குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 11

“இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்
கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற”

இப்பாடல் “இன்சொல்லன் தாழ்நடை உடையவனாயினும் ஒன்று(ம்) இல்லானேல் வன் சொல்லின் இல்லது வாய் திறவா என் சொல்லினும் கை (பொருள்) உடையான் கால் கீழ் ஒதுங்கும் கடன் ஞாம் பித்துடைய அல்ல பிற” என பிரிந்து வரும்

அதாவது ஒருவன் எவ்வளவு நல்லவனாய் இருந்தும் இன்சொல் பேசி அடக்கத்துடன் நடந்து கொண்டாலும் அவனிடம் பொருள் இல்லையேல் அவனை மற்றவர்கள் கடும் சொற்கள் பேசி வதைப்பர், ஆனால் பொருள் கொண்ட தனவான் கடும் சொற்கள் பேசினாலும் அவன் காலடியிலே ஒதுங்குவர், இப்படி ஒதுங்குபவர்கள் பைத்தியம் அல்ல என்பது பொருள்

இந்த உலகம் விசித்திரமானது நல்லவனிடம் பொருள் இல்லை என்பதற்காக இனிய மொழிகளும் அடக்கமும் நிரம்பிய அவனிடம் கடும் சொற்களுடன் அவமரியாதையுடன் நடக்கும் உலகத்தார், கொடியவனும் கொடிய சொற்களை கொண்டவனும் அகங்காரியுமானவனிடம் அடிபணிந்து செல்வார்கள், சேர வேண்டிய நல்லோரை விட்டுவிட்டு பணம் இருக்கும் காரணத்துக்காக பொல்லாரை பணிவது பைத்தியகாரதனம் என்றாலும் அப்படி பொல்லாரை பணிபவர்கள் பைத்தியமும் அல்ல என்கின்றார் குமரகுருபரர்

“கல்லானே ஆனாலும்
கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அவனை எதிர் கொள்வர்..
இல்லானை இல்லாளும் மதியாள்;
ஈன்றெடுத்த தாயும் மதியாள்
செல்லாது அவன் வாயிற் சொல்” என விவேக சிந்தாமணி சொல்லும் பாடலின் பொருளும் இதுதான்