கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
தன்னை நம்பியவர்களை எந்நிலையிலும் காத்து நின்றவன் கண்ணன், இன்றும் தன்னை நம்பிய பக்தர்களுக்கு அவன் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன், கை கொடுக்கும் தெய்வம்
கவியரசரின் பாடல்களோடு கிருஷ்ணனை நினைத்துகொள்வது மிக மிக சுகமான விஷயம்
இந்த தேசத்தின் மிகபெரும் அடையாளமும், ஞான பாரம்பரியத்தின் பெருமையுமான கிருஷ்ணணின் ஜெயந்தியினை கொண்டாட வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட..
பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம்.
அதன் பெருமை அன்று ஆசியா முழுக்க பரவியிருந்தது. பக்தி முதல் ராஜதந்திரம் வரை அதன் ஒவ்வொரு பக்கமும் சிலாகிக்கபட்டது. கீதை எனும் பெரும் ஞான நூல் அந்த அளவு உலகெல்லாம் கொண்டாடபட்டது
இன்றும் உலகின் எந்த தத்துவநூலினை எடுத்தாலும் அதில் கண்ணனின் கீதையின் சாரம் இருந்தே தீரும். “என்னை சரணடை..” என அர்ஜூனனுக்கு கண்ணன் சொன்னதைத்தான் பின்னாளில் “உங்கள் பாரங்களை நான் சுமக்கின்றேன்..” என்றார் இயேசுபிரான்
படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல இடங்களில் கண்களில் குறுகுறுப்பும், உதட்டில் புன்னகையும் கொண்டு ரசிக்கலாம். சில இடங்களில் அவரை கண்டு கட்டி தழுவலாம்.
காரணம் படிப்பவர்கள் மனதில் சட்டென்று ஒட்டிகொண்டு, நினைத்து நினைத்து ரசிக்கவைப்பது கண்ணனின் மாய விளையாட்டுக்கள்.
பொதுவாக மற்றவர்களை விட அதிக ரசனையும், இளகிய மனமும் கொண்டவர்களே சிறந்த கவிஞர்களாக முடியும், அந்த வகையில் அதிகபடியான தமிழ்கவிஞர்கள் பாடியிருப்பது கண்ணனை மட்டுமே, கண்ணுக்கு நிகரான கிருஷ்ணனாக அவனை கண்டார்கள். அவனை கண்ணன் என்றே அவனை அழைத்தார்கள்
கண்ணா.. கண்ணா என அழைக்காத புலவன் யாராவது தமிழகத்தில் உண்டா?
சங்ககாலத்தினை விடுங்கள், மகாகவி பாரதியும், கவியரசர் கண்ணதாசனும் பாடாத கண்ணன் பாடலா?, இன்று கூட வானொலியை திறங்கள், “”விஷம கண்ணணே வாடா வா” என்றுதான் ஒலிக்கின்றது, இதுதான் கண்ணனின் அசைக்கவே முடியாத வெற்றி.
காரணம் அவர் சாதித்த காரியங்கள் அப்படி, கருவாகும் முன்னமே தாய்மாமன் எமன், பிறந்த அன்றே தொடங்கியது போராட்டம், 6 வயதிற்குள் சிறியதும் பெரியதுமாக ஆயிரம் பூதங்களையும், ஏராளமான ஆபத்துக்களையும் கடந்தார்.
அரச குலத்தவர் தான், ஆயினும் அன்று உலகம் சிறிதும் மதிக்காத இடையர்கள் குலத்தில்தான் ஓர் மாடுமேய்ப்பவனாகத்தான் வளர்ந்தார்.
சிறு வயதிலே வேடிக்கையும், விளையாடுமாக பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதும்,த்த்துவத்தை போதிப்பதும், சிரித்து கொண்டே தர்மத்தினை நிலைநாட்டுவதும் அவருக்கு மனம் வந்த கலை. அவரது வாழ்வில் எங்காவது கண்ணன் கவலையுற்றார், அல்லது கண்ணீர் விட்டார் என்று பார்க்க முடியுமா?
தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்வித்தார், பாதுகாத்தார்
ஏராளமான தீயவர்கள், கொள்ளையர்கள் பெருகியிருந்த காலகட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்கு சிறுவயதிலிருந்தே அவர் பாதுகாப்பு, பெரும் பூதங்கள்,படைகள் என சகலத்தையும் அடக்கிய அவர் அன்று பெரும் நாயகன், அதுவரை அடிவாங்கிய ஆயர்பாடி கூட்டம் அவர்தலமையில் திருப்பி அடித்தது, அதுவும் காளிங்கனை அடக்கியபின் அன்றைய ஆயர்பாடியில் அவர்தான் டாப் நாயகன்.
டி.வியில் இம்ரான்கானிற்கே மயங்கிய பெண்கள் உள்ள இந்தியாவில், கண்ணனுக்கும் ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கமாட்டார்களா? இருந்தார்கள், மயங்கினார்கள். மாவீரன் மட்டும் என்பதல்ல, சிரித்த முகமும், இனிமையான குழலிசையும் , எந்த ஆபத்தையும் அசால்ட்டாக தாண்டும் அவருக்கு பெரும் ரசிகைகள் இருந்தது வியப்பே இல்லை.
அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். சாலமோன் மன்னனிடமே ஏராளமான அரசிகள் மயங்கியதாக வரலாறு சொல்லும்பொழுது கண்ணனிடம் மங்கையர் மயங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை
எல்லாம் கொஞ்சகாலம்தான், ஒரு கட்டத்தில் தன்னை உணர்ந்து கொண்டு, அவதார கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினார். கம்சனை கொன்றார், ஆயினும் மன்னராகும் ஆசை இல்லை, தாத்தாவிடம் ஆட்சியை கொடுத்து மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானார்.
ஆயிரம் கம்சன் உண்டல்லவா?, பல்வேறு தொந்தரவுகள் கொடுத்தார்கள், ஒரு கட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்காக துவாரகையை சொர்க்கத்திற்கு நிகராக உருவாக்கி, உலகிலே முதன் முதலாக அதுவரை ஒடுக்கபட்ட, விரட்டபட்ட, கடுமையாக புறக்கணிக்கப்ட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு நாடு கொடுத்து வாழச்செய்தார்.
போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின, அவர் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின, தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தார்,
சக்கர ஆயுதம் எடுத்து சாதித்தவர், அரைபிளேடு கூட எடுக்காமல் அமைதியாய் சாதித்து காட்டியதுதான் மகாபாரத போர், கண்ணனின் வெற்றி அடையாளங்களில் அதுதான் “மாஸ்டர் பிளான்”
பாண்டவர்களும்,கௌரவரும் உறவினர்தான், ஒன்றாய் பிறந்து வளர்ந்தவர்கள் தான், ஆனால் துரியோதனுக்கு கொஞ்சம் பொறாமை அதிகம், சிறுவயதிலே காதை பிடித்து திருகியிருந்தால் திருந்தியிருப்பான், அதற்கு ஆளில்லை தந்தையும் குருடர், தாயும் கண்ணை கட்டிகொண்டவர். துரியன் அப்படியே வளர்ந்தான், அவன் வளர,வளர அவனின் பொறாமையும் வளர்ந்தது.
அவன் மனதின் வன்மம் கல்லாய் இறுகியது, உலகில் யாரும் வாழலாம்,ஆளலாம். ஆனால் பாண்டவர்கள் மட்டும் ஆளவே கூடாது முடிந்தால் வாழலாம் அதுவும் கண்காணாத இடத்தில் அல்லது கவுரவர்களுக்கு அடிமையாய் வாழ்லாம். இதனை போதித்தவன் சகுனி.
அன்று அஸ்தினாபுர பேரரசினை “இம்சை அரசன்” நாசரை போல இயக்கியவன் சகுனி, அவனே அன்று நாட்டினை ஆண்டவன், துரியோதனன் முகமூடி, துரியோதனின் முடிவுகளை எடுப்பது எல்லாம் சகுனியே.
பாண்டவரின் நாடு பல சிறப்பு பெற்றதை தாங்க முடியவில்லை, தீவைத்து கொல்லபார்த்தான் துரியோதனன் தப்பினார்கள், மறுபடி எழுந்தார்கள் வாழ்ந்தார்கள் பாண்டவர்கள், வஞ்சகமாய் சூதாடி நாட்டை பறித்து வனவாசம் செய்ய விரட்டினான்.
