காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று?

காவிய தலைவன் படத்திற்கு விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி : இயக்குனர் வசந்தபாலன்
உண்மையில் தமிழக அரசு இதனை தெரிந்து செய்ததா? தெரியாமல் செய்ததா என்று தெரியவில்லை, தெரியாமல் செய்திருந்தாலும் நல்ல விஷயம்
தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டார்கள்.
அந்த காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று? சாட்சாத் அந்த ராமசந்திரனை
பாய்ஸ் நாடக கம்பெனி ஆகட்டும், இன்னும் சில நாடக கம்பெனிகளாகட்டும், நாடக நடிகரான ராமசந்திரன் அந்த ராஜபாட்டை வேடத்திற்கு ஏங்கியிருக்கின்றார்
அது கிடைக்காமல் துக்கடா வேடத்தில் எல்லாம் நடித்திருக்கின்றார், பெண் வேடம் எல்லாம் அணிந்திருக்கின்றார்.
“சாமி எனக்கு வேடம் தாங்க சாமி..” என பிருத்விராஜ் ஏங்கி நின்ற காட்சிகள் எல்லாம் ராமசந்திரன் வாழ்வில் நடந்த உண்மை காட்சிகள்.
நாடக நடிகர் என்பதால் அவருக்கு கிடைத்த அவமானமும், புறக்கணிப்பும் ஏராளம். சினிமாவில் மின்னிய ராமசந்திரனை நமக்கு தெரியும், ஆனால் நாடக கம்பெனியில் பெரும் அவமானமும் , வலியும் சுமந்த ராமசந்திரனை பலருக்கு தெரியாது.
இந்த படத்தில் வருவது போலவே ஒரு நாடககாரனாய் வாழ்ந்த ராமசந்திரனே பின்னாளில் புரட்சி தலைவரானார், இந்நாளில் அவரின் கட்சி இன்னும் ஆட்சியிலிருந்தாலும் அதன் மூலம் அந்த நாடக கம்பெனியில்தான் தொடங்கியிருக்கின்றது
அந்த நன்றிவிசுவாசத்தினாலோ என்னவோ காவிய தலைவன் படத்திற்கு விருதினை அள்ளி கொடுத்திருக்கின்றார்கள்
நிச்சயமாக பிருத்விராஜ் சித்தார்த் சண்டையினை மறந்துவிட்டு பார்த்தால் அது மிக நல்லபடம், விருதுக்கு தகுதியான படம்
அந்த நாசர் கதாபாத்திரம் கூட தமிழக நாடக கலையினை சினிமாவிற்கு முன்னோடியாக நிறுத்திய சங்கரதாஸ் சுவாமிகளையும், கமலஹாசனின் குருவாகிய அவ்வை சன்முகத்தையும் நினைவுபடுத்தியது
இன்றைய சினிமாவில் நாடக கம்பெனியிலிருந்து நடிகரான கடைசி நாடக வாரிசு கமலஹாசனே.
அது இருக்கட்டும்
அதிமுக அரசுக்கு கொஞ்சமேனும் அடிமனதில் நன்றி இருந்திருக்கின்றது என்பதனைத்தான் காவிய தலைவன் படத்திற்கு விருது கொடுத்து நிரூபித்திருக்கின்றார்கள்
அவர்களின் பிதாமகனின் ஆரம்ப வாழ்வினை கண்முன் நிறுத்திய படத்திற்கு அவரின் நூற்றாண்டு விழாவிலும் விருது கொடுக்கவில்லை என்றால் எப்படி?
அதனால் வசந்தபாலனோடு எல்லோரும் அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம், இப்படி அரசு எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?