கில்லாடி கிளைவ் : 02
கில்லாடி கிளைவ் : 02
கிளைவ் இந்தியா வந்த காலகட்டத்தை புரிந்து கொள்ள, இரு விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்
முதலாவது ஐரோப்பிய நிலமை, அங்கே தீரா யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. வலிமையான கடற்படையினை கொண்ட பிரிட்டன் ஒருபக்கம், அதற்கு சவால்விடும் ஸ்பெயினும் பிரான்சும் இன்னொரு பக்கம் இது போக ரஷ்யா, பிரஷ்யா, இத்தாலி என ஏக சண்டைகள்
சண்டை எதற்கென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஐரோப்பா தாண்டி சண்டையிட அவர்களுக்கு அன்று இடமில்லை.
அன்று உலக வல்லரசான துருக்கியர் பக்கம் வந்தால் தொலைத்துவிடுவார்கள், இன்னொரு பக்கம் செங்கிஸ்கானின் மங்கோலிய வம்சம் வலுவாய் இருந்தது, அங்கெல்லாம் சென்றால் தொலைத்துவிடுவார்கள் என்பதால் ஐரோப்பியர் உள்நாட்டிலே சண்டையிட்டு கொண்டார்கள்
வியாபாரம் தொடர்பான சண்டைகள் அவை
ஆங்கில கால்வாய் யார் கையில் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி ஐரோப்பாவின் வியாபாரத்தை ஆட்டி வைப்பது யார்? என்ற அதிகார போரும் அவர்களுக்கு இருந்தன
போப்பாண்டவரின் பொற்காலம் முடிவுக்கு வந்தபின் அவர் சொல்லை யாரும் கேட்பதாகவும் இல்லை, அதுவரை அவர் வைத்தது சட்டமாயிற்று, சிலுவை போருக்கு பின் மார்ட்டின் லுத்தர் திருச்சபையினை உடைத்த பின் அவரின் நிலை பாஜக அத்வாணி போல் இருந்தது
இப்படி அடிக்கடி ஐரோப்பா போர்களை சந்தித்த நேரமிது, தமிழக அரசியல் போல் யார் யாருடன் எப்பொழுது கூட்டணி சேர்ந்து யாரை அடிப்பார்கள் என்றே தெரியாது
ஐரோப்பா நிலை அப்படி இருக்க இந்தியா நிலை வேறுமாதிரி இருந்தது
மொகலாய சாம்ராஜயத்தினை நாதிர் ஷா குதறிவிட்டு செல்ல, புதுபுது அரசுகள் உதித்தன
அதில் வளமான பஞ்சாபில் சீக்கிய அரசும், இன்னொரு மிக வளமான பகுதியான வங்காளத்தில் நவாப் அரசும் வந்தன, சீக்கிய அரசு தன்னை தனி அரசாக அறிவித்தது, வங்கத்து நவாப் முகலாய அரசருக்கு அடங்கி இருப்பதாக சொல்லி தனி அரசு நடத்திகொண்டிருந்தார்
இந்நிலையில் தென்னிந்தியாவில் ஆற்காடு நவாப் கோஷ்டி தனி ஆவர்த்தனம் தொடங்கியது
யார் ஆர்க்காடு நவாப்? இப்பொழுது கூட ஆற்காடு இளவரசர் என்றொருவர் உண்டு, இஸ்லாமிய இப்தார் விருந்தில் நோன்பு கஞ்சி எல்லாம் குடிப்பார், கலைஞர் இறந்தது பற்றி விசாரிக்க கோபாலபுரம் எல்லாம் சென்றார்
யார் இவர்கள்? இவர்கள் பூர்வீகம் என்ன?
