கில்லாடி கிளைவ் : 07
கில்லாடி கிளைவ் : 07
எதையும் தாங்கும் இதயம் கூட தேக ஆரோக்கியம் கெட்டால் உடைந்துவிடும், கிளைவிற்கும் தேக நிலை கெட்டது
இங்கிலாந்தில் இருந்து வந்த அலைச்சல், மன உளைச்சல் , வெப்பமான வாழ்விடம், உணவு , போர் என ஓயாத ஓட்டம் என்றிருந்த வாழ்வு அவனின் உடல்நிலையினை வெகுவாக பாதித்தது
அப்பொழுது இந்த ஊட்டி, சிம்லா எல்லாம் இல்லை என்பதால் அவர்கள் குளிரான ஓய்வெடுக்க இங்கிலாந்துக்குத்தான் ஓடிகொண்டிருந்தார்கள், கிளைவும் இங்கிலாந்துக்கு செல்ல தீர்மானித்தார்
காரணம் அவரிடம் கொஞ்சம் செல்வமும் குவிந்திருந்தது, முகமது அலிக்கு உதவிய வகையில் அவருக்கும் குறிபிட்ட பங்கு வந்தது , கம்பெனியும் நல்ல சம்பளம் கொடுத்ததிருந்தது
25 வயதான இளைஞனுக்கு அதுவும் ஊதாரி என குடும்பத்தால் ஒதுக்கபட்ட ஒருவனுக்கு கையில் பணம் கிடைத்தால் மனநிலை எப்படி இருக்கும்? அதுவும் தொலைதூரத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?
அச்செல்வத்தை எல்லாம் கொன்டு குடும்பத்தாரிடம் கொட்டி மகிழ தோன்றுமல்லவா? மனிதனாக இருந்தால் நிச்சயம் தோன்றும்,, கிளைவிற்கும் அந்த ஏக்கம் வந்தது
பெரிய குடும்பம், குதிரை கூட இல்லாத தந்தை, வறுமையால் ஊரும் சமூகமும் ஒதுக்கி வைத்த குடும்பம் அது. போதாகுறைக்கு கிளைவ் சம்பாதித்த நற்பெயர் வேறு
இதெல்லாம் எண்ணி எண்ணி பிரிட்டனுக்கு கப்பலேற துடித்தான் கிளைவ் , அதற்கு நாளும் வர இருந்தது
விஷயம் கிழக்கிந்திய கம்பெனியில் ஊடுருவியிருந்த உளவாளிகள் மூலம் பாண்டிச்சேரி பிரெஞ்ச்காரர்களுக்கு எட்டிற்று
கிளைவ் கப்பல் ஏறிவிட்டான் என நினைத்து தாக்குதலை தொடுத்தனர், ஆம் கிளைவ் இல்லாத பிரிட்டன் படை மோடி இல்லாத பாஜக
பிரெஞ்ச்படைகள் அடிபட்ட பாம்பாகவோ இல்லை புலியாகவோ சீற்றம் காட்டின, தங்களின் மேலாதிக்கத்திலும் கனவிலும் மண் அள்ளி போட்ட கிளைவும் அவன் கம்பெனியும் இருக்கவே கூடாது என சீறி வந்தன
கிளைவிற்கோ தேகநிலை சரியில்லை,ஆனாலும் அவனை விட்டால் சண்டைக்கு யாருமில்லை
பிரெஞ்ச் படைகளோ கோவளம், செங்கற்பட்டு எல்லாம் கைபற்றி முன்னேறி வந்தன
கிளைவோ நலிந்திருந்தான் , அவனுக்கு கொடுக்கபட்ட படையும் பயிற்சி இல்லாதது. பாகுபலி குமாரவர்மா போல நிறைய பேர் இருந்தனர்
வீரம் என்பது உடலில் அல்ல, மனதை பொறுத்தது, மனோ பலமே முதல் பலம் என்பது மாவீரர்கள் வாழ்வு தத்துவம்
அந்நிலையிலும் கிளைவ் யுத்தத்திற்கு தயாரானான், தன் அனுபவமில்லா படையுடன் கிளம்பினான்
(இதில் ஒரு சந்தேகம் வரலாம், இந்த ஆற்காடு நவாப் எங்கே போனார்? பிரிட்டானியதாம் அவரை அரசனாக்கினார்கள், பின் இவர்களுக்கு உதவாமல் எப்படி?
