காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம்

இந்த காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம் யாரென்றால் ஆங்கிலேய அரசு அதுவரை காஷ்மீர் என்பது நேபாளம் போன்ற பூட்டான் போன்ற அமைதியான நாடு

சீக்கிய அரசை வீழ்த்தி பஞ்சாபினை பிடித்த வேகத்தில் ஆப்கனையும் பிடித்து அப்படியே மேற்கு நோக்கி சாலைபோடும் அசுர வேகத்தில் இருந்தார்கள், ஆனால் அமெரிக்க எழுச்சி இன்னபிற விஷயங்கள் அவர்களை கட்டுக்குள் வைத்தன‌

ஆயினும் ஆப்கன் போரில் தங்களுக்கு உதவிய ரன்பீர் சிங் என்பவனை காஷ்மீர் மன்னர் என மகுடம் சூட்டினார்கள், அவன் வழிவந்தவர்தான் ஹரிசிங்

அந்த சிக்கலுக்கு அவர் அல்லது அவர்கள் அல்லது இவர்கள் என ஆயிரம் காரணம் கூறபட்டாலும் இப்போதைக்கு பெரும் சிக்கல் காஷ்மீர் தகராறு.

இரு பெரும் அணுஆயுத நாடுகளின் விளையாட்டுகளம் அது, ஆனால் ஓடிகொண்டிருப்பது ரத்த ஆறு, கொதித்துகொண்டிருப்பது அவர்கள் மனம்.

ஈழ சிக்கலை விட பெரும் வலியானது காஷ்மீரீய வாழ்க்கை, வார்த்தையில் விளங்கிவிடாத வலி அது, இரண்டு விஷயங்கள் அவர்கள் அழுகைக்கு காரணம், ஒன்று அந்த அழகான பள்ளத்தாக்கு, இரண்டு அவர்கள் பெரும்பான்மை இஸ்லாமியராய் பிறந்து தொலைத்தது,

ஆனால் 1947க்கு முன் பெரும் சிக்கல் எல்லாம் இல்லை.

சிக்கல் எப்பொழுது வந்தது? இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் வந்தது.

அதாவது பிரிட்டிஷ் இந்தியா என சொல்லிகொண்டாலும், உண்மையில் அரசர்கள் ஊடாகவே வெள்ளையன் இந்தியாவினை ஆண்டுகொண்டிருந்தான், பிரிவினைக்கு பின் சில சமஸ்தானங்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க நினைத்தன,

ஆனால் பாகிஸ்தானும், இந்தியாவும் விடுவதாக இல்லை.

ஆரம்பத்தில் ஜூனாகத, ஐதரபாத்,ஜோத்பூர் என பல சமஸ்தானங்களை தங்களுடன் இணையுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திகொண்டிருந்தது அங்கெல்லாம் இஸ்லாமியர் அதிகம்.

காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகம், எனவே நிச்சயம் நமக்குத்தான் என அது பெரும் ஈடுபாடு காட்டவில்லை, ஆனால் உண்மை நிலையினை அவர்களுக்கு உணர்த்தியது ஜூனாகத்.

அதாவது அந்த‌ குஜராத்திய சமஸ்தானம், அது பொது வோட்டெடுப்புக்கு விடபட்டபொழுது பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்தியாவோடு இணைய விரும்பி, அப்படியே இந்தியாவோடு ஜூனாகத் இணைந்தது.

இதுதான் இந்திய அன்றைய யதார்த்தம், அன்றைய முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் அவ்வளவு உவப்பு அல்ல.

காஷ்மீரில் இப்படி வாக்கெடுப்பு நடத்தபட்டால் அதே “ஆபத்து” நிகழலாம் என அஞ்சிய பாகிஸ்தான் வேறுதிட்டத்தில் இறங்கியது, திட்டமென்றால் என்ன? அதே தீவிரவாதம்.

அன்று பூன்ச் மாவட்டம் பெரும் அகதிகளால் நிரம்பியிருந்தது, அகதிகள் என்றால் பிரிவினை கலவரத்தில் பாதிக்கபட்ட இந்து,சீக்கிய,இஸ்லாமிய அகதிகள்.

அங்கு நடந்த குழப்பத்தில் இஸ்லாமியருக்கு உதவபோகிறோம் என படையெடுத்தார்கள், இவை எல்லாம் நடந்தது 1947 ஆகஸ்டுக்கு பின்.

