கௌசல்யா கணவர் சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு

download.jpg

கவுசல்யா என்பவரின் கணவர் சங்கர் என்பவர் கொல்லபட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு. ஒருவருக்கு ஆயுள். ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்

இனி மேல்முறையீடு கருணைமனு என ஏகபட்ட விஷயங்கள் உண்டு, கூடுமானவரை யாரும் தொங்க வாய்ப்பில்லை பல்லாண்டு கழித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அவர்கள் வந்து அடுத்த கலப்பு திருமணத்தை மிரட்டுவார்கள்

இந்த 6 பேரில் கவுசல்யாவின் தந்தையும் ஒருவர் என்பதுதான் பெரும் சோகம்

நீதிபதி தன் தீர்ப்பில் இது திட்டமிட்ட கவுரவ கொலை என சொல்லிவிட்டாராம். அந்த அளவு குற்றம் நிரூபிக்கபட்டாயிற்று

விதி எப்படி எல்லாம் விளையாடுகின்றது

எந்தபெண்ணை பெற்று தூக்கி வளர்த்தாரோ அப்பெண்ணாலே அவர் தூக்குமேடை செல்ல இருக்கின்றார்,

ஆக அவரின் விதி மகள் வழியே பிறந்து சங்கர் வழியே நிறைவேறி இருக்கின்றது, கொடுமையான வல்விதி

ஏன் இப்படி நடந்தது?

தன் மகள் தன்னை மீறி சென்றுவிட்டார் என்ற கோபமும், அவள் வாழ்வு பாழாகிவிட்டது என்றல்ல, மாறாக தன் மரியாதை பாழாயிற்று எனும் வஞ்சமே அன்றி வேறல்ல‌

அந்த மரியாதை குறைவு அவரை பெற்ற மகளை கொல்லசெய்யும் அளவிற்கு சென்றாயிற்று. அதன் முன் தன் மகளின் வாழ்வு அவளின் தாலி, அவளின் மகிழ்வு என எதுவுமே அவர் கண்ணுக்கு தெரியவில்லை

பெற்ற மகளின் வாழ்வினையும் மகிழ்ச்சியினையும் விடவா அவருக்கு சமூகம் முக்கியமாயிற்று?

இந்தியா முழுக்க இதுதான் நிலை, இந்த படுகொலையில் குற்றவாளிகள் அடையாளம் காட்டபட்டனர்,  இன்னும் பல படுகொலைகளில் குற்றவாளிகள் தப்பிகொண்டே இருக்கின்றனர்

பெண் என்பவள் ஒரு வாய்பேசும் சொத்து , அவளின் வாழ்வினை நாங்களே முடிவு செய்வோம் என்ற நிலை இருக்கும் வரை இங்கு எதுவும் மாறபோவதில்லை

இந்த கொலைகளை எல்லாம் பார்க்கும்பொழுது சிறுவயதில் பிணமாய் பார்த்த அந்த நபர் நினைவுக்கு வருகின்றார்

கிராமத்து வாலிபனுக்கே உண்டான உற்சாகத்துடன் வலம் வந்தார் அவர், அவருக்கு காதலும் வந்தது

ஒரே சாதி , ஒரே மதம் என்ற பின்னும் அவர்கள் காதலுக்கு குறுக்கே வந்தது தெரு

ஆம் அந்த தெருவில் இருந்து இங்கு பெண் எடுக்க கொடுக்க மாட்டார்களாம், சில தலைமுறை விரோதமாம்

அவனோ அவளை அழைத்துகொண்டு ஓடும் முடிவில் இருந்தான், பெரிசுகளோ படுபயங்கர திட்டம் தீட்டினர்

சுப்பிரமணியபுரம் படத்தில் வந்த அதே காட்சி அரங்கேறியது, அப்பெண்ணே பிடித்துகொடுத்து வந்துவிட்டாள் என்றார்கள்

எந்த குளத்து வரப்பில் ஆடிபாடி திரிந்தானோ அதே வரப்பில் பிணமாக கிடந்தான் அவன். என் வாழ்வில் பார்த்த முதல் படுகொலை அதுதான்

அதன்பின் வழக்கு அது இது என நடந்தது, சாட்சியில்லை அது இல்லை என சொல்லி எல்லாம் தள்ளுபடியாயிற்று

