கிறிஸ்தவம் என்பது என்ன?

சில கிறிஸ்தவர்கள் கிளம்பி இருக்கின்றார்கள், மோடி ஒரு பாசிச இந்துத்வா, பாஜக ஒரு கிறிஸ்தவ அழிவு சக்தி, இனி இந்தியாவில் கிறிஸ்துவத்திற்கு ஆபத்து, மகா ஆபத்து, இனி கிறிஸ்தவன் இங்கே வாழமுடியாது என பல வகையான ஒப்பாரி

கிறிஸ்தவம் என்பது என்ன? குளிர்ந்த நீரில் மலர் தூவி ஆடும் நன்னீர் குளியலா? அது அன்றிலிருந்தே நெருப்பாறு.

யூதமதம் அதனை ஓட ஓட விரட்டியது, கிறிஸ்தவம் வளர்ந்தது

அந்நாளைய உலகின் ஒரே பெரும் வல்லரசனான ரோமாபுரி கிறிஸ்துவத்தை படுத்தியபாடு கொஞ்சமல்ல, கிட்டதட்ட 200 ஆண்டுகாலம் அது நீடித்தது

எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லபட்டார்கள், எத்தனை ரத்த ஆறுகள் ஓடின, லட்ச்கணக்கான வகைகளில் கொல்லபட்ட கிறிஸ்தவர் எண்ணிக்கை என்ன?

கொலோசியம் எனும் அந்த கொடூர மைதானம் அதற்கே பயன்பட்டது

அப்படி ரத்தகளறியில் வளர்ந்ததுதான் கிறிஸ்தவம், அப்படிபட்ட வரலாறு அதற்கு உண்டு,

ஆக நல்ல கிறிஸ்தவன் மிரட்டலுக்கும், சாவுக்கும் அஞ்சமாட்டான்.

“ஏய் சங்பரிவார் அமைப்புக்களே மிரட்டுகின்றீர்களா? பிரச்சினையில்லை, கொல்லபோகின்றீர்களா வாருங்கள், கொல்லுங்கள், எம் மத முன்னோடிகள் பால், பீட்டர் போல கிறிஸ்துவிற்காய் சாக நான் தயாராக இருக்கின்றேன்

ரோமானியர் காலங்கள் போன்ற எத்தனையோ இடர்பாடுகளை கடந்தது கிறிஸ்தவம்

உங்களால் எங்களை கொல்லமுடியுமே தவிர, எங்கள் ஆன்மாவை அல்ல, வாருங்கள் கொல்லுங்கள்” என சொன்னால் அவன் கிறிஸ்தவன்

அதனை விட்டுவிட்டு அமைதியாக வாழும் நாட்டில், எல்லா சுதந்திரங்களும் கிடைத்திருக்கும் நாட்டில் இருந்துகொண்டு அது இந்துத்வா, இது சந்துத்வா என புலம்புவது கிறிஸ்தவம் ஆகாது

நற்செய்தி பரப்புவதாக சொல்கின்றீர்கள், அவர்களை போய் வம்பு இழுக்கின்றீர்கள், அடித்தால் அடிவாங்க வேண்டும், கொன்றால் சாக வேண்டும் அவனல்லவா கிறிஸ்தவன். அப்படித்தான் கிறிஸ்தவம் வளர்ந்தது

ஆக இந்த கிறிஸ்தவர்கள் இந்துத்வா என சாடுவதும், பாஜகவினை திட்டுவதும் கிறிஸ்தவ வாழ்வே அல்ல. கிறிஸ்துவில் மிக உண்மையான விசுவாசம் உள்ள கிறிஸ்தவன் இப்படி எல்லாம் பேசமாட்டான்

உங்களால் என்ன செய்துவிட முடியும்? என நகர்ந்து செல்வானே அன்றி இப்படி அஞ்சி கத்தமாட்டான்

பைபிளில் வரும் விசுவாசகுறைவு என்பது இதுதான், இதுவேதான் ஆனால் கையில் பைபிளை கையில் வைத்துகொண்டே அலறுகின்றார்கள்

கவனித்து பார்க்கின்றேன், விசுவாசமுள்ள, வரலாறு அறிந்த, நம்பிக்கையுள்ள நல்ல கிறிஸ்தவன் எவனும் இந்த இந்துத்வா அது இது என கத்தவில்லை., அவர்கள் புன்னகைக்கின்றார்கள் அவ்வளவுதான்

கிறிஸ்தவ வாழ்வு என்றால் ஆயிரம் தடை என அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது

பின் கத்துவது யார்?