அரசியல் என்பது இதுதான், அங்கு கணக்கே வேறு. நன்றி, நட்பு, விசுவாசம் என்பதெல்லாம் அங்கு அரிது. எல்லாமே ஒப்பந்தம்
முகமது அலிக்கு உதவிய வகையில் கணிசமாக பிரிட்டிசார் வாங்கிவிட்டனர், கையில் காசு தலையில் கீரிடம் அவ்வளவுதான்
இனி பிரிட்டானியருக்காக அவர் ஏன் வரவேண்டும்? வந்தால் அவர் பணம் பறிப்பார்,இன்ன பிற இம்சைகள்
இதனால் பிரிட்டிசார் பிரெஞ்ச்காரர் யுத்தம் தனியாக நடந்தது)
களம் சென்றதுதான் தாமதம், அவகாசமின்றி யுத்தத்தை தொடங்கினர் பிரெஞ்ச்காரர்கள், முதல் பலி கிளைவ் தரப்பில் விழுந்தது
அனுபவமில்லா படை, அப்பொழுதுதான் களம் காண்கின்றது, அதில் ஒருவன் கண்முன்னே விழுந்தால் மற்றவர்கள் என்னாவார்கள்?
ஆட்டுமந்தை போல சிதறியது கிளைவ் படை, கிளைவ் திகைத்தான் ஆனாலும் சிதறி ஓடியபடையினை விரட்டி சென்று நம்பிக்கை அளித்து வீரமாக பேசினான்
அதற்குள் அடுத்த குண்டு சத்ததம் கேட்க ஒருவனோ அருகிலிருந்த கிணற்றுக்குள் ஒளிந்தான்
கிளைவ் நோயினை மறந்தான், தன் படைகளின் பலவீனத்தை மறந்தான், ஒருவித வெறி அவனுள் இறங்கியது
நம்பிக்கையூட்டி பேசினான், நான் செய்வது போல் செய்து போரிடுங்கள் என அவர்கள் முன்னாலே எதிரி படைகளுக்குள் பாய்ந்தான்
அதாவது களத்திலே பாடம் எடுக்கும் சவாலை செய்தான் கிளைவ்
நல்ல தலைவன் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், தலைவனே அசால்ட்டாக தைரியமாக முன்னேறும்பொழுது அவன் படை மிக்க நெஞ்சுரம் கொண்டு முன்னேறிற்று
கிளைவ் எப்படி தாக்கி, பதுங்கி, வளைந்து தாக்கினானோ அதை அப்படியே செய்தது கிளைவின் படை. கோவளம் அவர்கள் வசமானது
உண்மையில் வாழ்வா, சாவா நிலை அது. ஆனால் கிளைவின் தைரியமும் மனோதிடமும் அவனுக்கு வெற்றியினை கொடுத்தது
கோவளம் கோட்டை அவர்கள் வசமானது, படையினருக்கு உற்சாகமும் தைரியமும் வந்தது , போதாதா? பூனைகள் எல்லாம் புலியாக மாறி இருந்தனர்
கோவளம் கோட்டை பிரிட்டிசாரால் பிடிக்கபட்டதை அறியா பிரெஞ்ச் படையின் பிரிவு ஒன்று அவசரமாக கோவளம் நோக்கி வந்தது
கிளைவ் அட்டகாசமான தந்திரம் செய்தான்
அதாவது கோட்டை பிடிபட்டிருப்பது பிரெஞ்ச் காரருக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு தெரியாமல் கோட்டைக்கு வெளியே மறைவிடங்களில் படையோடு பதுங்கி கொண்டான்
பிரெஞ்ச் படையோ ஆங்கிலேயர் இல்லை என்ற நினைப்பில் நிதானமாக கோவளம் கோட்டைக்கு வந்தது
கோட்டையினை ஆங்கிலேயர் கைபற்றிய சுவடே இல்லை எனும் அளவு அங்கு நிலமை இயல்பாய் இருந்தது எல்லாம் கிளைவின் தந்திரம்
இதில் ஒரு தயாரிப்புமின்றி சும்மா நின்றது பிரெஞ்ச் படை