அதோடும் விடவில்லை, பாண்டவர்கள் இருக்கும் வரை பிரச்சினை செய்வார்கள வனவாச காலம் முடியும் பொழுது போருக்கு இழுத்து மொத்தமாக பாண்டவர்களை அழிப்பதுதான் சகுனியின் திட்டம், அதற்கு வடிவம் கொடுத்தான் துரியோதனன்.
பாஞ்சாலியை காக்கும் பொழுதே கண்ணனுக்கு விளங்கிற்று, போர் தவிர்க்கமுடியாதது, பெரும் ராஜ தந்திர திட்டத்தினை முன்னடுத்தான்.
வனவாச காலத்தில் பாண்டவர்களை கண்ணன் சும்மா இருக்கவிடவில்லை, தொலைதூரத்தில் சில கொடிய மன்னர்கள் இருந்தார்கள். பாண்டவரோடு இணைந்து அவர்களை அழித்தான், காரணம் நாளை சண்டை என வந்தால் அவர்கள் நிச்சயம் துரியோதனுக்கு உதவ வருவார்கள், இனம் இனத்தோடு சேருமல்லவா? ஜெராசந்தனும்,சிசுபாலனும் இன்னும் பலரும் இவ்வாறே அழிந்தனர்.
வனவாச காலத்திற்குள் பாண்டவர்களை போருக்கு தயார் படுத்தினான், நினைத்திருந்தால் துவாரகையிலே அவர்களை தங்க வைத்திருக்கலாம், வைக்கவில்லை காரணம் நாடு நாடாக அலைந்தால் தான் நிறைய அரசுகளின் நட்பு கிடைக்கும் எனும் தந்திரம், அப்படியே கிடைத்தது, பல அரசர்கள் பாண்டவருக்கு துணைநின்றனர்.
பெரும் போருக்கு பாண்டவர்களையும்,நண்பர்களையும், பாசுபதகனை போன்ற ஆயுதங்களையும் தயார் படுத்திவிட்டுத்தான், ஒன்றும் அறியாத அப்பாவியாக துரியோதனிடம் தூது சென்றான். நிச்சயம் துரியோதனன் சொத்து கொடுக்கமாட்டான் என கண்ணனுக்கும் தெரியும்,
தெரிந்தும் ஏன் சென்றான் என்றால் கௌரவர் கூட்டணியில் குழப்பத்தினை ஏற்படுத்த, அதுதான் திட்டம்.
பாண்டவரும்,கௌரவரும் அப்படியே மோதிக்கொண்டால் 18 நொடிக்குள் பாண்டவர் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. துரியனின் கூட்டனி அப்படி, அரை குண்டூசி கூட கையில் இருந்தாலும் கொல்லமுடியாத துரோணர், நினைத்த போது மட்டும் மரணம் பெரும் பீஷ்மர், உலகை அழிக்கும் விதுரர், இன்னும் வெல்ல முடியாத கர்ணன், கிருபர், அஸ்வத்தாமர் என மிக நீண்ட வரிசை அது.
அவர்களுக்குள்ளும் துரியன் மீது கோபமிருந்தது, ஆனால் குலப்பெருமைக்காக பாகுபலி கட்டப்பா போல கூட இருந்தார்கள். தூது சென்ற கண்ணன் நிகழ்த்திய நாடகத்தில் விதுரர் வெளியேறினார், அஸ்வத்தாமன் மேல் துரியோதனனுக்கு சந்தேகம், இதற்கு மேல் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் ஈகோ பிரச்சினை, விளைவு பலமிக்க கூட்டணி சிதறியது, போதாக்குறைக்கு கர்ணனிடம் குந்தியை அனுப்பி அவனையும் காலம் பார்த்து குழப்பியாகிவிட்டது.
பாரத போரும் தொடங்கியது உறுதியாக சொல்லலாம் அது முதன் முதல் உலகப்போர், எல்லா நாட்டு அரசும் பங்கெடுத்தன, கண்ணனோ அப்பாவியாக தேரோட்டியாக வந்தார். ஆனால் அவரே சூத்திரதாரி.
பல்லாண்டுகள் கழித்து ஆசிரியரையும், உறவினரையும் கண்ட அர்ச்சுணன் தசை ஆடியது, உணர்ச்சியில் சண்டையிட மறுத்தான், அரசே வேண்டாமென்றான், அர்ச்சுணன் இல்லாவிட்டால் பாண்டவர் ஏது?