தமிழகம் மாலிக்காபூர் படையெடுத்த காலத்திலே டெல்லி அச்சுறுத்தலுக்கு உள்ளானது, கொஞ்ச காலம் நாயக்க மன்னர்கள் அவர்களை விரட்டி காவல் இருந்தனர்
நாயக்க மன்னர்களின் உட்கட்சி விவகாரங்களில் அது வலுவிழந்த நிலையில், மராட்டியர்களின் ஆதிக்கம் தஞ்சையில் வந்தது, இது அவுரங்கசீப் கண்களை உறுத்தியது
அவுரங்கசீப் தென்னகம் முழுக்க தன் ஆட்சியினை கொண்டு வந்தார், அவரின் படை தளபதிகளாக வந்தவர்கள் இவர்கள்
(இப்படி செஞ்சி பக்கம் வந்த முகலாயரில் இருந்த ராஜபுத்திர படை தளபதிதான் சொரூப் சிங், அவர் ஒரு இந்து. செஞ்சி கோட்டையின் நாயக்கரை அடக்கிவிடு அவர் மன்னராக அமர்ந்தார், அவர் மகன் தான் தேசிங்கு ராஜன்
பின் அவரும் தன்னை தனி அரசராக அறிவித்து நவாபுடன் போராடி செத்தும் விட்டார்)
நாங்கள்தான் நவாப் என்று ஆற்காடு பக்கம் அமர்ந்தும் விட்டார்கள், அன்றைய ஆற்காடு பாலாறு பக்கத்தில் வளமான ஊராக இருந்திருக்கின்றது
இன்னொன்று அந்த ஆட்சி பகுதியின் மையமாகவும் இருந்தது, இதனால் கோட்டை கட்டி அமர்ந்து கொண்டார்கள், நிர்வாகம் செய்ய எளிது
அங்கிருந்து கன்னட பகுதிகள், ஆந்திர பகுதிகள் நெல்லை கன்னியாகுமரி வரை நவாபின் ஆட்சி இருந்திருக்கின்றது, கட்டபொம்மனின் முப்பாட்டன் எல்லாம் அவருக்கு கப்பம் கட்டி இருந்திருக்கின்றார்கள்
சுருக்கமாக சொன்னால் கிருஷ்ணா நதி முதல் தாமிரபரணி வரை எல்லாமே நவாப் ஏரியா
இதில் ஒரு சந்தேகம் வரலாம், மைசூர் சமஸ்தானம் இதில் வராதா? அன்று மைசூர் எல்லாம் சிறிய இடம், காவேரியின் மொத்த விளைச்சலும் தஞ்சாவூர் பக்கமே இருந்தது
இப்படியாக ஆட்சி செய்த கருநாடக நவாப்கள் அவுரங்கசீப் காலம் வரை ஒழுங்காக டெல்லிக்கு கப்பம் கட்டி சமத்தாக இருந்தனர்
இன்னொரு பக்கம் நோக்கினால் ஆப்கன் முதல் தாமிரபரணி வரை மொகலாய நாடாகவே இந்தியா இருந்திருகின்றது
ஆனால் அந்த அரசு ஆட்டம் காணவும், “இந்தா பெரிசு இவ்வளவுதான் கப்பம் முடிஞ்சா வச்சிக்க , இல்லண்ணா சாவு , கருநாடக பகுதிக்கு நானே ராஜா” என ஆட்டம் போட ஆரம்பித்தனர்
அதுவரை வாரிசு சண்டை என்றால் டெல்லி தலையிட்டு “செய்றது அடியாள் வேலை, இதுல சண்டையா?? ஒழுங்கா இருப்பீர்களா இல்லை இன்னொரு நவாபை தயார் பண்ணட்டுமா” என்றால் சத்தமே வராது
ஆனால் அப்படி மேலே ஒரு சக்தி இல்லை என்றதும் இங்கு கர்நாடக நவாப்கள் ஆட்டம் போட தொடங்கினர்
வடக்கே மராத்தியருக்கும் எஞ்சி நின்ற மொகலாய அரசுக்கும் பெரும் சண்டை எல்லாம் நடந்திருக்கின்றது, மராத்தி குழுக்களில் நல்ல அரசுகளும் இருந்திருக்கின்றது, இந்த கொள்ளைகார கும்பலும் இருந்திருக்கின்றது
நல்ல அரசுகள் என்றால் தஞ்சைக்கு வந்தது போல சமத்தான மராட்டியர்களும் உண்டு, அவர்கள் எவ்வளவு சமத்து என்றால் ஆற்காடு நவாபிற்கு வரி கட்டிவிட்டு அவர்கள் போக்கில் இருந்திருக்கின்றார்கள்
ஆனால் வடக்கே வங்கம் வரை கொள்ளை அடித்திருக்கின்றார்கள்
மராத்தியருக்கும், மொகலாயருக்குமான அதிகார போட்டி அடுத்து இந்தியாவினை ஆளபோவது இந்து ராஜ்யமா? இஸ்லாமிய ராஜ்யமா என்ற அளவிற்கு மத ரீதியாகவும் இருந்திருக்கின்றது
கடுமையான சண்டைகள், கொள்ளைகள் எல்லாம் வடக்கே நடக்க, தெற்கே இந்த ஆர்காடு நவாப் வாரிசு சண்டையில் இருந்திருக்கின்றது
