல்லோரும் நழுவிவிட்டார்கள், காரணம் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்ததில் கலைஞர் உடல் சற்று தளர்ந்திருந்தது என்றார்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைவானது போல் தோன்றிற்று
Somas Kandhan அவர்களை அழைத்து வந்திருப்பதை சொன்னபின் அவர் பெரும் முயற்சி செய்தார், 18ம் தேதி மாலை சந்திக்கலாம் என உறுதியாக சொன்னார்.
சென்னை நெரிசலுக்கு தப்பி ஒரு வழியாக மாலை 7 மணிக்கு கோபாலபுரத்தை அடைய முடிந்தது. கலைஞரின் வீட்டினை அடையாளம் கண்டு சென்றாயிற்று
அந்த வீடு மிக எளிமையாக இருந்தது, சேலத்தில் இருந்து சினிமா கம்பெனிகள் சென்னைக்கு குடிபெயர்ந்தபொழுது கலைஞரும் வந்துவிட்டார், அன்றே அவர் வாங்கிய வீடு அது
அரசியலுக்கு வரும் முன்னே அவர் வாங்கிய வீடு அது.
நிச்சயம் ஒரு முதுபெரும் அரசியல் தலைவர் வசிக்கும் வீடு என அதனை சொல்லமுடியாது. சாதரண வீடு அதுவும் வரிசை வீடுகளின் கடைசி வீடு. அந்த பகுதியில் எல்லா வீடுகளுமே பங்களாக்களாக மாறி இருக்கின்றன. ஆனால் எந்நிலையிலும் மாறாமல் கலைஞரின் தமிழ் போலவே மாறாமல் இருக்கின்றது அந்த வீடு
வாசலில் சில காவலர்கள் கடமைக்கு நின்றார்கள், ஆனால் சாலை சோதனையோ, சாலை தடுப்போ எதுவுமே இல்லை. மொத்தத்தில் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் வாழும் பகுதி என ஒரு பரபரப்பும் இல்லை, அவர் வீட்டு முன் ஹாரன் அடிக்கலாம், சத்தம் போட்டபடி பைக்கில் செல்லலாம், ஒரு சிக்கலுமில்லை
இது வேறு எந்த அரசியல் தலைவர் வாழும் பகுதிக்கு சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை, கலைஞர் அப்படி வாழ்ந்திருக்கின்றார்
அவர் வீட்டின் அருகிலே வேணுகோபாலசாமி கோவிலும் இருக்கின்றது. பகுத்தறிவின் சுடர் அந்த ஆலய பூஜை, புனஸ்கார சத்தத்திலும், சாம்பிராணி மணத்திலும், ஆலயமணி ஓசையிலும் கலந்துதான் பகுத்தறிவு பேசியிருக்கின்றது
ஒரு நாளும் அவர் இந்துமதத்திற்கு எதிரி அல்ல மாறாக அதன் மூட நம்பிக்கைக்கே எதிரி என்பதற்கு அவர் வீட்டையடுத்த ஆலயமே சாட்சி
8 மணிக்கு வீட்டின் முன்வராண்டாவில் அமரவைத்தார்கள், அவ்வீட்டில் கால் வைக்கும்பொழுதே உடல் சிலிர்த்தது. தமிழக அரசியலை கிட்டதட்ட 65 ஆண்டுகள் நிர்ணயித்த வீடு அது
எத்தனை பெரும் தலைவர்கள் தேடி கால் வைத்த இடம் அது, காந்தி காலம் முதல் மோடி காலம் வரை எல்லோரும் ஓடிவந்த இடம், மோடியே வந்த இடம்
நடிகர்களில் என்.எஸ் கிருஷ்ணன் முதல் இப்போதைய நடிகர்கள் வரை வந்து நின்ற வீடு.
சுருக்கமாக சொன்னால் 5 தலைமுறை அரசியல்வாதி, சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என எல்லோரும் வந்து நின்ற வீடு அது. நிச்சயம் வரலாற்று பெருமை மிக்க இடம்.
அந்த இடத்தில் கால்வைத்தபொழுது பெரும் வரலாற்று சின்னதை தரிசித்த சிலிர்ப்பு ஏற்பட்டது. அங்கே அமர்ந்திருக்கும்பொழுது நினைவுகள் எங்கெல்லாமோ சுற்றின, இங்கிருந்துதான் அந்த மனிதர் பெரும் முடிவுகளை எடுத்தாரா?
தமிழகத்தையும் சில நேரங்களில் இந்தியாவினையும் வழிநடத்தும் பெரும் பொறுப்பினை இந்த இல்லமே சுமந்து நின்றது. ஒன்றா இரண்டா நினைவுகள்? கடலில் அலை மோதுவது போல் நினைவுகள் மோதின, அப்பொழுது என்னிடம் பேசிய ஒரு காவலரிடம் ஏதோ சொல்லிகொண்டேனே தவிர நினைவுகள் எல்லாம் பின்னோக்கியே நீந்தின.