பெரும் குழப்பமான அரசியல் சூழல், எல்லா அல்லக்கை சமஸ்தானங்களையும் தங்களோடு இணைக்கவேண்டும் என ஜின்ன,லியாகத் அலிகான் ஒரு புறமும், நேருவும் படேலும் மறுபுறமும் தீயாக சுழன்றார்கள்.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் புகுந்தது, மன்னர் அரிசிங் செய்வதறியாது நின்றார், காப்பாற்ற ஒரு நண்பன் வேண்டும், அவரின் அந்நேர சிக்கல் வித்தியாசமானது.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு, இந்த மன்னரோ இந்து, பென்சன் கூட தராமல் அடிப்பது நிச்சயம். இந்தியா ஜனநாயக நாடு சேர்ந்தாலும் இங்கு எல்லோரும் சமம், முடிந்தால் தேர்தலில் நில் என்பார்கள், அதற்கும் ஷேக் அப்துல்லா விடமாட்டார், என்னதான் செய்வது?, யோசிக்க நேரமில்லை பாகிஸ்தான் படைகள் வந்தாகிவிட்டன.

தந்திரமாக காய்நகர்த்தியது இந்தியா, இன்று நீங்கள் பக்கத்து நாடு, நீங்கள் அழைக்காமல் நாங்கள் வரமுடியாது. அழையுங்கள் வருவோம் அதுவும் கடமைக்கு அவ்வளவுதான் தோற்றால் திரும்பிவிடுவோம், ஆனால் இந்தியாவோடு இணைவோம் என சொல்லுங்கள் உயிரை கொடுத்து போராடுவோம் என்றது.

மன்னர் சம்மதித்தார், 1947 அக்டோபர் 26ல் இந்தியாவோடு இணைந்தார், அதுவும் நிரந்தர இணைப்பல்ல, அவரும் தந்திரக்காரர்தான்.

அந்த 370ம் பிரிவு அதுதான், காஷ்மீரின் தனிதன்மை இழக்கமாட்டோம், எங்கள் கொடியினை ஏற்றிகொள்வோம், அந்நியர் நிலம் வாங்கமுடியாது ஆனால் எங்கள் பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பு என்பன போன்ற ஒப்பந்தம் அது.

(முன்பு மோடி அரசு, இந்த ஒப்பந்ததை ரத்து செய்ய வழக்கு தொடுத்தபொழுது அந்த நீதிபதிகள் கேட்டார்கள், யோசித்துத்தான் சொல்கின்றீர்களா? இதனை ரத்து செய்த மறுநிமிடம் காஷ்மீர் இந்தியாவில் இருக்காது

இந்த செய்தி எங்காவது வருமா? வராது)

அப்படி இந்திய படைகள் காஷ்மீருக்குள் நுழைய, பாகிஸ்தான் ஏற்கனவே ஒரு பகுதியினை பிடித்ததிருந்தது, அதோடு இருவரும் கோடு போட்டு பெயரிட்டு கொண்டார்கள், இந்திய தரப்பில் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர்.

அவர்கள் தரப்பில் அது சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்), சுதந்திர காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு என்ன வேலை?

முதலில் இந்த பிரச்சினையினை ஐ.நாவிற்கு கொண்டு சென்றது இந்தியா, பொது வாக்கெடுப்பு எடுங்கள் என்றது ஐ.நா. பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேறிவிட்ட பின்னர்தான் அது சாத்தியம் என்றது இந்தியா, அது உண்மையும் கூட.

ஆம் பொதுவாக்கெடுப்பு என்றால் முதலில் பாகிஸ்தான் தன் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும், ஆனால் செய்வார்களா? பின் என்ன வாக்கெடுப்பு?

அதன் பின் இதற்காகவே இரு போர்கள், அப்பொழுதும் பிரச்சினை தீரவில்லை. இதில் திபெத் யுத்ததின் போது இந்திய காஷ்மீரின் ஒரு பகுதி சீனாவிடம் இழக்கபட்டது, அதில் பாகிஸ்தானுக்கு மகா கொண்டாட்டம்.

மொத்தத்தில் 3 அணுஆயுத அரசுகளிடம் சிக்கிகொண்டு தவிக்கின்றது அந்த அழகு நாடு. நிச்சயமாக அவர்கள் தனியாகத்தான் வாழ விரும்புகின்றார்கள், ஆனால் 1980ம் நிலை அவர்களை மீண்டும் பாதித்தது.

