காதலனை கொலை செய்த பெண்

வேறொரு நபருடன் பழகியதை எதிர்த்ததால் காதலனை கொலை செய்த பெண்

நண்பனின் மனைவியை அடைய சினிமா பாணியில் ஸ்கெட்ச்.. துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம்

இளம் காதலனை விரும்பிய பெண், முதல் காதலன் படுகொலை

இவை இன்று தமிழகத்தின் இதர செய்திகள், முறையற்ற காமமும் அது கொடுக்கும் ஒருவகை முரட்டு வெறியும் ஒரு உயிரை பறித்து பல உயிர்களை தீரா சோகத்தில் தள்ளுகின்றன‌

பட்டினத்தார் பாணியில் இப்படி அந்த உடலை நோக்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது, உலக சித்தர்களுக்கெல்லாம் தலமை சித்தன் பட்டினத்தார், ஞானம் அவனுக்கு மிகுந்திருந்தது. அந்த ஞானத்து உச்சியில் அன்றே போதித்தான்

உலகின் மாபெரும் நோய்க்கு அவனின் பாடலே தீர்வு

“பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;

நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்”

ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்..”