காலமே உன்னை இணைத்தது, காலமே பிரித்தது
இந்த வாழ்வு எவ்வளவுக்கு எவ்வளவு ரசனையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ச்சிகளையும் வழங்க கூடியது, ஒரே ஒரு செய்தி மொத்தமாக புரட்டி போட்டுவிடும்
ஏன் உலகிற்கு வந்தோம், பலநூறு கோடி மக்கள் கொண்ட உலகில் ஏன் இந்த பகுதிக்கு வந்து இவர்களை எல்லாம் சந்திக்கின்றோம்?, நம்மை நடத்தும் விதி எது என நமக்கு தெரியாது
அது முதலாம் வகுப்பில் அப்பா அம்மாவினை தாண்டி காலடி எடுத்து வைப்பதில் தொடங்குகின்றது, வாழ்வு முடிவது வரை அப்பயணம் தொடரின்றது
அப்படி சரியாக 9ம் வகுப்பில் அறிமுகமானான் அவன், அந்த கறுப்பான வகுப்பில் அவன் நல்ல நிறம். சிறுவயதில் போலியோவினால் ஒரு கால் ஊனம் என்றாலும் அதை தன் சிரிப்பாலே மறைத்துகொண்டிருப்பான்
முளைவிட்டு வளர்ந்த இரண்டு மாத வாழை கன்றுகள் போல எல்லோரும் ஒன்றுபோல வகுப்பறையில் அமர்ந்திருந்த காலங்கள் அவை
அவனின் குறும்ம்பான பேச்சும், சிரித்த முகமும் பழகும் பாங்கும் அவனுக்கு ஒரு வட்டத்தை பெற்று கொடுத்தன
எல்லோரும் விளையாடினால் அவன் ஓரமாக அமர்ந்திருப்பான், ஆனால் அதில் கொஞ்சமும் சோகம் தெரியாது, தன் விதியினை தன் சிரிப்பால் வென்றுகொண்டிருந்தான்
12ம் வகுப்பு வரை அவன் நண்பன்
கல்லூரியில் அவன் என் விடுதிவாசி மற்றும் ஒரே வகுப்பு, கிட்டதட்ட 7 வருடம் தொடர்ந்து வந்த நட்பு அது
அவன் இளநிலையோடு படிப்பை முடித்து மும்பை சென்றான், அங்கு போராடினான்
செல்லும்பொழுது சாதாரணமாக சென்றவன் வரும்பொழுது நல்ல ஆளுமையாக மாறினான், அதிகம் படிக்கவில்லை என்றாலும் கணிப்பொறி உலகில் குறிப்பிடதக்க இடத்தை பிடித்தான்
ஜாவா உட்பட பல மொழிகளுக்கு புத்தகமும் எழுதினான், காலம் அவனுக்கு சாதகமாக மாறியது
நன்றாக கொட்டிகொடுத்த காலத்தில் அவன் மும்பையில் வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டான். அவனுக்கு காதலும் வந்தது அதுவும் கைகூடியது
கோடி அழகு கொட்டியது போல ஒரு பெண் குழந்தையும் காலம் அவனுக்கு கொடுத்தது
என்ன நடந்ததோ தெரியவில்லை, நன்றாக இருந்த அவன் வாழ்வில் மது அரக்கன் நுழைந்திருகின்றான். அவனும் எப்படி சிக்கினானோ தெரியவில்லை, சிக்கிவிட்டான்
ஒரு கட்டத்தில் அவன் மதுவினை விட்டிருக்கின்றான், ஆனால் அது அவனை விடவில்லை
அது உயிர்குடிக்கும் அளவு சென்று, நேற்று மாலை 38 மணிக்கு அவன் விதி முடிந்துவிட்டது
சிறுவயதில் இருந்தே தன் சோகத்தை எல்லாம் தன் சிரிப்பாலே கடந்த அவன், மதுவின் முன்னால் தோற்றிருக்கின்றான்
அவனுக்கு என்ன கவலை, அப்படி என்ன சிக்கல் என்பதை அவன் மனம் தவிர யாரும் அறியமுடியாது. எதையும் சிரிப்பாலே கடந்து செல்வது அவன் குணம்
ஆனால் மரணத்தை கடந்து செல்ல அவனால் முடியவில்லை
இப்பொழுதெல்லாம் இளவயது வாலிபர்களை குறிவைத்து தூக்கும் மது அரக்கனின் கைகளுக்கு அவனும் தப்பவில்லை
அது என்ன அரக்கன்?
விதி மதுவால் முடியும் என இருந்தால் அதை மாற்றும் சக்தி எவனுக்கு உண்டு.
அவனின் நினைவுகளில் இருந்து மீளமுடியவில்லை
அவனின் அந்த சிரிப்பு, அவன் பேசிய பேச்சுக்கள் அவனோடு உண்டு பழகி கணிபொறியினை தட்டிய காலங்கள்
உறங்காமல் தேர்வுக்கு படித்த நாட்கள், தியேட்டரில் சுற்றிய நாட்கள்
அந்த வாலிபத்திற்கே உரிய அந்த குறும்பான காலங்களின் நாட்கள்
அவன் அன்னையின் கரங்களால் நானும் அவனும் உண்ட நாட்கள்
இதுதான் சுற்றி சுற்றி வருகின்றது
அதை கொஞ்சம் மீறி எழுந்தால் அவன் மகளின் அந்த அழகிய முகம் மறுபடி வந்து நிற்கின்றது
அதை கண்டவுடன் உடைந்துவிட்ட அணை போல கண்ணீர் கொட்டுகின்றது
என்னருமை நண்பனே போய்வா,
மிக விரைவாய் வேலை தேடினாய், மிக விரைவாய் சம்பாதித்தாய், மிக விரைவாய் மரணத்தையுமா தேடவேண்டும்?
ஒவ்வொரு மரணமும் சில ஞானங்களை வழங்கும், உன் மரணம் முழு சோகத்தை தவிர ஒன்றையும் கொடுக்கவில்லை
நாம் ஒன்றாக உண்ட அந்த அறையில் உன்னை கிடத்தியிருக்கின்றார்களாம்
நாம் `சைக்கிள் ஓட்டிதிரிந்த வீதிவழியே உன்னை தூக்கி செல்ல போகின்றார்களாம்
நாமெல்லாம் கலாய்த்த ஆசிரியர்கள் உனக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றார்களாம்..
போய்வா நண்பனே போய்வா
இனி எங்கு திரும்ப வருவாய்? நீயும் வரமாட்டாய், அந்த காலங்களும் வராது
உன் மகளின் முகத்தில் உன்னை கண்டு ஆறுதல் அடைவதை தவிர வேறு என்ன வழி
இனி அழ கண்ணீரும் இல்லை, கதறி அழ வார்த்தையுமில்லை
நீ வாழா வாழ்வெல்லாம் உன் மகள் வாழட்டும், உனக்கு கிடைக்க தவறிய எல்லா நிம்மதியும் ஆயுளும் அவளுக்கு அமையட்டும்
காலமே உன்னை இணைத்தது, காலமே பிரித்தது
என்றேனும் ஒருநாள் உன்னை காண்பேன், அதுவரை அமைதியாக தூங்கு..
மீதி அன்று அழுது தீர்க்கலாம்
