சத்தியமூர்த்தி பவன்
கொஞ்ச நாளாக அச்சம்பங்கள் இல்லை, அவர்களின் கலாச்சார திருவிழா இல்லை
எங்கே திருந்திவிட்டார்களோ? அட உண்மையிலே மனம் மாறி தொலைந்துவிட்டார்களோ என்ற அச்சமெல்லாம் வந்தது, அடிக்கடி தேடி பார்த்தும் அந்த செய்தி சிக்கவில்லை
ஆனால் நேற்று வந்த செய்தி அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையினை திரும்பவும் கொடுத்துவிட்டது, நம்பியவர்களை ஏமாற்றா நல்லவர்கள் அவர்கள்
என்ன நடந்தது?
நீண்ட இடைவேளைக்கு பின் காங்கிரசின் சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி சண்டை நடந்திருக்கின்றது, அதே அடிதடி வேட்டி கிழிப்பு, செருப்பு வீச்சு
இம்முறை களம் கண்டிருப்பது திருநாவுக்கரசர் அணி மற்றும் இளங்கோவன் அணி
இதில் இளங்கோவன் அணி களம் பல கண்டது, ஆனால் திருநாவுக்கரசர் அணிக்கு களம் புதிது
என்ன நடந்திருக்கின்றது என்றால், தான் தலைவர் என்பதற்காக கட்சி கூட்டம் நடத்தி இருக்கின்றார் திருநாவுக்கரசு, ஓடுமீன் ஓட உறுமீன் சிக்கிய மகிழ்ச்சியில் எல்லா கோஷ்டியும் வந்திருக்கின்றது
கூட்டம் நடக்கும்பொழுது இன்னும் சிலர் வந்திருக்கின்றனர், இவர்கள் கட்சியில் இல்லாதவர்கள், உறுப்பினர் அல்லாதோர் வெளியே செல்லுங்கள் என சீறி இருக்கின்றார் திருநாவு
“யோவ் ஆளே இல்லாத கட்சியா இது, வந்தவனையும் வெளியே போக சொன்னால் உன் முன்னாள் கட்சியின் தமிழக கூட்டம் போல காலிசேர்தான் இருக்கும்” என எதிர்குரல் வந்திருக்கின்றது
பின்பு என்ன? தமிழக காங்கிரஸ் கலாச்சாரத்தை காட்டிவிட்டார்கள், இதில் முன்னாள் அமைச்சர் பிரபு என்பவருக்கே அடி விழுந்திருக்கின்றது
பின்பு ஒருவழியாக கிழிந்த வேட்டி, ஒற்றை செருப்பு, வழியும் ரத்தம் என காந்திய வழியில், நேரு வழியில் கூட்டம் முடிந்திருகின்றது
ஒரு காலத்தில் கலைஞரையே அடித்து சாக்கடையில் வீசிய கட்சி காங்கிரஸ், அதற்காக அந்த வீர சாகசத்தை கட்சிக்குள்ளுமா தொடர வேண்டும்
இனி அடுத்த கூட்டம் எப்பொழுது நடக்கும்? சத்தியமூர்த்தி பவன் வாசலில் வேட்டிகடை வைக்கலாமா? செருப்பு கடை வைக்கலாமா? இல்லை தற்காலிக மருத்துவனை திறக்கலாமா? என வியாபார மூளை உள்ளவர்கள் சிந்திக்கின்றனர்
எதற்கு இக்கட்சி கூட்டத்தை சத்யமூர்த்திபவனில் வைக்க வேண்டும்?
சேப்பாக்கம் விளையாட்டரங்கில் காங்கிரஸ் கூட்டம் நடைபெறுகின்றது என மட்டும் அறிவிக்கட்டும்
டிக்கெட்டுகள் கன ஜோராக விற்பனை ஆகும், அதை காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு சேர்த்துவிடலாம், நிச்சயம் பல கோடிகள் வசூலாகும்
ராகுல்காந்தி இந்த திட்டத்தை பரிசீலிப்பது நல்லது
(இந்த தாக்குதல் தலைவி குஷ்பு உயிரை குறிவைத்து நடத்தபட்ட பயங்கர சதி என்றும், தலைவி செல்லாததால் சதிகாரர் திட்டம் பலிக்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன
இதுபற்றி சங்கம் தீவிரமாக விசாரித்து கொண்டு இருக்கின்றது)