கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை
கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை ஏதோ விளக்கு வைத்து கொண்டாடும் வெறும் சம்பிரதாயம் அல்ல, மழைகாலத்தில் சீதோஷ்ண கிருமிகள் பரவாமல் இருக்க மட்டும் கொளுத்தபடும் பெரும் நெருப்பும் அல்ல
அது மாபெரும் தத்துவத்தையும் இந்திய ஞானமரபின் ஆன்மீக மரபின் பெரும் ஞானத்தையும் சொல்லும் நாள்
இந்திய இந்துக்களின் பிரதான வழமை அக்னி வழிபாடு, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று என்றல்ல அதையும் தாண்டி பரம்பொருளே ஜோதிவடிவானவர் என சொல்லி அந்த ஒளியினை வணங்கும் சமூகம் இது
ஒளி என்றால் அது வெளிச்சம் மட்டுமல்ல வெப்பத்தையும் கொடுப்பது, நெருப்பு சக்தி அது
அந்த நெருப்புத்தான் பரம்பொருளிலும் அவன் படைப்புக்கள் எல்லாவற்றிலும் உண்டு, எது நெருப்பை இழக்குமோ அது அழியும், மானிட உடல் அதற்கு பெரும் உதாரணம் இந்த உடல் வாழ்வதின் ஆதார அடையாளம் சூடு, அந்த வெப்பம் நீங்கினால் உடல் செத்துவிட்டது என பொருள்
இந்த படைப்பின் தத்துவம் உலகின் எல்லா படைப்புக்கும் உண்டு, நெருப்பால் வாழும் உலகிது நெருப்பால் இயங்கும் உலகமிது
விஞ்ஞானமும் கூட நெருப்பு பந்தாகத்தான் இந்த பிரபஞ்சம் தொடங்கிற்று என்பதை ஒப்புகொள்கின்றார்கள், சூரியன் முழு நெருப்பு கோளம் என்பது முதல் பூமியின் உட்கரு நெருப்பு குழம்பு என்பது வரை ஆதாரமும் அதிகம்
ஒவ்வொரு உயிரும் வெப்பத்தில் பிறக்கின்றது, வெப்பத்தால் வாழ்கின்றது, இதனால்தான் இந்துக்கள் நெருப்பை தெய்வ வடிவாக கண்டார்கள்
தாய் தகப்பனின் அக்னியில் பிறக்கும் மனிதன் கடைசியில் அக்னிக்கு செல்வது வரை எல்லா இடங்களிலும் நெருப்பினை வணங்கினார்கள்
அக்னி கொண்டு அழகான தத்துவத்தையும் சொன்னார்கள் முன்னோர்கள்
அக்னிக்கு அம்மாவும் அப்பாவும் இரண்டு குச்சிகள் அல்லது இரண்டு கட்டைகள். அதை இரண்டையும் உரசினால் அவர் பிறக்கிறார். அதாவது ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தயிர் கடைவது போல ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்துக் கடைவார்கள். தீப்பொறி எழும். இதில் ஒரு கட்டை பூமி என்றும் மற்றொன்று ஆகாயம் அல்லது சொர்க்கம் என்றார்கள்
ஆம், நெருப்பு வழிபாடு என்பது வெறும் வழிபாடு அல்ல, பெரும் ஞான தத்துவம் அதில் இருந்தது
அதனை “அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் ஒன்றாகும் நிலை” என்பார்கள் ஞானியர்