திடீரென சுற்றி வளைத்து அடிக்க ஆரம்பித்தான் கிளைவ், அது பிரெஞ்ச்காரர் கொஞ்சமும் எதிர்பாரா தாக்குதல் அது, பலர் தப்பி ஓட 300 பிரெஞ்ச்வீரர்களை கைதி ஆக்கினான் கிளைவ்
கோவளத்தில் இருந்த படையும் போனது, வந்த படையும் கைதியாக்கபட்டது பிரெஞ்ச்காரை அதிர்ச்சி அடைய வைத்தது, தப்பியோர் எல்லோரும் செங்கற்பட்டில் அடைக்கலமானார்கள்
கிளைவோ தன் படையுடன் செங்கல்பட்டை தாக்கினான், கோட்டையில் ஒரு பிளவினை ஏற்படுத்தி உள்புகுந்து அடிக்கு திட்டத்துடன் சுவரை தகர்த்தான்
கிளைவ் படை புகுமுன் பிரெஞ்ச் தளபதி சரணடைந்தான், கிளைவ் நினைத்தால் அவனை கொன்றிருக்கலாம் ஆனால் செய்யவில்லை
இனி இப்பக்கம் வந்தால். என்ற மிரட்டலோடு பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தான்
சென்னைக்கு பிரெஞ்ச்காரர்களால் இருந்த மிரட்டல் அத்தோடு நின்றது, அதன்பின் பிரெஞ்ச்காரருக்கு ஆசை எல்லாம் போய் ஞானம் வந்தது, டூப்ளேவும் பிரான்சுக்கு அழைக்கபட்டு மூலையில் அமர்த்தபட்டார்
இதற்கு மேலும் சென்னையில் இருக்கமுடியாது என்ற நிலைக்கு கிளைவின் உடல்நிலை மோசமானது, இனி கிளம்பி தீருவது என முடிவெடுத்தார், ஆனால் அது வங்ககடல் புயல் காலம் என்கின்றார்கள், கப்பல்கள் நகரவில்லை
இந்நிலையில் சண்டை போடவும் எதிரிகள் இல்லா நிலையில் கோட்டைக்குள் சுற்றி சுற்றி வந்தார் கிளைவ், மனமோ பிரிட்டனில் இருந்தது
அப்பொழுதுதான் அவரின் நண்பருக்கு யோசனை தோன்றிற்று, அவர் ஒரு கனித மேதை அவர் பெயர் நேவிஸ் மஸ்கிலின். கணக்கில் புலி என்பதால் கிளைவினை வைத்து பெரும் கணக்கு போட்டார்
“இவனுக்கு வயது 26, ஆனால் பெரும் வீரன். யாரும் செய்யாத சாதனைகளை செய்திருக்கின்றான். கர்நாடக போரிலே பெரும் பணம் அடித்துவிட்டான், கம்பெனியோ அவனை வணங்குகின்றது, நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் கொண்டவன், இவனை வளைத்துவிட்டால் அதிர்ஷ்டம்
பிரிட்டனுக்கு சென்றால் ஆயிரம்பேர் வரிசையில் நிற்பார்கள், விட கூடாது , இங்கேயே கவிழ்த்துவிடலாம்”
கணிதமேதையின் கணக்கு தன் குடும்பத்து எதிர்காலம் பற்றி கணக்கு போட்டது
ஆம் அவனுக்கொரு தங்கை இருந்தாள் அவள் பெயர் மார்கரெட் மஸ்கலின், அவளை கிளைவிற்கு மணமுடித்தார்
கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில் இன்றும் உள்ள அந்த சர்ச்சில்தான் நடந்தது. அதற்கான சாட்சிகள் கோட்டை ஆவணத்திலே இருக்கின்றன
அதன் அருகில் இருக்கும் மாளிகை கிளைவிற்காக ஒதுக்கபட்டது, அங்குதான் வாழ ஆரம்பித்தான் கிளைவ்.
