கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு
கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு, அது இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பது அதிர்ச்சியான சோகம்
வெள்ளம் வடிந்தபின்னும் நிலமை சுமூகமாக இருக்காது, தொற்று நோய்கள் முதல் பல சவால்கள் எழும்
அடுத்து மிளகு முதல் பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும், நிச்சயம் அவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கும்
இப்பொழுதே நல்ல மிளகு சந்தை, வாழை சந்தை இன்னபிற பெரும் ஏற்றுமதிகள் எல்லாம் நிலை குத்தி நிற்கின்றன. பெரும் கோடிகனக்கான நஷ்டம் இதிலே வந்திருக்கின்றது
கேரளத்தில் சுற்றுலா முதல் பல தொழில்கள் பாதிக்கபடும்
வழக்கமாக பீகார் மற்றும் வட இந்தியாவில் இம்மாதிரி பருவமழை காலங்களில் வெள்ளம் பெருகும், கங்கையும், பிரம்பத்திராவும் பொங்கி தீர்க்கும் காலம் அவை
அவற்றிற்கும் கேரளாவின் இந்த பெரும் அழிவிற்கும் வித்தியாசம் உள்ளது ஆனால் மத்திய அரசு வருடாவருடம் ஏற்படும் பீகாரிய வெள்ளம் போல நினைத்துகொண்டிருக்கின்றதோ என்னமோ?
இன்று மோடி வருவதாக சொல்கின்றார்கள் பார்க்கலாம்
பாஜக அபிமானம் இல்லாத மாநில என அதை மத்திய அரசு புறக்கணிக்க கூடாது என்பதே நமது கோரிக்கை
நிச்சயம் இதை தேசிய பேரிடராக அறிவித்து ராணுவத்தை களமிறக்க வேண்டும்
அப்படியே வெளிநாட்டு உதவிகள் கோரபட்டாலும் தவறு இல்லை, நமக்கு இப்போதைய தேவை கேரள மக்களை பாதுகாப்பாக மீட்டு உங்கள் பின்னால் இத்தேசம் இருக்கின்றது, ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையினை விதைத்து அவர்களை காப்பாற்றுவது
அவர்கள் நீர் தராதவர்களாக இருக்கட்டும், முல்லைபெரியாரில் அடம்பிடிப்பவர்களாக இருக்கட்டும்
ஆனால் அந்த விஷயங்களை பேசி அவர்களை விலக்கி வைக்க இது நேரமில்லை, அவர்கள் நிம்மதியான பின் சண்டையிடலாம்
அவர்கள் நம் சகோதரர்கள் என எண்ணி தமிழகம் நீர் முதல் பல்வேறு உதவிபொருட்களை கொட்டுகின்றது, வாழ்த்துக்கள்
ஆக சிறந்த கதைகளை மலையாளத்தில் இருந்து திருடும் தமிழக சினிமா உலகமும் கொடுக்க தொடங்கி இருக்கின்றது
இதில் காதலுக்கு மரியாதை முதல் பல அற்புதமான மலையாள படங்களை திருடி பெயர் பெற்ற விஜய் என்பவரை காணவில்லை
கேரளத்தவர் நம் பங்காளிகள், சகோதரர்கள் அவர்களின் மிக துயரமான நேரத்தில் கை கொடுப்பது நம் கடமை
அந்த கடமையினை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்
மத்திய அரசு இன்னும் பல உதவிகளை செய்யட்டும், மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கட்டும்
நிச்சயம் இயற்கையினை நாம் வெல்ல முடியாது, ஆனால் கரங்கள் கோர்த்து நின்றால் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்
அவர்களுக்கு நம்மை விட்டால் யார் வந்து செய்ய போகின்றார்கள் அல்லது செய்ய முடியும்?
கேரள மக்கள் நம் எல்லோரின் அன்பான உதவியாலும் , கொடுக்கும் கரங்களினாலும் வெள்ளத்திலிருந்து மேலேறி வரட்டும்
அவர்களுக்கு உதவிகொண்டே கடவுளிடம் பிரார்த்திப்போம், இந்த மானிட ஒற்றுமை கண்டபின்னாவது அவன் தன் ஆட்டத்தை நிறுத்தட்டும்