இதன் பொருள் கொஞ்சம் சூட்சுமமானது, அதாவது நாம் செய்யும் காரியம் செய்யபடும் காரியம் யாருக்காக செய்கின்றோமோ எல்லாம் ஒன்றே என்பது அந்த தத்வார்த்த விளக்கம்
அவ்வகையில் நெருப்பினை கொண்டு செய்யபடும் வழிபாடு இறைவனை இறை அம்சத்துடன் வணங்குவதாகின்றது
இங்கு எல்லாமே நெருப்பு, மானிட உடலுக்குள் இருப்பதும் சூரியனாய் உலகை இயக்குவதும் நெருப்பு, அந்த சூட்சுமமான நெருப்பு எல்லா பொருளிலும் உண்டு, நீருக்குள்ளும் நெருப்பு உண்டு இல்லையேல் அது பாறைபோல் ஆகிவிடும் என்பதுதான் விஷயம்
அந்த நெருப்பை அந்த ஒளிவடிவினைத்தான் இந்துக்கள் தங்கள் வழிபாட்டு மரபாய் இழுத்து வந்தார்கள்
காயத்ரி மந்திரம் நெருப்பு கொடுக்கும் ஒளியின் பெருமைகளை சொல்கின்றது
வேதங்களில் முதல் வேதமான ரிக்வேதம் அக்னியினை பாடியே தொடங்கி அக்னியிலே முடிகின்றது, அக்னிதான் உலகையும் உலக உயிர்களையும் இயக்குகின்றது என்பதை சொல்கின்றது முதல் வேதம்
அதன் தமிழாக்கம் இதோ
அக்னியே புரோகிதன் , வேள்வியின் தேவன், அவனே ரித்விக்,ஹோதா செல்வங்களின் இருப்பிடம். போற்றுவோம்!
(புரோகிதன் – வேள்விச் சடங்கின் முக்கிய பூசாரி; ரித்விக்,ஹோதா – வேள்வியில் மந்திரங்கள் ஓதும் துணை பூசாரிகள்)
பழைய ரிஷிகளும் புதியோரும் போற்றும் அக்னி தேவர்களை இங்கு அழைத்து வருக!
புகழும் உன்னத வீரியமும் கொண்டு, நாள்தோறும் வளரும் செல்வம், அக்னியால் பெறுகிறோம்.
அக்னி! நீ எங்கும் சூழ்ந்து நிறையும் வேள்வி, தவறாமல் தேவர்களைச் சென்றடைகிறது.
முதல் புரோகிதன் உட்பொருள் உணரும் கவி சத்தியமானவன் உன்னத மேலோன் தேவன் அக்னி
தேவர்களுடன் இங்கு வருக
ஓ அக்னி! அங்கிரஸ். நீ தரும் நன்மையும் செல்வமும் உண்மையில் உனக்கே உடைமையாகிறது.
தீமையழிக்கும் அக்னி, ஒவ்வொரு நாளும், உன்னையே எண்ணிப் போற்றி உன்னிடம் வருகிறோம்.
சுடர்விட்டு ஒளிர்வோன் வேள்வியின் வேந்தன் மாறாத சத்தியத்தின் காவலன் தன்னகத்தே வளர்வோன்
அக்னி.
மகனுக்குத் தந்தை போல நீ எமக்கு எளியவன் அக்னி! எம் நல்வாழ்விற்காக எம்முடனே இருந்திடுக”
இப்படி தொடங்கும் வேதம் எப்படி முடிகிறதென்றால் இந்த வரிகளோடு முடிகின்றது
பெரியோய் அக்னி! பெருமிதத்துடன் வேள்வி மேடையிட்டு சுள்ளியிட்டு அவி சொரிந்து பாடல்களும் துதிகளும் கூடிப் போற்றுகிறோம். சக்தி மகனே உனது மங்கல நல்லருளே வேண்டி முயல்கிறோம்.
புகழோய் விண்ணும் மண்ணும் நிறைத்தன உன் ஒளியும் புகழும் அக்னி பெருங்கனமுள்ள உன் செல்வக்குவைகளுடன் இடையறாது எம்மிடத்தில் சுடர்க!
