கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள்…
தமிழகம் மிக அமைதியான மாநிலம் அதன் மீது திணிக்கபடும் அடக்குமுறைகளை எதிர்கொள்வதை தவிர எப்பொழுதும் அது சட்டம் ஒழுங்கினை மதித்தே வருகின்றது
அப்படிபட்ட தமிழகத்தின் மாபெரும் களங்கமாக ராஜிவ் கொலை நடந்தது , தமிழகம் அமைதி பூங்கா என மிக தைரியமாக பலமுறை வந்த ராஜிவ் அன்றும் அப்படியே வந்தார், வந்தவர் திரும்பவில்லை
தமிழக சட்டம் ஒழுங்கிற்கான முதல் சவால் அன்று விடபட்டது, சாட்சாத் விடுத்தது புலிகள்
அதன்பின் இந்தியா மிக கடுமையாக இறங்கி அவர்களை விரட்டி மாநிலத்தில் அமைதி காத்தது, புலிகளை நம்பி பெரும் படுகுழியில் வீழ்ந்தது திமுக, புலிகளின் அனைத்து அட்டகாசத்திற்கும் திமுகவே பொறுப்பு என்ற பழியினை அது சுமந்தது
அந்த பழி கொஞ்சம் மறையும்பொழுது மறுபடியும் ஜெயின் கமிஷன் கிளறியது, புலிகள் திமுக தொடர்பே ராஜிவ் கொலைக்கு காரணம் என அது 1997ல் அறிவிக்க திணறியது திமுக, காங்கிரஸ் கூட்டணி கூட
பின் மொத்தமாக 2009ல் அமைதிகாத்து புலிகளை பழிவாங்கியது திமுக. நிச்சயம் நம்பி கெட்டது
அப்படி திமுக சிறுபான்மை என நம்பி கெட்ட இன்னொரு விஷயம்தான் கோவை குண்டுவெடிப்பு
தமிழகத்தின் மிக மிக அமைதியான, சமூக மரியாதை தெரிந்த பகுதி கோவை. அவரவருக்கு வேலை இருந்தது தாங்களுண்டு தங்கள் வேலையுண்டு என மகா அமைதியான மக்கள் வாழும் பகுதி
சாதிய கலவரமோ மத கலவரமோ அங்கு அதுவரை நடந்ததில்லை முதன் முறையாக ஒரு காவலர் சிலரால் கொல்லபட அது கலவரமானது
நிச்சயம் அது வரலாறு காணா கலவரம். தன் வாழ்வில் எத்தனையோ போராட்டங்களை, களங்களை கண்ட கலைஞர் அந்த வெறிபிடித்த கலவரத்தில் கலங்கி போனார்
ஒரு வழியாக கலவரம் அடங்கிய பின்பு அந்த அகில இந்திய அதிர்ச்சி காத்திருந்தது
அதுவரை தமிழகத்தில் பெரும் குண்டுவெடிப்புகள் ராஜிவ் கொலை தவிர வெடித்ததில்லை, இதே பிப்ரவரி 14ல் வெடித்தது
மும்பையில் தாவுத் கோஷ்டி ஆடிய வெறியாட்ட பாணியில் அக்கொடூரம் நடந்தது, பல இடங்களில் வெடித்துகொண்டே இருந்தது கிட்டதட்ட 50 பேர் பலி, 200 பேர் காயம் ஏராளமான இழப்புகள்
அதிர்ந்து கிடந்தது இல்லை அழிந்து கிடந்தது கோவை. மொத்த இந்தியாவுமே திகைத்தது, வெடிக்காத சில குண்டுகள் காரோடு கைபற்றபட்டது, உயிரை பணயம் வைத்து அதனை பாதுகாப்பாக வெடிக்க செய்தது காவல்துறை
சிறுபான்மை என அதிகமான கவனகுறைவில் இருந்தோமோ என கலைஞர் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். புலிகளை போலவே அவர்களும் முதுகில் குத்திய சோகம் அவரை நிரப்பிற்று.
ஆனாலும் மிக கடுமையான காவல்துறை நடவடிக்கை எடுத்தாரே அன்றி அதற்கு மேல் செல்லாமல் அமைதி காத்தார், மிக உறுதியாக அவர் ஏதும் செயலாற்றவில்லை
நிச்சயம் அது கலைஞர் மீதான பெரும் வருத்தம், சோகத்தில் அமைதி காத்தாலும் சோகங்கள் கழிந்தபின்பு அவர் பாதிக்கபட்டவருக்கு ஆதரவாக செயலாற்றி இருக்க வேண்டும்
ஆனால் அன்று முதுகுளத்தூர் கலவரம், கீழ்வெண்மணி கால கொடுமை போலவே இதனையும் ஒருமாதிரி கடந்து சென்றது அவர் மீதான ஒரு சிறு களங்கமே
இதனினும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அத்வாணி மயிரிழையில் தமிழகத்தில் உயிர்தப்பினார். ஏதும் அசம்பாவிதம் நடந்திருப்பின் ராஜிவ் கொலையினை தொடர்ந்து ஏற்பட்ட அதே சிக்கலை திமுக சந்தித்திருக்கும்
ராஜிவ் கொலை அந்நிய சக்தி, ஆனால் அத்வாணி கொலைமுயற்சி பலித்திருந்தால் நினைத்துபார்க்க முடியா சோகமும் அழிவும் ஏற்பட்டிருக்கும் குறிப்பாக இந்தியா முழுக்க வாழும் தமிழர்களின் நிலை கடும் சிக்கலாகியிருக்கும்.
எந்த தெய்வமோ அதிலெல்லாம் இருந்து தமிழரையும் இந்தியாவினையும் காப்பாற்றிற்று
(இங்கு கலவரம் ஏற்படுத்த முயன்ற முயற்சிகள் கொஞ்சமல்ல, அந்த அளவு சர்வதேச சதிகளும் இருந்தன. இதனைத்தான் கமலஹாசன் மறைமுகமாக சொன்னார், உடனே எல்லோரும் பொங்கி அவரை படுத்திய பாடு கொஞ்சமல்ல..)
ஒரு நாளும் மறக்கா கொடுமை அது, செய்தவர்கள் மிருகங்களை விட மகா மோசமானவர்கள் என்ற பெரும் வெறுப்பும் கோபமும் எந்நாளும் தமிழர் மனமெல்லாம் உண்டு
இன்றும் ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அனுதினமும் நடத்தும் கொடும் குண்டுவெடிப்புகளை பார்க்கும்பொழுதெல்லாம் மனம் ஒருமுறை கோவை குண்டுவெடிப்பு கொடூரத்திற்கு சென்றுவிட்டே திரும்பும்
இன்று அந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள், முதன் முறையாக மதவெறியில் அப்பாவி மக்களின் உயிரும் சொத்தும் தமிழகத்தில் நாசமாக போன தினம்
மதகவலரமும் மதவெறியும் எவ்வளவு ஆபத்தானவை என தமிழகம் கண்ணார உணர்ந்த தினம்
அன்று காரணமே இன்றி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, கூடவே இனி அப்படி ஒருநாளும் இங்கு நடக்க விட மாட்டோம் என ஒவ்வொரு தமிழனும் உறுதி எடுக்க வேண்டிய நாளிது
ஒற்றுமையாக இருக்க உறுதி ஏற்போம்