கவனியுங்கள் 1980வரை பெரும் தீவிரவாதிகள் அங்கு கிடையாது, காரணம் சோவியத் என்பது ஆப்கன் வரை இருந்தது ஒரு பக்கம்.

ஆப்கன் யுத்தமும், அதற்கு பாகிஸ்தான் உருவாக்கிய பெரும் தீவிரவாத அமைப்புக்களும், ஆப்கனை விட்டு ரஷ்யா வெளியேறியதும், பின் அனைத்து தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் உத்தரவு கொடுத்தன, இனி காஷ்மீரிய விடுதலை.

(நிச்சயமாக சொல்லலாம், 1980களில் பஞ்சாப் பற்றி எரிந்ததற்கும், அதன் பின் காஷ்மீர் இந்நிலைக்கு வந்ததற்கும் மகா முக்கிய காரணம், 1980 ஆப்கன் போர். அதற்கு அமெரிக்கா அள்ளி வீசிய பணம், உருவாக்கி விட்ட தீவிரவாதம். தீவிரவாதம் என்பது ஒரு குட்டிசாத்தான் போன்றது ஓயாத வேலை கொடுக்காவிட்டால் ஆசானையே அழிக்கும்.

அப்படித்தான் காஷ்மீரில் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தினாலும், விரட்டபட்டது, பின் குட்டிசாத்தான் பாகிஸ்தானையும், பெரும் பூதம் அமெரிக்காவினையும் ஆட்டிகொண்டிருக்கின்றது.)

உண்மையில் பாகிஸ்தானோடு இணையும் எண்ணம் அவர்களுக்கு இல்லை, ஆனால் நாங்கள் மட்டுமே ஆதரவு என்று இவர்களாக புகுந்து ஆடுகின்றார்கள், இந்திய ராணுவத்தை தாக்குவது, பதிலுக்கு ராணுவம் பொதுமக்களை தாக்கும், பின் மக்களுக்கு தானாக இந்தியா மீது வெறுப்பு வரும். இந்தியா இன்னும் படைகளை குவிக்கும், வெறுப்பு கூடும்.

ஈழத்தில் இப்படித்தான் இந்திய ராணுவம் மேல் மக்களுக்கு வெறுப்பு வரை வைத்தனர் புலிகள்

காரணம் ராணுவ கட்டுபாடு என்பது மகா கொடுமையானது, திருமண வீடு என்றால் கூட மணமகனின் உடை கூட ராணுவ அனுமதி வேண்டி நிற்கும்.

இந்த தந்திரவிளையாட்டுக்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஆடிவருவது பாகிஸ்தான், இந்தியாவிற்கு சியாச்சின் போன்ற ராணுவ கேந்திரம் ஒரு புறம், தலைநகருக்கு அருகிலுள்ள மாகாணம் ஒருபுறம் என ஏகபட்ட சிக்கல்களில் காஷ்மீரை தக்கவைக்க கடும் போராட்டம் நிகழ்த்துகின்றது.

ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் அம்மக்கள் தனி காஷ்மீரைத்தான் விரும்புகின்றனர், இதனை இரு வல்லரசுகளும் வெளியே சொல்லாது, அவகளை சொல்லவும் விடாது.

காஷ்மீரிய மக்களின் மனதினை வென்றுவிட்டாலே அமைதி திரும்பும், அதாவது அவர்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என மனதில் நம்பவைக்க வேண்டும்.

அதனை விட்டுவிட்டு மாட்டுகறி உண்ணாதே என்பதோ, அல்லது கல் வீசி விளையாடுவதோ நிச்சயம் நொந்துகிடக்கும் அவர்களின் மனதினை மேலும் நோகவைக்கும், அவர்களுக்கும் இந்தியாவிற்கு உள்ள ஒரே இணைப்பு 370ம் சட்ட பிரிவு.

இன்றைய மாட்டுகறி பரிவார சங்கங்கள் அதனை ரத்து செய்யவேண்டும் என்கிறது, அந்த ஒப்பந்தம் இணைப்பு பாலம் போன்றது, அது ரத்து செய்யபட்டால் நிச்சயம் காஷ்மீர் தனிநாடு அல்லவா? இதெல்லாம் இவர்களுக்கு புரியாது, புரிந்தாலும் காட்டிகொள்ளமாட்டார்கள்.

