காயிதே மில்லத்

Image may contain: 1 personசுதந்திரத்திற்கு போராடிய பல தலைவர்களை நெல்லை கொடுத்தது, பல அற்புதமான சிந்தனையாளர்களை, தலைவர்களை நெல்லை கொடுத்தது அவர்களில் ஒருவர்தான் காயிதே மில்லத், இயற்பெயர் இஸ்மாயில், உருது சொல்லில் வழிகாட்டி என பொருள்படும் காயிதே மில்லத் எனும் பெயரில் அழைக்கபட்டார்

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்தான் அவரின் அரசியல் வாழ்வின் தொடக்கம், பின்பு ஜின்னாவின் கட்சியில் இருந்தார், இஸ்லாமிய உரிமைகளை காக்கும் குரலைத்தான் எழுப்பினார்,

ஆனால் ஜின்னா பாகிஸ்தான் கேட்கும் பொழுது காயிதே மில்லத்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டது

ஜின்னாவின் எண்ணம் இந்தியாவினை உடைத்தே தீருவது என்ற உச்சநிலையினை அடையும்பொழுது காயிதே மில்லத் ஒப்புகொள்ளவில்லை

அதுவும் பிரிவினை கவலரங்களும், அந்த கொடும் ரத்த ஆறும் அவர் மனதில் பெரும் காயங்களை ஏற்படுத்தின, சுதந்திரத்திற்கு பிறகும் முஸ்லீம் லீக் கட்சியினை மில்லத் நடத்தினார், ஆனால் ஒன்றுபட்ட இந்தியாவாக நடத்தினார்.

காயிதே மில்லத் தீவிரமான இஸ்லாமியர், ஆனால் மதத்தின் பெயரால் பாகிஸ்தான் உருவானதை அவர் வரவேற்கவில்லை, பாகிஸ்தான் பெரும் அழிவுசக்தியாகத்தான் மாறும் என அன்றே கணித்தவர் அவர்.

மதநெறிக்கும் மதவெறிக்கும் வித்தியாசம் அவருக்கு தெரிந்திருந்தது..

மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இருந்த காலங்களில் தெற்கிலும் ஒரு பாகிஸ்தான் உருவாக வேண்டும் என சில விபரீத குரல்கள் கேட்டன, அவற்றை அடக்கியதில் காயிதே மில்லத்தின் பங்கும் இருந்தது

மறுக்க முடியாத உண்மை அது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமைத்த குழுவினரில் அவரும் ஒருவர், சிறுபான்மை நல சட்டங்கள் இடம்பெற அவர்தான் காரணம்

1950களில் குழப்பமான இந்தியா இருந்தது, அம்பேத்கர் நேருவோடு முரண்பட்ட காலங்கள், அப்பொழுது பாகிஸ்தான் காயிதே மில்லத்திற்கு தூதுவிட்டது , ஏன் நீங்கள் தெற்கு பாகிஸ்தான் கேட்டால் நாங்கள் முழு உதவி செய்வோம் என்ற அந்த அழைப்பையும்,, “எங்கள் நாட்டு பிரச்சினையினை நாங்கள் பார்த்து கொள்வோம், உங்கள் பிரச்சினையினை நீங்கள் பாருங்கள்” என சொன்னவர் காயிதே மில்லத்

அவரின் நாட்டுபற்று அப்படி இருந்தது, இந்திய போர்களில் எல்லாம் அவரின் நாட்டுபற்று நன்றாக தெரிந்தது

இஸ்லாமிய மக்களின் பெரும் தலைவராக விளங்கினார், திமுக ஆட்சிகட்டிலில் ஏறிய தேர்தலில் அவரின் பங்களிப்பும் இருந்தது, கலைஞர் அந்த காட்சியினை கடைசிவரை மறக்கவில்லை

தமிழகத்தில் இஸ்லாமிய மக்களின் பாதுகாவலாக திமுக மட்டுமே இருக்கமுடியும் என நம்பினார், திமுகவும் அதனை காப்பாற்றியது, இன்னும் காப்பாற்றும் ,

ஆனால் கோவை குண்டுவெடிப்பு சர்ச்சைகள் கலைஞரின் சில அசைக்கமுடியாத நம்பிக்கைக்கைகளை பொய்யாக்கிய காலமும் வந்தது, அவை எல்லாம் காயிதே மில்லத் கனவிலும் நினைக்காத காட்சிகள்

14 கல்வி நிலையங்கள் உருவாக அவர் காரணமாக இருந்தார், இஸ்லாமிய மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற அவரின் நோக்கமும் உழைப்பும் வரவேற்கதக்கது..

இஸ்லாமிய மக்களின் பெரும் அடையாளம் அவர், அச்சமூகத்திற்கு இந்தியனாய் பெரும் தொண்டாற்றியவர், இந்நாட்டில் இஸ்லாமியரும் உரிமைபெற்று வாழவேண்டும் என சொன்னாரே அன்றி, பிரிவினைகளை மதத்தின் பெயரால் அவர் நினைத்து கூட பார்த்தவர் அல்ல‌

அப்படி ஜின்னாவின் குரல் கேட்டிருந்தால் தென்னகத்தில் அன்று பெரும் ரத்த ஆறு ஓடியிருக்கும், அதனை தவிர்த்தவர் காயிதே மில்லத், வரலாறு அதனைத்தான் சொல்கின்றது

அதனால்தான் கண்ணியமிக்க காயிதே மில்லத் என வரலாறு அவரை குறித்துகொண்டது

இன்று அவரின் பிறந்தநாள், அப்படி நல்ல தலைவர்கள் இங்கு இருந்தார்கள் என நினைத்து
கொள்ளலாம்…