மாபெரும் உபதேசம் கொடுத்தான் கண்ணன், தெளிந்தான் அர்ச்சுணன், அது அர்ச்சுணனுக்கு மட்டுமல்ல அல்ல மொத்த உலகிற்கு, அதுவே புனிதமான பகவத் கீதை.
18 நாள் பெரும்போரில் கண்ணனால் குழப்பபட்ட கௌரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர், பெரும் பலசாலிகள், வரம்பெற்றவர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது, அதில் சரியாக இடம்பார்த்து அடிக்க சொன்னார், பாண்டவர்கள் அடித்தார்கள், நியாயம் வென்றது.
கடவுளாக நம்புபவர்களுக்கு அவன் கடவுள், நம்பாதவர்கள் அவன் நிச்சயம் பெரும் ராஜதந்திரி என்பதை மட்டும் மறுக்கவே முடியாது. பெரும் ராஜ தந்திரமும், மேலாண்மை நுட்பத்தினையும் உலகிற்கு கொடுத்தது கிருஷ்ணன்.
மதிநுட்பத்திலும், ராஜ தந்திரத்திலும் உலகில் முத்திரை பதித்தவர்கள் உண்டு, பாரதவரலாற்றை நன்கு கற்ற சாணக்கியனே அதில் முதலிடம்,
கண்ணனின் ராஜதந்திர சாதனைகள் அக்காலத்தில் கிரேக்கம் வரை பரவியிருந்தன. அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகள் அவற்றை எல்லாம் அலெக்ஸாண்டர் போன்ற மாவீரன்களுக்கு போதித்தனர்.
வீரம், தந்திரம், ராஜ தந்திரம், இடம் பார்த்து அடித்தல், உளவு, ரகசியம் காத்தல், அபயம், நம்பிக்கை இதுபோன்ற பல விஷயங்களுக்கு கண்ணனே இந்த உலகிற்கு முன்னோடி.
கண்ணனின் மகாபாரத மாய வித்தைகளை சுருக்கமாக சொன்னால், அதற்கு இன்னொரு பெயர்தான் அரசியலும்,உளவுதுறையும் உலகம் இந்தியாவின் பொக்கிஷம் என கொண்டாடும் “அர்த்த சாஸ்திரம்”.
பழம் காலத்தினை விடுங்கள், தற்போது உலகினை கலக்கிகொண்டிருக்கும் இஸ்ரேலின் புகழ்பெற்ற தளபதி மோஷே தயான், மொசாத்தின் பெரும் அடையாளம் டேவிட் கீம்சி, இந்தியாவின் வலிமையான இந்திரா காந்திக்கு வங்கபோரினை வெற்றியாக முடித்து கொடுத்த “ரா”வின் சில அதிகாரிகள் என ஆயிரம் ராஜ தந்திரிகள் வந்தாலும், என்றும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக வழிகாட்டுதலாக இருப்பது கண்ணணே.
கண்ணனின் வாழ்வும், மாய வேலைகளும் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றுதான் “தீயவர்களின் கூடாரம் மிக பலமானதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த பலத்தில் ஒரு சிறிய பலவீனம் இருக்கும், தர்மத்தினை நிலை நாட்டுவதற்காக அது இறைவனால் அனுமதிக்கபட்டது, அந்த பலவீனத்தினை அறிந்து நிதானமாய் இறைவன் துணையோடு போரிடுபவனுக்கு என்றுமே தோல்வி இல்லை, அதர்மம் நிச்சயம் வீழும்”
பாரத்தினை விடுங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு சோதனை காலங்கள் இருக்கும், சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கம்சனையோ,காளிங்கனையோ அல்லது துரியோதனன் போல அறவே நியாயம் இல்லாத 200% கொடுமையாளரின் சித்திரவதைகள நீங்கள் அனுபவத்திருக்கலாம்,
அப்பொழுது தர்மத்தினை காக்கும் பொருட்டு , உங்களை பாதுகாத்து கைதூக்க நிச்சயம் ஒருவர் வந்திருப்பார் அல்லது வருவார்.
அப்படி உதவ வருபவர்களின் உருவத்தில் எல்லாம் எக்காலமும் பகவான் கிருஷ்ணன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..