குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 99

“கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம்
இறந்தவெலாந் துன்பமலா தில்”

கற்றுத் துறைபோய காதலனுக்குக் கற்புடைய அவன் மனைவி பெற்றுக்கொடுத்த முதல் மகன் போன்றதே, துறந்தவர்களுக்கு மெய்யுணர்வில் தோன்றும் பேரின்பம். மற்றைய இன்பமெல்லாம் துறவிகளுக்குத் துன்பமே.

நிரம்ப கற்ற ஒருவனுக்கு அவனின் பத்தினி மனைவி பெற்றுகொடுத்த தலைமகன் என்பவன் பெரும் விருப்பமானவன் இன்பமானவன், அந்த மகன் அவனின் கனவும் இன்பமுமாவான், பெருமிதமும் அவனே, அவனை காத்து வளர்த்து தன்னைபோல் உருவாக்கும் ஒன்றே அவனின் பெரும் விருப்பமாக இருக்கும் அது தவிர ஏதும் அவன் சிந்திப்பதில்லை

அவனை கையில் ஏந்தும் அந்த நொடி அவனுக்கு அவ்வளவு சிலிர்ப்பானது

அப்படி எல்லாம் துறந்த துறவியருக்கு தங்கள் மெய்யுணர்வில் பெற்ற நிறைவே இன்பமாம், அது அல்லாத எல்லாம் துன்பமாம் என்பது பொருள்