இன்று அவனும் இல்லை, அவனை கொன்றதாக குற்றம் சாட்டபட்டவர்களும் உயிரோடு இல்லை

ஆனால் வலுகட்டாயமாக இன்னொருவனுக்கு கட்டிவைக்கபட்ட அப்பெண் மிகுந்த வறுமையிலும் கண்ணீரிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்

அன்று அவளுக்காக அவனை கொல்லதுணிந்த யாரும் இன்று அவளுக்கு அருகில் இல்லை, அவளை காத்து நின்றிருக்க வேண்டிய அவனையும் கொன்று, அவர்களும் வழக்கில் சிக்கி நாசமாகி கடைசியில் எல்லோர் நிம்மதியும் போயிற்று

அந்த குளத்துக்கரை தலைமுறை தாண்டியும் அந்த வலியினை அமைதியாக சொல்லிகொண்டே இருக்கின்றது.

இந்த யழவு காதல் என்பது எல்லாம் சும்மா, உண்மையான காதல் என ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.

ஆனால் அவனோடுதான் வாழ்வேன் என அடம்பிடிப்பவளை என்ன செய்ய? சொல்லிபார்க்கலாம் இல்லாவிட்டால் உன் வாழ்வு என விட்டுவிடலாம்

அவர்களாக பட்டு திருந்தாதவரை இம்மாதிரி விஷயங்களை சொல்லி புரியவைக்க முடியாது

யாரின் வாழ்வினையும் யாரும் தீர்மானிக்க முடியாது, அது மகளோ , மகனோ யாரோ. தான் நினைத்தமாதிரி எல்லாம் வாழ வைத்துவிட முடியாது , எல்லாவற்றிற்கும் மேலிருந்து ஒரு ஆசீர்வாதமும் கருணையும் வேண்டும்

அதை மீற நினைத்தால் இப்படித்தான் தீராபழியாய் முடியும்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அவனே வேண்டும் என்று உறுதியாய் நின்ற பெண்ணை கதற, கதற பிரித்து அவளை வாழ வைப்பதாக எண்ணி செய்யபடும் எந்த காரியங்களும் பயன் தராது

அதுவும் பாதக காரியங்களில் பிரிக்கடும் எந்த பெண்ணுக்கும் நல் வாழ்வு அமையாது, பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இது.

கணவன் கொலைக்கு என் தந்தை காரணம் எனும் தீரா வலியுடனும். என் தூக்குக்கு என் மகள் காரணம் எனும் வலியுடனும் இனி இருவரும் கடந்தாக வேண்டும், அதுவும் கவுசல்யாவின் வலி நிச்சயம் பெரிது

கடைசியில் யார் என்ன கிழித்துவிட்டார்கள் என்றால் ஒன்றுமே இல்லை, எல்லோருக்கும் கண்ணீர்

இம்மாதிரி சம்பவங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அன்று சித்தர்கள் சொன்னதுதான் சரி என நினைக்க தோன்றும்

“உறவுகளோடு தாமரை இலைபோல் ஒட்டாமல் இரு ” எனும் தத்துவமே அது

பறக்க சொல்லிகொடுத்தபின் எந்த பறவையும் தன் குஞ்சுகளை அருகில் வைத்துகொண்டே இருப்பதில்லை

நடக்கவும், உண்ணவும் கற்றுகொண்ட பின் விலங்குகள் தங்கள் குட்டிகளை தங்கள் அருகே வைத்துகொள்வதில்லை

அதனதன் வாழ்க்கை அதனதன் வகையிலே என அழகான தத்துவத்தை போதிக்கின்றன அந்த ஐந்து அறிவு ஜீவன்கள்

மனிதன் மட்டும் மரம் தன் கன்று தன் அருகிலே வளரவேண்டும் நினைப்பது போல ஓரரிவிலே சிந்தித்துகொண்டிருக்கின்றான்

குழந்தைகள் நம் மூலம் இந்த உலகிற்கு வந்திருக்கலாம், ஆனால் நமக்காகவே வாழசொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கின்றது என சொன்ன கலீல் ஜிப்ரானின் வரிகள் நிதர்சனம்

இதற்கெல்லாம் ஒரே வழி மனதை எதற்கும் தயாராக வைத்திருப்பது

மகளை பள்ளிவாசலில் இறக்கிவிடும்பொழுது சீன சிறுவனை பார்த்து ஹாய் என சொல்லும்பொழுதே மனதிற்குள் அலாரம் அடிக்கின்றது

என்னதான் பாசம் இருந்தாலும் “தகப்பனுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..” என்ற அபாய மணி அது