கில்லாடி கிளைவ் : 10
கில்லாடி கிளைவ் : 10
நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம்
திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான்
அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் கப்பம், ஆனால் தனக்கு என்ன என கணக்கிட்ட ஓர்மிசென்ட் தந்திரமான காரியத்தை செய்தான்
அதாவது இருவருக்கு தெரிந்தால் ரகசியம், மூன்றாவது ஒருவருக்கு தெரிந்தால் அம்பலம் என்பதை அமல்படுத்தினான்
தன் ஆட்களிலே ஒருவனை அரசு உளவாளியிடம் தகவலை போட்டு கொடுக்க சொன்னான் , விஷயம் நவாபினை எட்டியது, என்ன விஷயம்
மன்னர் மன்னா உங்களை ஒழித்துகட்ட நாட்டில் சதியாலோசனை நடக்கின்றது, ஆங்கிலேயரும் கலந்திருக்கலாம்
மிக நுட்பமான தந்திரம் ஓர்மிசென்டுடையது, அதாவது யார் சதியாலோசனையில் உண்டு என்பதை சொல்லாமல் மீர் ஜாபரை எல்லாம் மறைத்து வெள்ளையரை மட்டும் சிக்கலில் இட்டான்
நவாப் இதுபற்றி கொதித்தெழுந்த நேரம் சும்மா நலம் விசாரிக்க சென்றான் ஓர்மிசென்ட் , நவாப் இந்த சதியாலோசனை பற்றி ஓர்மிசென்டிடமே கேட்டார், அய்யா ஓர்மிசென்ட் இங்கு எனக்கெதிராக சதி நடக்கின்றதாம், உமக்கு ஏதும் தெரியுமா? இந்த வெள்ளையர் திட்டமாமே என உறுமினான்
ஓர்மிசென்டோ அட்டகாசமாக நடித்தான், அய்யா வெள்ளையர்கள் உங்களுக்கு அஞ்சி ஒடுங்கி கிடக்கின்றனர், நேற்று கூட நீங்கள் இல்லை என்றால் அவர்கள் வியாபாரம் இல்லை என கண்ணை கசக்கினார்கள் அவர்களாவது சதியாவது என சொல்லி நவாபினை நம்ப வைத்தான்
அங்கு நவாபினை நம்ப வைத்துவிட்டு இந்த சதி கூட்டத்தை கூட்டி புன்னகைத்தான்
அன்புடையீர் உங்கள் சதிதிட்டம் நவாபிற்கு தெரிந்துவிட்டது, ஆனால் அவரை நம்ப வைத்து உங்களை காப்பாற்றி இருக்கின்றேன், நான் நினைத்தால் நொடியில் நவாபிடம் உங்களை பற்றி சொல்லி நொடியில் கொல்லமுடியும், உங்கள் குடுமி, உயிர் எல்லாம் என் கையில், எப்படி வசதி?
மொத்த சதி ஆலோசனை கூட்டமும் திகைத்தது, கிளைவிற்கோ கடும் ஆத்திரம். இந்த மனிதன் இவ்வளவு கீழ்தரமானவனா என கடும் கோபம் கொண்டாலும் வெளிகாட்டவில்லை மாறாக பேரம் பேசினான்
ஓர்மிசென்ட் உம்மை நன்றாக அறிவேன், சுற்றி வளைத்து பேச வேண்டாம். உமது லாபம் என்ன அதை சொல்லும்
கிளைவ் நேரடியாக விஷயத்திற்கு வந்ததை புரிந்த ஓர்மிசென்ட் சொன்னான், நீங்களும் நவாபும் சண்டையிடுங்கள் சாவுங்கள் ஆனால் ரகசியம் காக்க எனக்கு 3 லட்சம் பவுண்டுகள் கொடுங்கள், இல்லாவிட்டால் அவ்வளவுதான்
கிளைவ் அதிர்ந்தான், அது மிகபெரும் பணம் அன்று கிட்டதட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவு பெரிது
கிளைவ் மெதுவாக சொன்னான், இப்பொழுது பணமில்லை ஆனால் மீர் ஜாபர் நவாப் ஆனவுடன் உமக்கு கொடுக்கபடும், இப்போது எங்களை காட்டிகொடுக்காமல் இரும்
ஆனால் ஜெகஜால கில்லாடியான ஓர்மிசென்ட் அப்படியானால் எனக்கு 3 லட்சம் பவுண்ட் கடன்பட்டதாகவும், இன்னும் சில நிபந்தனைகளுக்கு கட்டுபடுவதாகவும் எழுதி கொடுங்கள் என மிரட்டினான்
கிளைவ் யோசித்தான், நாங்கள் ஆலோசித்து நாளை எழுதி கொடுக்கின்றோம் என சொல்லி அப்போதைக்கு அவனை அனுப்பிவிட்டான்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் பத்திரம் அது, அதை எப்படி எழுதலாம் என யோசித்தான் கிளைவ்
ஓர்மிசென்டின் துரோகத்தை துரோகத்தால் வெல்ல துடித்தான்
அட்டகாசமாக திட்டமிட்டான், இரு ஆவணங்களை தயார் செய்தான், முதலாவது வெள்ளை காகிதத்தில் எழுதபட்டது அதுதான் உண்மையானது அதில் ஓர்மிசென்டின் நிபந்தனை எல்லாம் இல்லை
இரண்டாவது சிவப்பு காகிதத்தில் ஒன்றை தயாரித்தான் அது போலியானது, அதில் ஓர்மிசென்ட் மகிழுமாறு நிபந்தனைகளை எழுதியிருந்தான்
இதில் ஒரு சிக்கல் வந்தது, கமிட்டியின் மற்ற உறுப்பினர்களான மீர் ஜாபர், வாட்சன், மார்வாடி பார்ட்டி உண்மையான வெள்ளை ஆவணத்தில் மட்டும் கையெழுத்திட்டது.
