சந்திரபாபு

கடந்த 70 வருட தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆனால் முத்திரை பதித்தவர்கள் அல்லது வழிகாட்டிகள், பல முயற்சிகளை மாற்றங்களை கொடுத்தவர்கள் மிக குறைவு. தனித்து நின்ற அந்த அடையாளங்களில் அவரும் ஒருவர்.

அதாவது தமிழ்சினிமா நடக்க கற்றுகொண்டிருந்த காலத்திலே அதனை ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் கனவில் இருந்தார் ஒருவர், தமிழ்சினிமா லாரியில் தட்டுதடுமாறி பயணித்தபொழுது அவரோ ராக்கெட்டில் ஏற்றும் முயற்சியில் இருந்தார்.

அவர் ஜே.பி சந்திரபாபு அல்லது ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிக்கஸ் சந்திரபாபு.

தூத்துகுடியில் பிறந்த கலைமுத்து அவர், தூத்துகுடிக்கும் இலங்கைக்கும் தொடர்பு அதிகம், கொழும்பு அவருக்கு மேல்நாட்டு கலைகளை, கொஞ்சம் கலாச்சாரத்தை கற்றுகொடுத்தது

அதாவது அங்குதான் அவர் தமிழ்சினிமாவையும் மேற்கத்திய சினிமாவையும் ஒப்பிட்டுபார்க்க முடிந்தது, அது பாடலோ,நடனமோ, காட்சியோ தமிழ்சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்ற உணார்வு அங்கே அவருக்கு விதைக்கபட்டது.

அவர் நவீன ஐரோபிய மாடலில் சினிமாவில் நுழையும் பொழுது, அங்கு அரசாட்சி செய்துகொண்டிருந்தவர் “காந்தர்வகுரலோன்” தியாகராஜபாகவதர், அதாவது ஆடைகூட வேஷ்டி, அங்கவஸ்திரம்,கிராப் என 500 ஆண்டுகால தமிழக தொடர்ச்சி அவர், எங்கு திரும்பினாலும் பாகவதர்.

பாகவதர்களின் ஆட்சியில் தமிழ் சினிமாவில் ஆடைமாற்றம் கூட சாத்தியமில்லை என்பது சந்திரபாவுவிற்கு விளங்கிற்று.

அதனால் கோர்ட்,சூட், டை, தொப்பி என்ற சந்திரபாபுவின் கனவு கொஞ்சம் ஒத்திவைக்கபட்டு கிடைத்தவேடத்தில் நடிக்க தொடங்கினார்.

பல திறமைகளை கொண்டிருந்த வெகு சில தமிழ்கலைஞர்களில் அவரும் ஒருவர், அவரே பாடுவார், ஆடுவார், பாடல் எழுதுவார், ஆங்கிலபாணியில் அற்புதமாக இசைக்கும் திறமையும் உண்டு, நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகம் உண்டு.

காலம் மாறிய‌ 1950களுக்கு பின்னால் வேகமாக திரையுலகில் ஏறினார். அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமும் பெருகிற்று. சில சர்ச்சைகளும் வந்தன, அதாவது கொஞ்சம் திமிர் பிடித்தவர் பாபு.

அவருக்கு இருந்தது திமிர் என்று சொல்லமுடியாது, வித்தை கர்வம் என்று சொல்லலாம். மிக திறமையானவர்களுக்கு தன் திறமைமேல் இருக்கும் நம்பிக்கை அப்படி,

அதில் டி.ஆர் ஒருவர், அற்புதமான வர்ணனை பாடல்களை கொடுத்ததில் கண்ணதாசனை போல முக்கியமானவர், இசையமைப்பார், வசனம் எழுதுவார், இன்றளவும் அவரின் “ஒரு தலை ராகம்” தமிழ் சினிமாவில் குறிப்பிடும் படம். ஆனால் இன்று “டண்டனக்கா” என சொல்லிவிட்டு நகருகின்றார்கள், யாரும் கேட்டால் அவரும் சீறுவார்,

அதாவது வித்தை கர்வம். ஆனால் எல்லா வித்தையும் தனக்கு அத்துபடி என டி.ஆர் நம்புவதுதான் சோகம்

சந்திரபாபுக்கும் வித்தை கர்வம் இருந்தது ஆனால் திரையுலகில் மட்டும் இருந்தது, அவர் காலத்தில் அவர்தான் அஷ்டவதானி, தமிழகத்தின் முதல் அஷ்டவதானி, ஆனால் அதிர்ஷ்டமில்லாதவர்.