இந்த ஆர்காடு நவாபிற்கு துணையாக களமிறங்குகின்றனர் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள்
உண்மையில் அவர்கள் அன்று தமிழகத்தில் வலுவாக இருந்தனர். பிரிட்டனின் கிழகிந்திய கம்பெனியினை காட்டிலும் பிரான்சின் கிழக்கிந்திய கம்பெனி பெரும் சக்தியாய் இருந்தது
இந்தியாவில் வியாபாரம் செய்த ஐரோப்பியரில் அவர்களே வலுவானவர்கள், பிரிட்டானியர் எல்லாம் அவர்களிடம் அஞ்சி கிடந்தனர்
பிரான்ஸ் வீரர்களின் ஆயுதமும், பயிற்சியும் சில இடங்களில் அவர்கள் காட்டிய வீரமும் அவர்களுக்கு இந்தியாவில் பெரும் பெயரை பெற்றுகொடுத்தன. பிரிட்டன், டச்சு, போர்த்துகீசியர் எல்லாம் கணக்கிலே இல்லை
அந்த பிரெஞ்ச் படைகளுக்கும் ஒரு தலைவன் இருந்தான் அவன் பெயர் டூப்ளே
(இன்றும் அவன் சிலை புதுச்சேரியில் உண்டு)
பெரும் வீரனோ இல்லை களத்தில் முன்னால் நின்று சண்டை இடுபவன் அல்ல ஆனால் பாகுபலி நாசர் போல் மகா தந்திரசாலி. இந்திய யதார்த்தத்தை அணு அணுவாக புரிந்து வைத்திருந்தான்
கர்நாடக நவாபாக ஆளபோவது யார் என இங்கு ஆற்காடு கும்பல் மோதிகொள்ள, அங்கே இந்தியாவினை ஆளபோவது யார் மராத்தி இந்துக்களா? இல்லை இஸ்லாமியரா என அவர்கள் அடித்துகொள்ள..
புதுச்சேரி பக்கம் அமைதியாக , கம்பீரமாக சொல்லிகொண்டிருந்தான் டூப்ளே, என்ன சொன்னான்?
“இந்தியாவினை இனி ஆளபோவது இஸ்லாமியரோ, இந்துக்களோ அல்ல. ஐரோப்பிய பிரான்ஸ் கிறிஸ்தவர்கள்
இத்தேசம் முழுமையினையும் கைபற்றி மாபெரும் பிரான்ஸ் காலணி அமைக்க போகின்றேன், இந்த ஆற்காடு நவாப் குடும்பத்தில் இருந்து அதனை தொடங்க போகின்றேன்
ஆம் இந்தியாவில் கிறிஸ்தவ அரசை நிறுவ போகின்றேன்”
அவனுக்கு வாய்ப்பும் இருந்தது ஆற்காடு நவாபுகள் அவனை கொண்டாடிகொண்டிருந்தனர், ஏதும் யுத்தம் வந்தால் தங்களை பிரென்ஞ்காரர்கள் காப்பார்கள் என நம்பிகொண்டிருந்தனர்
டுப்ளே முதலில் கூலிக்கு அவர்களுக்காக சண்டையிட்டு பின் அவர்கள் ஆட்சியினை பிடித்து அப்படியே டெல்லி வரை பிடிக்கும் திட்டத்தில் இருந்தான்
டூப்ளே இப்படி கனவு கண்டுகொண்டிருக்க, சென்னை கோட்டையில் இந்தியா பிடிக்காமல் அழுது கொண்டிருந்தான் கிளைவ், வெயிலை தணிக்க கடற்காற்று வாங்குவதும் , கூவத்தில் நீந்தி விளையாடுவதுமாக நாட்களை நகர்த்திகொண்டிருந்தான்
டூப்ளே தன் மாபெரும் கனவில் முதல்படி எடுத்து வைக்க வாய்ப்பு தேடிகொண்டிருந்தான்
அதற்குள் ஐரோப்பாவில் பெரும் போர் மூண்டது, நிச்சயம் கிளைவி தலைவிதியினை மாற்றி வைத்தது அந்த போர்தான்
அதுமட்டும் நடந்திராவிட்டால் கிளைவின் கதை சாதாரணா குமாஸ்தாவாக முடிந்திருக்கும், அந்த போரின் போக்கும் அது இந்தியாவில் எதிரொலித்ததுமே கிளைவ் எனும் பூனை புலியான தருணம்
அதுவரை இந்தியாவில் மோதாத பிரெஞ்ச் காரரும், பிரிட்டானியரும் அடித்துகொள்ள வழி செய்தது அந்த போர்
மரபுரிமை போர் அல்லது வாரிசு உரிமை போர் என அழைக்கபட்ட அந்த போரில் பிரிட்டன் ஒரு பக்கமும், பிரான்சும் ஸ்பெயினும் இன்னொரு பக்கமும் நின்று அடித்தன
அது என்ன மரபுரிமை போர் ? அதை பற்றி காண மறுபடியும் ஐரோப்பா செல்ல வெண்டும்
தொடரும்…