அந்த மாளிகை இன்றும் சென்னை கோட்டையில் உண்டு, சிலகாலம் முடிந்து லண்டன் கிளம்ப தயாரானான்
மனைவியோடு பிரிட்டன் புறப்பட்டான் கிளைவ், மனம் முழுக்க ஏக்கம், கண்ணீர், அழுகை, இனம்புரியா சந்தோஷம்
அது மண்ணை பிரிந்த சோகமும், சாதித்துவிட்ட சந்தோஷமும் நிரம்பிய மனநிலை
ஆம் அவன் இந்தியாவிற்கு வரும்பொழுது வயது 18, வெற்றி வீரனாக பிரிட்டன் திரும்பும் பொழுது வயது 27
இந்தியாவில் வியாபாரம் செய்ய சென்ற கம்பெனியினை, அதுவம் நஷ்டத்தில் இருந்த, பிரெஞ்ச்காரரிடம் நிற்கமுடியாமல் இருந்த கம்பெனியினை தூக்கி நிறுத்தினான் கிளைவ் என்ற செய்தி ஏற்கனவே லண்டனில் பரவி இருந்தது
அது போக மாவீரன் டூப்ளேவினையே பணிய வைத்து மிரட்டி, செல்வ செழிப்பு மிக்க இந்தியாவில் ஒரு அரசை நிர்ணயம் செய்யும் அளவு ஒரு பிரிட்டிஷ்காரன் அசத்தி இருக்கின்றான் என்ற பெருமை அவர்களுக்குள் பெரும் மகிழ்வு ஏற்படுத்தியிருந்தது
பிரிட்டனில் அன்று இரு வர்க்கம் இருந்தது
முதலாவது உயர் வர்க்கம், அவர்கள் பிரபுக்கள், பெரிய இடம் பரம்பரை பணக்காரர்கள்
இரண்டாம் வர்க்கம் உழைக்கும் வர்க்கம், வாழ வழியின்றி அமெரிக்கா இந்தியா என கடல்கடந்து செல்லும் வர்க்கம்
இதில் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதித்து வருபவனை உள்ளூர் பரம்பரை பணக்காரர்கள் விரும்புவதுமில்லை, மதிப்பதுமில்லை
(இது இன்றும் தமிழக கிராமங்களில் சர்வ சாதாரணம். புது பணக்காரனை கண்டால் பரம்பரை பணக்காரனுக்கு பிடிக்காது, கேட்டால் அவன் அப்பனை பற்றி தெரியாதா? அவன் குடும்பத்தை பற்றி தெரியாதா என சம்பந்தமின்றி பேசுவார்கள்)
அவர்கள் சிறுகுழுக்கள் என்றாலும் அதிகாரம் படைத்தவர்கள்
ஒட்டுமொத்த பிரிட்டனும் கிளைவினை கொண்டாடிய போதிலும் ஒரு சில கண்கள் அவனை அன்றே வெறுப்புடன் நோக்கின
கிளைவோ அதை பற்றி எல்லாம் தெரியாமல் பிரிட்டனில் இறங்கினான், அத்தேசம் அவனை வெற்றிமகனாக கொண்டாடியது
கிழக்கிந்திய கம்பெனி பெரும் பாராட்டு கூட்டம் நடத்தி அவனுக்கு வீரவாள் ஒன்றை கொடுத்தது, அதில் நவரத்தினம் எல்லாம் பதிக்கபட்டிருந்தது
கிளைவ் அதை வாங்க மறுத்தான், அவனின் பெருந்தன்மை அங்குதான் தெரிந்தது
“எனக்கு முழு உதவி செய்ததும், என்னை உருவாக்கியதும் தளபதி லாரன்ஸ், அவர் மிக சிறந்த வீரர், அவருக்கு இப்படி ஒரு வாளை கொடுத்துவிட்டு எனக்கு கொடுப்பதுதான் முறை”
இதுதான் கிளைவ், கொஞ்சம் யோசியுங்கள். அது கம்பெனி கொடுக்கும் பரிசு, முன்னேற பெரும் வழி
இன்னொருவனாக இருந்தால் நான் பட்ட பாடுகளுக்கு, உழைத்த உழைபிற்கு இப்படி 10 வாள் தந்தாலும் போதாது என உருகி இருப்பார்கள்
ஆனால் கிளைவ் பெருந்தன்மையாய் நின்றான், அவன் மதிப்பு கூடிற்று
தன் வீட்டை அடைந்த கிளைவ் தன் கடமைகளை செய்தான், தந்தைக்கு நல்ல வீடு கட்டினான், பெரிய சாரட் வண்டியினை வாங்கினான், நல்ல உடைகள் வாங்கி கொடுத்தான்
இதுதான் வாழ்வு, இதுதான் சிலர் ஜாதக அமைப்பு
ஆம் வாழ்வு எப்பொழுது எங்கு திரும்பும் என தெரியாது, அதே லண்டனில் பொறுக்கி எனவும், ரவுடி எனவும் பெயர் பெற்ற கிளைவ் இப்பொழுது கவுரவமான மாவீரன்
சிலர் ஜாதகம் சொந்த மண்ணில் வேலை செய்யாது, அந்நிய மண்ணில் விஸ்வரூபம் எடுக்கும் என்பார்கள் கிளைவ் ஜாதகம் அந்த வகை
கிளைவிற்கு லண்டன் வாழ்க்கை மிகவும் பிடித்தது, இந்தியா திரும்பும் எண்ணெமெல்லாம் இல்லை
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்கு நின்றான், அப்படியே செட்டிலாகும் திட்டம் இருந்தது
ஆனால் 28 வயது புது பணக்காரனை பரம்பரை அரசியல்வாதிகள் ஜெயிக்க விடுவார்களா? நடக்குமா?