கிறிஸ்துவின் பெயரால் பிழைப்பு நடத்துபவன், சிறுபான்மை பெயரில் கல்வி வியாபாரம் செய்பவன், மருத்துவமனை நடத்துபவன், வெளிநாட்டு நிதிகளுடன் பள்ளி நடத்துபவன் போன்ற பிழைப்புவாத கிறிஸ்தவனே கொந்தளிக்கின்றான்

அது கிறிஸ்தவம் ஆகாது

கிறிஸ்தவ வாழ்வு நிச்சயம் இப்படியானது, சவால் நிறைந்தது. பூக்கள் நிறைந்த பாதை அல்ல, பல சிக்கல் நிறைந்தது

அதனை கடந்து செல்ல வேண்டுமே தவிர இப்படி கத்தி அரசியல் செய்ய கூடாது

ஆயினும் ஒரு கிறிஸ்தவன் எல்லா உரிமைகளும் கொண்டிருக்கும் நாட்டில், தன் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என அலறுவதும், கொடிபிடிப்பதும் கண்டிக்கதக்கது

இவர்கள் இந்துத்வா, மதவாதம் என பயங்கர அழிச்சாட்டியம் செய்வதை அந்த கிறிஸ்து பெருமானே விரும்பமாட்டார், இவர்களை கிறிஸ்தவர்கள் அன அவரே ஒப்புகொள்ளமாட்டார்

அவருக்கு இதெல்லாம் அறவே விருப்பமில்லா விஷயங்கள்.

உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தினை தங்கள் உறுதியால் நம்பிக்கையால் மட்டும் காப்பார்களே அன்றி, அடுத்தவர் மேல் வெறுப்பை கொட்டி அல்ல.

இந்திய கிறிஸ்தவர்கள் அப்படி வாழ்ந்தால் எல்லோருக்கும் நல்லது, கிறிஸ்துவத்திற்கும் நல்லது. கிறிஸ்துவும் மகிழ்வார்.

உண்மையில் கிறிஸ்துவம் சகோரத்துவம் பேசும், சமத்துவம் பேசும். இங்கு என்ன நடக்கின்றது? இந்திய கிறிஸ்துவம் சாதி பேசுகின்றது, மொழி, இன‌ பிரிவினை என பல சிக்கல்களில் அது திசைமாறி நிற்கின்றது

முதலில் கிறிஸ்து சொன்ன மனிதநேயமும், சகோதரத்துவமும் பேசுங்கள், செயலில் காட்டுங்கள்

கடவுளடையதை கடவுளுக்கும், அரசனுக்குரியதை அரசனுக்கும் செலுத்துங்கள் என சொன்னவர் இயேசு,

அதாவது எந்த அரசாங்கம் என்றாலும் ஏற்றுகொள்ளுங்கள், ஆனால் அன்பான வழியில் வாழுங்கள் என்பதே பொருள்

அந்த அன்பினில் வாழ தொடங்கினால் யாரையும் இப்படி எதிரியாக பார்க்கமாட்டீர்கள்

சங் பரிவார அமைப்பும், ஆர்எஸ்எஸும் , பாஜகவும் அப்படி சகோதரர்களாகவே தெரிவார்கள்

எனக்கு அப்படித்தான் தெரிகின்றார்கள், எல்லாம் கிறிஸ்துவினை மனதில் கொண்டு பார்க்கும் பார்வையிலும் சிந்தனையிலுமே இருக்கின்றது.

உண்மையில் உங்கள் மனதில் கிறிஸ்து இருந்தால் இப்படி யார் மீதும் வெறுப்பும், பயமும் வராது, வரவே வராது.