ஒரு நடிகன் என்பவன் எல்லா வேடங்களிலும் நடிக்கவேண்டும். வாள்சண்டை மட்டுமோ? அல்லது ஒரு குறிப்பிட்ட வேடத்திற்கு மட்டும் பொருந்துபவர் நிச்சயம் சிறந்த நடிகன் என சொல்லமுடியாது.

அவ்வகையில் தமிழகம் கண்ட தனிப்பெரும் கலைஞன் எம்.ஆர் ராதா. எல்லா வேடங்களிலும் பிய்த்து உதறுவார், ஆனால் பாடல் மட்டும் வராது.

ஆனால் சந்திரபாபு அருமையாக பாடுவார், பாடலை விடுங்கள், அவரது நடனமே ஒரு வகை ஸ்டைல். இன்றும் தமிழக சிறந்த நடன கலைஞன் பிரபுதேவாவின் நடனத்தை ஓடவிட்டு பக்கத்தில் சந்திரபாபு நடனத்தை பாருங்கள்.

(இவ்வளவிற்கும் மாஸ்டர் சுந்தரம் ஒருமுறை சொன்னார், சந்திரபாபுவிற்கு நடனமே தெரியாது, சும்மா நெளிவார் அவ்வளவுதான், மிஸ்டர் சுந்தரம் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்)

ஒற்றுமை மிக அழகாக தெரியும், காலத்தால் மூத்தவர் பாபு. பாடலும், மெல்லிய நாட்டியமும் தமிழக சினிமா அடையாளம் என அறியபட்ட காலத்தில் காலத்தை மீறிய அந்த அற்புத கலைஞன் வெறும் காமெடியனாகவே அறியபட்டான்.

இதுதான் சந்திரபாபுவின் வலி, அவன் நெஞ்சில் தங்கிவிட்ட வலி. மாபெரும் கலைஞான தன்னை திரையுலகம் நகைச்சுவை கோமாளியாக மட்டும் பார்த்த வலி

உலக திரைப்பட நிலைக்கு தன்னை உயர்த்தி என்னவெல்லாமோ செய்தும், மாய திரையுலகம் செய்த சித்துவிளையாட்டுக்கள் அவருக்கு புரியவில்லை. அது அவரின் தவறல்ல, தமிழக ரசனை தவறு.

இன்னும் தமிழகம் அப்படியேதான் இருக்கின்றது என்பது வேறு விஷயம். உலக அளவில் கொண்டாடபட்டிருக்கவேண்டிய அந்த அற்புத கலைஞன் ஏன் வீழ்ந்தார், அதற்கு ஒரே காரணம் அவரின் கொள்கை, அதற்காகவே வாழ்ந்த ஒரு வாழ்வு. சுருக்கமாக சொன்னால் தென்னக தமிழக குணம்.

தனது சுயமரியாதையை விட்டு கொடுக்காத தாமிரபரணி ஆற்றுகரை மண்ணின் அடையாளம்.

ராமசந்திரன் எனும் அந்நாளைய நடிகன் சந்திரபாபுவிற்கு கொடுத்த தொந்தரவும் கொஞ்சமல்ல, காரணம் ராமசந்திரனை மிக பட்டவர்த்தனமாக கலாய்த்தவர் பாபு

ராமசந்திரன் இமேஜ் விஷயத்தில் கவனமானவர், படபிடிப்பில் தானே அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற ஒருவகையான சாடிஸம் இருந்தது. மிக கலகலப்பாக எல்லோருடனும் பழகி சுற்றிவந்த சந்திரபாபுவினை அவருக்கு பிடிக்கவில்லை

பழகியே அவர் முதுகில் குத்தினார் ராமசந்திரன். சந்திரபாபு ஒரு படத்திற்கு சம்பளம் கொடுக்க , சம்பளத்தை வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் சந்திரபாபுவினை அவர் அலைத்த அலைச்சல் கொஞ்சமல்ல‌