செல்வங்களுக்கரசே வசுவே எம் புதல்வனுக்கும் சந்ததியினர்க்கும் நிறைந்த பசுமந்தைகளை என்றென்றும் தருக தீமையற்ற நல்லுணவும் இன்பமளிக்கும் உண்மைப் புகழும் எம்மிடம் நிலைத்திடுக
அக்னியே அரசே உனதன்பும் அருளும் கொண்டு செல்வம் பலவும் நுகர்வோன் ஆகுக யான்!
அடியார்க்கு வரம் தரும் செழுமையும் உரிமையும் உனதே”
இப்படி அக்னியினை வணங்கித்தான் இந்துக்கள் வழிபாடு தொடங்குகின்றது, அவர்கள் சடங்கும் வாழ்வும் அக்னியினை சுற்றித்தான் அமைகின்றது
யாகமில்லா இந்து வழிபாடு இல்லை அது இல்லையென்றால் தீபமாவது வேண்டும். திருமணம் முதல் எல்லா மங்கள காரியங்களும் சுடுகாடு வரை எல்லா அமங்கள காரியங்களும் அதனாலேதான் உண்டு
இந்துக்கள் நெருப்பை முன்னிடுத்தான் சத்தியமும் செய்வார்கள், வாக்கும் கொடுப்பார்கள், காரணம் அது அவ்வளவு தூய்மையனது , மாசும் தூசும் அதனை அண்டாது
கெட்டதை எல்லாம் எரிக்கும் சக்தி அதற்குத்தான் உண்டு, அதுவும் எரித்து கொண்டே இருக்கும் சக்தி அதனுடையது, வற்றாமல் தொடரும் சக்தி அது
இப்படி பெரும் தத்துவமெல்லாம் இருப்பதாலே அதனை கொண்டாடினார்கள் இந்துக்கள்
யாக நெருப்பில் செய்யும் வேள்வி உன்னத வழிபாடே, அங்கு இடபடும் பொருளெல்லாம் நெருப்பு வடிவமான இறைவனுக்கான காணிக்கையன்றி வேறல்ல
அது எல்லாவற்றையும் இறைவனுக்கு சமர்பிப்பதும், கண் எதிரே விலை உயர்ந்த பொருளாக கருதபட்டது பஸ்மமாவதில் வாழ்க்கை நிலையாமையினையும் போதித்தது
அக்னிக்கு ஏழு நாக்கு உண்டு, அவருக்கு ஏழு சக்கரம் உண்டு என சொன்ன இந்துமதம் அக்னியினை சுற்றி ஆணும் பெண்ணும் 7 அடி நடந்தாலே அது திருமணமாகிவிடுகின்றது என்றது
அதாவது மனங்களை ஈர்த்து ஒன்றாக்கும் சக்தி நெருப்புக்கு உண்டு, பிரபபஞ்ச சக்தி முதல் இறைசக்தி வரை மனதோடு அது ஈர்த்து வைக்கும், இதனாலே நெருப்பை முன்னிட்டே வழிபாடுகள் உண்டுஅக்னி பகவானுக்கு
(சப்த ஜிஹ்வா, சப்த அர்ச்சி என்ற பெயர்கள் உண்டு. இதன் பொருள்—ஏழு நாக்குடையோன், ஏழு கிரணம் உடையோன்.)