நன்றாக நினைவிருக்கின்றது, அதில் ஒரு காவலர் நம் பதிவுகள் பற்றி கேட்டார், ஆக நம்மை பலர் கவனிக்கின்றார்கள் அதுவும் கலைஞர் வீட்டு வாசலில் நிற்பவர் வரை கவனிகின்றார்கள் என்றபொழுது ஒரு கணம் மனம் திடுக்கிட்டது,
ஆனால் அந்த வீட்டின் நினைவுகளில் மூழ்கி இருந்ததால் அவரிடம் சரியாக பேசமுடியவில்லை
8.30 வாக்கில் அழைத்தார்கள், மேல்மாடியில் அவர் இருந்தார், வரவேற்பரை ஒடுக்கமாக இருந்தது. அங்கு கலைஞரின் பழம் புகைபடங்கள் இருந்தன முரசொலிமாறன் படம் மாலைபோட்டு வைக்கபட்டிருந்தது. மேலே செல்லும் வாசல் மிக ஒடுக்கமானது, நீண்ட நாள் கலைஞர் அந்த ஏணியினைத்தான் பயன்படுத்தினாராம், பின் உடல் தளர்ந்தபொழுது பின்னால் லிப்ட் வசதி செய்யபட்டதாம்
மிக ஒடுக்கமான அந்த ஏணியில் ஏறியபொழுது மனம் நெகிழ்ந்தது, கலைஞர் நடந்த பாதை அது.
அந்த அறையினை திறந்தார்கள், அதுவரை மனதின் அடி ஆழத்தில் இருந்த உணர்வுகள் எல்லாம் பிராவகமாக வெடித்தன, ஆம் அவர் அங்கே அமர்ந்திருந்தார்
80 ஆண்டுகளாக பொங்கி ஓடிய காட்டாற்று வெள்ளம் அங்கே அமைதியாக ஒடுங்கி இருந்தது, பல இடங்களில் தென்றலாகவும் சில இடங்களில் புயலாகவும் வீசிய அந்த கலைகாற்று சலனமற்று அமர்ந்திருந்தது
அரசியல், கலை, இலக்கியம், பத்திரிகை என எல்லா இடங்களிலும் தன் அலையினை அடித்துகொண்டே இருந்த கடல் அங்கு அமைதியாக அமர்ந்திருந்தது
உலகின் மாபெரும் மங்கோலிய சாம்ராஜ்யத்தை அமைத்த செங்கிஸ்கான் தன் முதிய வயதில் ஒடுங்கி நலிவுற்று இருந்தது போல இருந்தார் கலைஞர், உலகையே அலற வைத்து தனிதீவில் இருந்த நெப்போலியன் போல் அமர்ந்திருந்தார் அவர்
அந்த சிறிய அறையில்தான் அவர் மிக முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றார், அவரின் அழுகை, கண்ணீர், துக்கம் , வருத்தம், ஆற்றாமை, மகிழ்சி, வெற்றி என எல்லாவற்றையும் அந்த அறை பார்த்திருக்கின்றது
கனிமொழி அருகே அமர்ந்திருந்தார், மிக தெளிவான முகம் அவருடையது, என்ன கேள்வியும் கேளுங்கள் என்னிடம் பதில் உண்டு என்பது போன்ற முகத்துடன் வாருங்கள் என்றார், “அப்பா உங்களை பார்க்க வந்திருக்காங்க” என அவர் சத்தமாக சொன்னவுடன் கலைஞரிடம் சில மாறுதல்கள் வந்தன
அவர் அருகிருந்து படம் எடுத்துகொண்டேன், ஒருவிதமான உணர்ச்சியால் கண்களில் நீர் வந்தது. அடக்கிகொண்டே படம் எடுக்க முடிந்தது
கலைஞரின் முன் அறையில் அண்ணாவும் பெரியாரும் படமாக இருந்தார்கள், அவர்களுக்கு அடுத்து கலைஞரின் பாசத்திற்குரிய சகோதரிகள் படமும் இருந்தது, அவர் அன்னையின் சிலை அவர் அருகிலே இருந்தது, ஏகபட்ட புத்தகங்கள் கொண்ட அறையில் இவர்களின் நினைவுகளோடே கலைஞர் பயணித்தார் என்பது புரிந்தது
கலைஞரை உற்று பார்த்தேன், எப்படிபட்ட மனிதர் அவர்? அவருக்கு குலபெருமை இல்லை, குலப்பணம் இல்லை, சகோதர பலமோ பெரும் கல்வியோ இல்லை
ஆனால் பேனா மட்டும் இருந்தது, அந்த பேனா முனையில் பிரபஞ்சத்தையே கிழித்தெறிந்து கோடிகணக்கான மக்களை வசீகரித்து, பெரும் வரலாற்று தலைவனாக உயர்ந்துவிட்டவர் அவர்
நிச்சயம் அவர் தென்றலை தீண்டியதில்லை தீயினை தாண்டினார், அவர் சுயநலத்தில் பொதுநலமும் கலந்தே இருந்தது
அந்த பெரும் தீ எழுத்துக்களை கொடுத்த அந்த கரங்கள் ஒடுங்கி இருந்தன, கைகளை பொத்தி வைத்திருந்தார். ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருந்தார், அது அண்ணா கொடுத்த கணையாழி.