இந்த அரசு நடந்துகொள்ளும் முறையும், மிக கடுமையான இந்துமத மிரட்டல்களும் நிச்சயம் காஷ்மீரிகளுக்கு மகிழ்ச்சி தராது, இந்த துவேஷத்தை பாகிஸ்தான் மிக அழகாக பயன்படுத்திகொள்ளும் வாய்ப்பு அபாயகரமானது.

மாட்டுகறி வைத்திருக்கவே உரிமை இல்லா இந்தியாவில் நீங்கள் வாழமுடியுமா? மார்க்கபூமிக்கு வாருங்கள் என அழைத்தால் விளைவு என்ன ஆகும்?

காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சிக்கல் உண்டு, அவர்களின் உணர்வினை மதித்துநடந்தால் நாட்டிற்கு பாதகமில்லை.

எதனையோ காப்பாற்ற, எங்கோ சுற்றி, எப்படியோ காஷ்மீரில் இதுகாறும் தன் பிடியினை விடாமல் பிடித்திருக்கின்றது இந்தியா, காரணம் அதனை விட்டால் இந்தியா சந்திக்கும் சவால்கள் மிக பெரிது.

இந்தியா அப்படியான அமைப்புத்தான், அதனால்தான் நம்மால் சொல்லமுடியும், ஈழ பிரச்சினையினை தமிழக முதல்வர் தீர்க்கவே முடியாது, நேபாளிகளின் மாதேசி பிரச்சினையினை , பீகாரிய முதல்வரால் தீர்க்கமுடியாது, அப்படி மாநில முதல்வர்கள் கிழித்து எரியமுடியுமானால் காஷ்மீர் எப்பொழுதோ தனிநாடாக மாறி இருக்கும்.

அதனால்தான் தமிழக மேடைகளில் டெல்லி என் காலில் விழும், அவனை செருப்பால் அடித்து தமிழகத்தை மீட்பேன் போன்ற முழக்கங்களை எல்லாம் புன்னகையோடு பார்த்துவிட்டு நகரமுடிகின்றது, காஷ்மீரும் பஞ்சாபும் சொல்லிகொடுத்த பாடங்கள் அப்படி.

எப்படியோ இந்த அரசிற்கு பெரும் சவால்களில், காஷ்மீரிய மக்களின் மனங்களை வெல்லும் சவாலும் உண்டு, வெல்லாவிட்டாலும் பராவாயில்லை, மாட்டுகறி 370 ரத்து என நோகடிக்காமல் இருந்தால் போதும்.

மீறி அவர்களை சீண்டிகொண்டே இருந்து, அவர்கள் துயரம் கூடிகொண்டே சென்று, பெரும் கொந்தளிப்பானால் என்ன ஆகும்? ஒரு சுபநாளில் பாகிஸ்தானே அறிவிக்கும், 65 ஆண்டுகளாக அறிவிக்காத அறிவிப்பினை இப்படியும் அறிவிக்கலாம்

“காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வசதியாக ஆசாத் காஷ்மீரில் இருந்து வெளியேற தயார், ஆனால் ஐ.நா பாதுகாப்போடு அது நடக்கவேண்டும், அப்படி எம்மோடு இணைய தயார் என்றால் மானசீகமாக சேர்த்துகொள்வோம்” என்றால் இந்தியாவின் நிலை மகா சிக்கலாகும்,

சர்வதேசம் முன் இந்தியா குப்புற கிடக்கும். எந்த அரசுக்கும் இல்லா பெரும் தலைகுனிவு இவர்களுக்கு வரும்.

இதுதான் இந்திய யதார்த்தம், ஒரு சகிப்புதன்மையாலும், மத சமத்துவத்தாலும் மட்டும் அமைதியாக வழிநடத்தபட வேண்டிய நாடு இது.

சர்ச்சைகள் இருந்தாலும் முன்பு காஷ்மீரிய போராளி யாசின் மாலிக்கின் பேட்டி ஐரோப்பிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, இந்திய தொலைகாட்சியில் அது சாத்தியமில்லை, அதுவும் தமிழக தொலைகாட்சிகள் நடிகர்சங்கம், தமிழகம், அதுவும் இப்பொழுது ஸ்டூடியோ காட்சிகள், இதனை தாண்டவே மாட்டார்கள், ஐரோப்பியர்கள் இதில் பாராட்டதக்கவர்கள்.