இதனலே வேதம் பயின்ற பிராமணர்கள் தினமும் அக்னியை வழிபடுவர். சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அக்னியை வழிபட வேண்டும் என்பது மரபு
.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் கார்கபத்யம், தட்சினாக்கினீயம், ஆகவனீயம் என்று முத்தீ உண்டு
அக்னியின் மனைவி பெயர் ஸ்வாஹா தேவி என்றார்கள். அதவது ஒவ்வொரு முறை யாகத்தீயில் பொருள்களைப் போடும் போதும் ‘’ஸ்வாஹா’’ என்ற மந்திரத்தைச் சொல்லிப் போடுவர்கள்
அக்னி தன்னில் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் அது கடவுள் தன்மை கொண்டது என்பதை சொல்ல இதனை ஏற்படுத்தினார்கள்
அக்னி பகவான் பற்றி நிறைய சொன்னார்கள் இந்துக்கள் அவரின் வாகனம் ஆட்டுகடா என்பார்கள், மந்தையினை முன்னின்று நடத்துதல் பின்வாங்காமல் செல்லுதல் போர்குணம் கொண்டு நிற்றல் மேயும் இடத்தை சுத்தமாக முடித்துகட்டுதல் என ஆட்டுக்கான குணங்களில் அக்னி பகவானையும் காணமுடியும்
விலங்குகளில் ஆடு தீராபசி கொண்டது என்பார்கள், மிக வேகமாக பலுகி பெருகுவதும் அதுவே, நெருப்பும் அப்படியே என்பதால் அந்த வாகனதை வைத்திருக்கலாம்
வேதங்கள் அக்னி புகழை பாடி தொடங்கி அக்னியினை பாடி முடித்தது இந்த உலகமும் மானிடனும் எல்லா படைப்புக்களும் அக்னியில் தொடங்கி அக்னியில் முடிவதை சொல்வதற்காகவே
அக்னிதான் இங்கு மூலம், அதனை வேதங்கள் சொல்கின்றன இன்றைய விஞ்ஞானத்தினை அதாவது ஒரு மூலத்தில் இருந்துதான் நீர் வந்தது வாயு வந்தது மண் வந்தது பின் உயிர்கள் வந்தது என்பதை வேதங்கள் நெருப்பை முன்னிட்டு சொல்கின்றது
இன்றைய விஞ்ஞானம் சொல்வதை என்றோ நெருப்பை முன்னிட்டு சொன்னவை வேதங்கள்
இப்படி எங்கும் நிறைந்த எல்லாவற்றுக்கும் ஆதாரமான அக்னியினை வணங்குவது இந்துக்கள் மரபு என்றாலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று ஏன் வைத்தார்கள்?
அதுதான் இந்துக்களின் பெரும் வானியல் அறிவு என்பது
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், சூரியன் என்றால் அக்னி
இந்த கார்த்திகை மாதம் என்பது சூரிய மண்டலம் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மாதம் என்பதால் இது அக்னிக்குரிய மாதமாயிற்று
சித்திரை மாதம் இப்படி வரும் , அதாவது கார்த்திகை நட்சத்திரமொட்டி சூரியன் வரும் காலம் உச்ச வெயிலாக இருக்கும் அதனை அக்னி நட்சத்திரம் என்பார்கள்
கார்த்திகை மாதம் அதனை தீப விழா என்பார்கள்
முருகபெருமான் அவதாரம் இம்மாதம் நடந்தது என்பதும், அவரை வளர்த்த கார்த்திகைபெண்கள் இம்மாதம் சிறப்பிக்க படுவார்கள் என்பதும் நோக்க கூடியது
நெருப்பின் வடிவமாக அறியபடுபவர் முருகபெருமான்