அந்த கரங்களை தொட்டுபார்க்க ஆசை இருந்தது. சாதாரண கரங்களா அவை? எத்தனை பேரை உயர்த்திவிட்ட கரம் அது, கலைஞர் பாணியில் சொல்வதனால் கைக்கே (காங்கிரசுக்கே) கை கொடுத்த கை அது
அந்த கையினால் உயர்ந்தவர்கள் எல்லாம் அவரை மனம் வெறுக்க செய்தபொழுது அவரின் கண்ணீரை அக்கரங்களே தனிமையில் துடைத்தும் கொண்டன
தமிழக அரசியல் 65 ஆண்டுகளாக எப்படி நடந்தது? ஒன்று கலைஞர் எதிர்ப்பு அல்லது ஆதரவு. இது அல்லாது ஒன்றுமே இல்லை இன்றைய இபிஎஸ் வரை அப்படி வந்தவர்கள்தான்
அந்த மிகபெரும் வரலாற்று ஆளுமையின் கரங்களை தொட ஆசைதான், அதனை கனிமொழியிடம் கேட்டுவிட வாய்துடித்தது. நான் எதனையோ சொல்ல வருவதை அவரும் புரிந்துகொண்டு குறிப்பால் சொல்லுங்கள் என்பது போல பார்த்தார்.
வயது முதிர்ந்த ஒருவரின் கரங்களை தொட்டு அதில் கண்ணீர் விழுந்தால் (நிச்சயம் விழும்) அவருக்கு அசவுரியங்கள் ஏற்படும் என்ற எச்சரிக்கை வந்ததால் கேட்கவில்லை
விடைபெற்று கீழே இறங்கும்பொழுது மனம் எதனையே சாதித்த பெரும் அமைதியில் இருந்தது, ஒரு பெரும் தலைவனுக்கு தமிழன் செய்யும் கடமையினை செய்த திருப்தி மனதில் குடிகொண்டது
மனம் முழுக்க திருப்தியுடன் கிளம்பினேன், அப்படியே சென்று சென்னை மெரீனாவின் ஓரத்தில் அமர்ந்துவிட்டேன் நண்பர் Senthil Kumar Krishnan அருகில் இருந்தார்
நாம் வெகுநேரம் பேசவே இல்லை, அவரோ கலைஞரை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்
எகிப்தின் நைல் நதி, ஈராக்கின் யூப்ரடீஸ் நதி போன்ற பெரும் வரலாற்று இடங்களுக்கு சென்று பார்த்துவிட்ட திருப்தியுடன் எழுந்தேன்
நிச்சயம் அம்மனிதர் ஒரு பெரும் வரலாறு, வருங்காலத்தில் இப்படி ஒரு அசாத்திய மனிதன் இருந்தான் என எதிர்கால சந்ததி ரசித்து படித்து ஆச்சரியபட போகும் வரலாறு, அவரின் காலத்தில் வாழ்ந்து அவர் தமிழில் கரைந்து வளர்ந்த நாம் அவரை சந்தித்ததில் காலத்திற்கும் கடவுளுக்கும் மிக்க நன்றி
தமிழகம் இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.
ஏற்பாடுகளை செய்த Somas Kandhan அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும்பொழுதும் அதே மனநிலையில் இருந்தேன், பேச்சு வரவில்லை
வங்க கடலின் அலைகள் கலைஞர் பெயரை சொல்லி மோதுவது போல் இருந்தது.
நண்பர் Senthil Kumar Krishnan சொன்னார், “என்னாச்சிண்ணே தலைவிய பார்க்க முடியலண்ணு வருத்தமா? ஏண்ணே கண்ணீரு?..
விடுங்கண்ணே தலைவி எப்படியும் ஒரு காலத்தில் வயசாகி நாற்காலியில உக்காரும்ணே அப்போ கண்டிப்பா பார்த்துலராம்ணே……”