அதில் யாசின் சொன்னார், “நாம் எமது வருங்கால சந்ததி பற்றி கவலைபடுகின்றோம், எமது வாலிபர்களுக்கு சராசரி சமூக வாழ்வில்லை, ராணுவத்தாலும், காவல்துறையாலும் தினம் தினம் சித்திரவதை அனுபவிக்கின்றோம், இதில் நாங்கள் அவர்கள் எங்கு படிப்பார்கள்? மேல் நாட்டவர் போல் காதலித்து குடும்பமாவார்கள், நிச்சயம் வாழ்வை தொலைத்து நிற்பார்கள்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரிக்குள் இருக்கும் எமது உறவினரை பார்க்க ஆயிரம் சட்டங்கள், அந்த கோட்டினால் பிரிந்திருக்கும் உறவுகள் சொல்லி மாளாது, நாங்கள் காஷ்மீரிகள், ஆனால் இருவரும் கோடிட்டு கொண்டு இது இந்தியா, அது பாகிஸ்தான் என எங்களை பிரித்திருக்கின்றார்கள், ஆயிரம் ஆயிரம் காலம் காஷ்மீரிகளாக வாழ்ந்தவர்களை திடீரென இந்தியர்,பாகிஸ்தானியர் என அடையாளமிட்டால் மனம் தாங்குமா?

எமக்கு அமைதி வேண்டும், கூடவே உலகிலே மிக தாராளமாக சிந்தபடும் இந்த காஷ்மீரிய ரத்தத்தினை பற்றி கவலைபட ஒரு ஆதரவு போதும், அது இந்தியாவா? பாகிஸ்தானா? அல்ல நாங்களே ஆண்டுகொள்ளும் சுதந்திர காஷ்மீரா? எதுவானாலும் சரி.

நாங்கள் அமைதியாக வாழவேண்டும், நிச்சயம் வாழவேண்டும்..”, இதுதான் உண்மையான காஷ்மீரிய வலி, எங்களை அமைதியாக வாழவிடுங்கள் எனும் மன்றாடல்.

உண்மையில் அவர்கள் அமைதியாக வாழ விரும்புகின்றார்கள், வாழவிட சொல்கின்றார்கள்

அவர்கள் இந்தியாவினை நம்பியவர்கள், சொந்த மதமானாலும் கடுமையான போக்குகளை உடைய அந்த நாடு வேண்டாம், இந்த இந்தியா நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு இணைந்தவர்கள். ஐதரபாத், ஜூனாகத், இந்திய காஷ்மீரி என எல்லோரும் அந்த நம்பிக்கையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அந்த நம்பிக்கையினை காக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

ஆம் இத்தேசம் ஒவ்வொரு காஷ்மீரியின் நியாயமான குரலுக்கும் செவிசாய்க்கின்றது என்ற நம்பிக்கையும், இந்தியாவில் தாங்கள் மிக நலமாக நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினையும் பெற வேண்டியது அரசின் கடமை, பிரதான அரசியல்வாதிகளின் கடமை

மதத்தின் பெயராலும் இன்னும் பல சக்திகள் பெயராலும் அவர்களை பார்ப்பது முற்றிலும் தவறானது

அவர்களின் மனதை வென்றெடுக்க வேண்டும், அவர்களின் நம்பிக்கையினை பெற வேண்டும்

அதனை முழுமையாக பெற்றால் அங்கு ஆப்கனின் கூலிபடையோ இல்லை பாகிஸ்தானின் நரிப்படையோ புகுந்துவிட முடியும்?

இந்நாடு எல்லா மக்களுக்கும் மதங்களுக்கும் பொதுவானது என்ற நம்பிக்கையும் பாதுகாப்பும் விதைக்கபட வேண்டும்

ராணுவபலத்தில் அங்கு காவலிருக்கலாமே தவிர மற்றபடி சிக்கல் ஒருநாளும் தீரபோவதில்லை, காஷ்மீரிய மக்கள் மனங்களை வெல்லாமல் அங்கு மாற்றங்கள் வரப்போவதில்லை

(கேயாஸ் தியரி என்பார்கள் அல்லவா, உலகின் ஒவ்வொரு சம்பவம் ஒவ்வொரு விளைவினை ஏற்படுத்தும் என்பார்கள் அல்லவா?

அப்படி இந்த ஹரிசிங் செய்த விஷயங்கள் இன்றுவரை தொடர்ந்து யாரெல்லாமோ செத்துகொண்டிருக்கின்றார்கள்)