அவர் சிவனின் நெற்றிகண்ணில் இருந்து பிழம்பாக தோன்றி, நெருப்பான கார்த்திகை பெண்களால் வளர்க்கபட்டார் என்பது அவரும் நெருப்பு வடிவம் என்பதையே காட்டுகின்றது, முருக வழிபாடும் ஜோதி வழிபாடும் ஒன்றே
சொக்கபனை என இம்மாதத்தில் கொளுத்தபடுவதும் சிவன் ஆதி அந்தமற்ற ஜோதியாய் நிற்பதை உணர்த்துவதன்றி வேறல்ல
அக்னிக்குள்ள பெரும் அடையாளம் சூரியன், அந்த சூரியனுக்குரிய மாதத்தில் சூரியனுக்குள்ள நட்சத்திரத்தில் தீபமேற்றி இறைவனை வணங்க சொன்னது இந்துமதம்
அன்று அக்னியின் அம்சமான நெல்லில் செய்யபடும் உணவு பிரதானமாக இருத்தல் அவசியம், பச்சரிசி கொழுக்கட்டை படைக்கும் தத்துவம் அதுவே
கார்த்திகை தீபம் என்பது இறைவன் அக்னி வடிவானவர் அந்த அக்னி எல்லா பொருளிலும் உயிரிலும் உண்டு, அந்ந்த அக்னி வெப்பமே உலகை இயக்குகின்றது என்பதை போதிக்கும் நாள்
அன்று அந்த அக்னியின் நட்சத்திரமான கார்த்திகையின் நாளில் கார்த்திகை மாதம் விளக்கேற்றுவது கூடுதல் பலனை தரும்
பிரபஞ்ச சக்திகள் கூடிவரும் நன்னாள் அது
அன்று மண்விளக்கில்தான் விளக்கேற்ற வேண்டும், காரணம் பஞ்ச பூத தத்துவம் இணையும் நாளில் மண் விளக்கேதான் சிறந்தது, மெழுகு ஏற்றுவதோ இன்னபிற வகைகளோ சரியல்ல
அது சூழலுக்கும் உகந்தது அல்ல, அவை ஒருவகை ரசாயணம்
இதனால் நல்ல மண்விளக்கில் அங்கீகரிக்கபட்ட அதாவது இந்துமதம் சொல்லும் நெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் விளக்கு எரித்தல் நல்லது, இதர எண்ணெய்கள் சூழலுக்கு கேடு
கேடு என ஏன் சொல்கின்றார்கள் என்றால் இந்துமதம் சொல்லும் எண்ணெயில் விளக்கு எரிந்தால் நல்ல அதிர்வுகள் வரும் மனம் ஒருமையடையும் அந்த மனம் நல்ல பிரபஞ்ச அலைகளை ஈர்க்கும்
அதைவிடுத்து கண்ட கண்ட எண்ணெயும் இதர ரசாயணமும் கொண்டு விளக்கேற்றினால் அமைதி குலையும் நல்ல பலன் வராது என்பது சூட்சும விஷயம்
இதனாலே இந்துமதம் குறிபிட்ட எண்ணெய்களை மட்டும் அங்கீகரித்தது
அந்த எண்ணெயில் விளங்கேற்றுங்கள்
இந்த உடலில் இருக்கும் அக்னியும் பரம்பொருளின் அக்னியும் நாம் ஏற்றி வைக்கும் அக்னியும் ஒன்றே என்பதை மனதில் கொண்டு பிரார்த்தியுங்கள்
அப்படி சிந்தனையில் மூழ்கினால் பெரும் ஞான தெளிவு ஏற்படும், இறைவனை உணரும் தன்மை கூடும், இறைவன் நம்மில் இருப்பதும் புரியும்
அந்த அக்னி உலகை பவுதீகமாக மட்டும் நடத்தவில்லை, குண்டலினி என மூலாதாரம் முதல் துரியம் வரை பரவும் அக்னியும் அதுதான்
அதனை வழிபடுங்கள், அக்னி என்பதே இயக்கத்தின் வடிவம் பஞ்ச பூதங்களில் ஓயாமல் இயங்கி கொண்டே இருப்பதும் உலகை இயக்குவதும் அந்த அக்னிதான்
தீபம் என்பது என்றோ மின்சார விளக்கு இல்லா நாளில் பயன்பட்டது இன்று அது அவசியமில்லை என கருதினால் அதுதான் மூட்நம்பிக்கை