கிளைவ் தோல்வியுற்றான், அவன் வருந்தவில்லை பிரிடனில் எதில்தான் அவன் வெற்றிபெற்றான்?
கையில் பணம் குறைந்தது, ஏதாவது தொழில் செய்யலாம் என திட்டமிட்டான்
அப்பொழுதுதான் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சிக்கல் பெருகியது, பிரான்ஸ் திரும்பிய டுப்ளே மரியாதை குறைந்து அனாதை போல செத்தான்
ஆம், பதவியும் வெற்றியும் இருக்கும்வரைதான் உலகம் ஒருவனை கொண்டாடும், கிளைவிடம் தோற்று அவனமானபட்ட டூப்ளேவினை பிரான்ஸ் விரும்பவில்லை
அந்த சோகத்திலே செத்தான் டூப்ளே, மறுபடியும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் மோதல் வெடித்தது
கிளைவ் வராமல் இந்தியாவில் பிரிட்டிசார் நிம்மதியாக இருக்க முடியாது என்ற கோரிக்கை வைக்கபட்டது, இம்முறை பரீசில்த்தவர் பிரிட்டன் மன்னர் பிரான்
அவர் கிளைவிற்கு லெப்டினட் கர்னல் பட்டம் வழங்கினார், கிழக்கிந்திய கம்பெனியும் கடலூரின் டேவிட் கோட்டைக்கு கிளைவ் கவர்னர் என பதவி உயர்த்தியது
எந்த டேவிட் கோட்டைக்கு டுப்ளேவிடமிருந்து தப்பி அனாதையாய் வந்தானோ அதே கோட்டைக்கு இப்பொழுது கிளைவ் கவர்னர்
கிழக்கிந்திய கம்பெனி அப்படி கிளைவினை வலிய அழைத்தது, நிச்சயம் நல்ல வேலைக்காரன் என்றால் தன் திறமையால் முதலாளியினை பணிய வைக்க வேண்டும் என்ற பழமொழி கிளைவ் விஷயத்தில் உண்மையானது
தன் 28ம் வயதில் மறுபடி இந்தியாவிற்கு பயணமானான் சென்னைக்கு வருமுன் அவருக்கு ஒரு தகவல் வந்தது
அரபிகடலில் ஒரு கொடூர கொள்ளை கூட்டம் இருக்கின்றது, அது பம்பாய் பக்கம் நம்மை வியாபாரம் செய்யவிடாமல் தடுக்கின்றது அவர்களை அடக்காமல் அரபிகடல் நமக்கல்ல
யார் அவர்கள் என விசாரிக்க ஆரம்பித்தான் கிளைவ், அந்த கூட்டம் ஆங்கிரியா எனவும், பம்பாய்க்கு அருகில் உள்ள கெரியா அவர்களின் தலமையகம் எனவும் அவனுக்கு சொல்லபட்டது
அந்த அரபிகடல் , பம்பாய் வரைபடத்துடன் கப்பலில் இருந்தபடியே திட்டமிட்டான் கிளைவ்
கவர்னர் கிளைவ் பம்பாய் பக்கம் செல்வாராம், இங்கு வர நாளாகுமாம் என சென்னை பக்கம் பேசிகொண்டார்கள்
கப்பலிலே கடல் யுத்தத்திற்கு தயாரானான் கிளைவ், அப்பொழுதான் லண்டனில் கிளைவிற்கு முதல் மகன் பிறந்திருந்தான்
அது கிளைவிற்கு தெரியாது, அப்போதைக்கு கிளைவிற்குள் யுத்த பூதம் இறங்கி இருந்தது
தொடரும்..