கிளைவ் சிகப்பு நிற காகிதத்தில் ஒரு ஆவணத்தை ஓர்மிசென்டின் கோரிக்கையினை நிறைவேற்றுவது போல் எழுதி வாட்சன், மீர் ஜாபர் போன்றோரின் கையெழுத்தை அவனே போட்டுகொண்டான்
மறுநாள் சிகப்பு காகிதத்தை ஒர்மிசென்டிடம் ஒப்படைத்து தாங்கள் எல்லோரும் ஓர்மிசென்டிடம் சரணடைந்ததாக சொல்லிகொண்டான்
ஓர்மிசென்டிற்கு ஏகபட்ட மகிழ்ச்சி, தான் மிகபெரும் சாமார்த்தியசாலி என நினைத்து கொண்டார்
கிளைவோ அவர் இப்போது மகிழட்டும் நாளை சபையில் அதை அவர் கொண்டுவந்தால், வாட்சன் மீர் ஜாபர் கையெழுத்திட்ட வெள்ளை காகித ஆவனமும் வாசிக்கபடும் அதில் ஓர்மிசென்டுக்கு ஒன்றும் சாதகமாக இல்லை
ஆளுக்கொரு பத்திரம் வைத்திருந்தால் இரண்டும் உண்மை இல்லை என்றாகிவிடும் என மனதிற்குள் மகிழ்ந்தான் கிளைவ்
கிளைவோ இப்போதைக்கு சதிதிட்டம் மன்னருக்கு தெரியாமல் மறைக்கபட்டாலும் இந்த ஓர்மிசென்ட் என்றேனும் ஒருநாள் சொல்லிவிடுவான் அதற்குள் யுத்தம் தொடங்க முடிவெடுத்தான்
தன் திட்டத்தை இறுதி செய்தான், நவாபினை வம்புக்கு இழுத்து போர் தொடங்குவது, போரில் மீர் ஜாபர் வந்து தன்னோடு இணைந்துகொள்ள வேண்டும்
அதனால் நவாப் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இன்னும் சில லட்சங்களை நஷ்ட ஈடாக தரவேண்டும் என வம்பிழுத்து கடிதம் எழுதினான் கிளைவ்
நவாப் சிராஜ் உட்வாலா துடித்தெழுந்தார், என்னடா இது? அன்றுதான் நலம் விசாரித்து கடிதம் எழுதினான் கிளைவ், இன்று மிரட்டுகின்றானா, ம்ம்ம் படை கிளம்பட்டும் என உத்தரவிட்டான்
40 ஆயிரம் வீரர்கள், 100 பீரங்கிகள் அவற்றை இழுக்க மாடுகள், யானைகள், ஆயிரம் பிரெஞ்ச் வீரர்கள், என பெரும் படை புறப்பட்டது
அந்த வீரர்களில் பெரும்பாலும் பஞ்சாப், ராஜபுத் வீரர்களும் இருந்தது, தென்னக வீரர்களை விட அவர்கள் உடல்வாகு வலுவாக இருந்ததாக கிளைவிற்கு தோன்றிற்று
கிளைவின் படை நவாபின் படையினை விட 20 மடங்கு சிறியது, கிளைவின் ஒரே நம்பிக்கை மீர் ஜாபர் தம்மிடம் ஓடிவருவான் என்பது
யுத்தம் தொடங்க இடமும் குறிக்கபட்டது, ஹூக்ளி நதிகரையின் பிளாசி தேர்வானது
ஆம், இந்தியாவில் ஆங்கிலேயரை வலுவாக காலூன்ற செய்த பிளாசிபோர் தொடங்க இருந்தது
ஆனால் யுத்தம் தொடங்க ஒரு நாள் இருந்தபொழுதும் மீர் ஜாபர் வந்து சேரவில்லை, ஆம் நவாப் முன் அஞ்சி நடுங்கி நின்றான் ஜாபர்
கிளைவிற்கோ கலக்கம் வந்தது, தன் வாழ்நாளில் முதன் முறையாக கலங்கி நின்றான் கிளைவ்
மீர் ஜாபர் வருவதாக தெரியவில்லை, ஆற்றை கடந்தால் பிளாசி, இச்சிறியபடை ஆற்றை கடந்து நவாபினை எப்படி வெற்றிபெறும் என யோசித்த கிளைவ் தன் படையினரிடமே ஆலோசனை கேட்டான்
போரை நிறுத்திவிட்டு ஓடலாம் என்றனர் படைகள், திகைத்தான் கிளைவ்
மீர்ஜாபரும் வராத நிலையில் தனியாக மாமரத்து அடியில் இருந்து சிந்திக்க தொடங்கினான், அவனின் உள்ளுணர்வு போரை தொடங்க சொன்னது
அந்த போர் தொடங்கியிராவிட்டால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே இல்லை
வருவது வரட்டும் என ஆற்றை கடந்தான் கிளைவ், நவாபினை விட்டு கிளைவ் பக்கம் செல்ல அஞ்சியபடி நின்றிருந்தான் மீர்ஜாபர்
(தொடரும்..)