மின்சாரம் கொடுக்கும் ஒளியும் வெப்பமும் தீபம் கொடுக்கும் ஒளியும் வெப்பமும் மின்னலும் சூரியனும் கொடுக்கும் ஒளியும் வெப்பமும் தன்மையால் ஒன்றே
அந்த அடிப்படை ஒற்றுமை ஒன்றே
அதைதான் இறைவடிவமாக வணங்குகின்றோமே அன்றி வேறேதும் அல்ல என்பதால் தாரளமாக விளக்கேற்றி மகிழ்வோம்
திருவண்ணாமலை தீபம் என்பது இறைவன் ஒளிவடிவமானவர், அவரின் அக்னிவடிவம் ஒவ்வொருவர் உடலிலும்
உண்டு என்பதை சொல்ல்லும் பெரும் தத்துவம்
அதைத்தான் வீட்டு வாசலிலும் ஏற்றி வைத்து ஊரில் சொக்கபனை கொளுத்தி உணர சொன்னார்கள் இந்துக்கள்
விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லுதலும் நலம், இந்நாளில் யஜூர் வேதத்தின் அந்த அக்னி துதியினை சொல்லலாம்
ஸேதக்னே அஸ்து ஸுபகஸ்ஸுதானு:
யஸ்த்வா நித்யேன ஹவிஷா ய உக்தை:
பிப்ரீஷதி ஸ்வ ஆயுஷி துரோணே
விச்வவேதஸ்மை ஸுதினா ஸுதினா ஸாஸதிஷ்டி”
“அக்னியே, யார் ஒருவன் தனது இல்லத்தில் உன்னை ஏற்றி வைத்தும், உன்னிடத்தில் ஆகுதிகளைச் சமர்ப்பித்தும், உன்னை வழிபட்டும், துதி செய்தும் உன்னை மகிழ்விக்கிறானோ, அவன் பாக்கியசாலியாகவும், வள்ளல் தன்மை மிக்கவனாகவும் விளங்கட்டும்.
அக்னியான உன்னை வீட்டில் ஏற்றி வணங்குபவனுக்கு வாழ்வில் எல்லா நாட்களுமே ஆனந்தமான நாட்களாக அமையட்டும். தினந்தோறும் மங்களங்கள் பெருகட்டும். இதுவே உனது விருப்பமாகவும் இருக்கட்டும்” என்பது பொருள்
முருகபெருமானின் வடிவமும் அக்னி வடிவமே, அவ்வகையில் தமிழக இந்துக்கள் அக்னி வழிபாட்டைத்தான் செய்கின்றார்கள், கார்திகையில் கார்த்திகை தீப வழிபாடும் முருகனுக்குரியதே
அக்னியில் பிறந்த முருகபெருமானை அக்னி வடிவிலே வணங்கி இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம் இதுவும் அக்னிபகவானுக்கானது
“ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும்
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸநம்”
இந்துமதம் ஞான பெரும் மதம், அது சொன்ன சூட்சுமமான போதனைகளில் ஒன்று நெருப்பு இறைவடிவம், எல்லா நெருப்பும் அக்னியும் வெப்பமும் இறைவனே, அந்த பரம்பொருளும் அவனால் உலகை இயக்கும் அக்னி எனும் வெப்பமும் வேறு வேறு அல்ல
(விஞ்ஞானம் சொல்லும் ஆற்றல் விதியும் இந்த தத்துவ சாயலே, வேதங்கள் சொன்ன தத்துவத்தின் வடிவே)
அந்த அக்னியே எல்லா இடத்திலும் இருந்து பிரபஞ்ச உலகை இயக்குகின்றது, மானிடமும் அப்படியே இயங்குகின்றது. அகத்திலும் நெருப்பாய் அதுவே இருக்கின்றது
அந்த அக்னி ஞானத்தை தரட்டும், முழு ஞானத்தை தரட்டும் எல்லோருக்கும் ஞானத்தை தரட்டுமென இந்நாளில் வேண்டுவோம், ஞானம் தெளிவை தரும், அந்த தெளிவு வலுவான சிறந்த பாரத்தை தரும்
அப்படி ஒரு நிலையினை தேசமும் தேசமக்களும் அடைய விளக்கேற்றி பிரார்த்திப்போம்