அடிமைபெண் படபிடிப்பின் பொழுது சந்திரபாபுவின் ஆங்கிலதில் ஜெயலலிதா மயங்க, அன்று கொடுக்க ஆரம்பித்த தொந்தரவு என்பார்கள். ராமசந்திரனின் தாழ்வு மனப்பான்மை அப்படி இருந்திருக்கின்றது

சந்திரபாபுவின் குணம் உள்வதை சொல்வது, இதனால் நெஞ்சில் பட்டதை நேர்பட பேசிய பேச்சுக்கள், தன் திறமையில் இருந்த அதீத நம்பிக்கை, முற்போக்கான சிந்தனை. அதனால் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் அவரை சுற்றியே இருந்தது.

தமிழில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு “There is only one Chandra Babu, Next is Sivaji Ganesan” என்று கர்வமமாக சொல்லிவிட்டு, “ஜெமினி ஆதிகாலத்திலிருந்து ஒரே முகபாவனை அதனை மாற்றவேண்டும்” என சொல்லியவிதமாகட்டும் ,

அந்நாளைய செல்வாக்கான நடிகர் பற்றி “மிஸ்டர் எம்.ஜி.ஆரா? அவர் ஆஸ்பத்திரி கட்டுகின்றாராம், அங்கு கம்பவுண்டராக செல்லட்டும்” என சொன்ன தைரியமாகட்டும், அவர் தனித்து நின்றார்.

இப்படி பட்டவர்கள், ஜால்ரா அடித்து வாழ தெரியாதவர்கள் எப்படி சினிமாவில் நிலைக்கமுடியும்?

அற்புதமான கலைஞன் , தட்டுங்கள் திறக்கபடும் என்ற அவர் படத்தின் படத்தின் தோல்வி அவரை குப்புறதள்ளியது, உதவி கேட்டு அவர் தட்டிய கதவுகளும் திறக்கபடவே இல்லை, இதோடு அவரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக எல்லா கதவுகளும் மூடபட்டன.

கைகொடுத்து தூக்கிவிட எல்லோருக்கும் ஒரு தயக்கம், ராமசந்திரன் மேல் பயம் இருந்தது. எப்படிபட்ட பயம் என்றால் சின்னப்ப தேவரே தன் சொந்த சாதியான சிவாஜிகணேசனை வைத்து படமெடுக்க முடியாத அளவு ராமசந்திரனின் செங்கோல் ஆட்சி இருந்தது

கலைதாகத்தால் சந்திரபாபு துடித்துசாவதை கூட கண்டுகொள்ள யாருமில்லை, அந்த தாகம் அவரை குடியில் தள்ளிற்று.

பலமுறை தற்கொலைக்கும் முயன்றார், அந்த வழக்கு நீதிமன்ற விசாரிப்பில் தீக்குச்சியால் கையை சுட்டுகொண்டு நீதிபதியிடம் சொன்னார்.

“நான் இப்பொழுது சுட்டுகொண்டது மட்டும் உங்களுக்கு தெரியும், ஆனால் நான் இந்த தீயினால் பட்ட வேதனையை என்னால் மட்டும்தான் உணரமுடியும், எந்த சட்டத்தாலும் உள்ளத்தின் வலியை உணரமுடியாது மைலார்ட்”

இதுதான் சந்திரபாபு, அவரின் வலி அவருக்கு மட்டுமே தெரியும்.

அவர் பாடி ஆடிய ராக் அன்ட் ரோல் ( Engilsh dance one another….), குங்குமபூவே பாடலை இன்று பார்த்தாலும் டி.வி சேனலை மாற்ற தோன்றாது.

ஜனாதிபதியிடம் விருது வாங்கிவிட்டு, “இந்த பாடலுக்கு விருது கொடுத்த கண்ணா நீ உண்மையிலே ரசிகன்டா..” என்று அவரை செல்லமாக கன்னத்தில் கொஞ்சிய சந்திரபாபுவின் குறும்புதனம் யாருக்குவரும்?

பெரும் நடிகனாய் , எல்லா வித்தையிலும் கலைஞனாய் முடிசூடும் நிலைக்கு வேகமாய் வளர்ந்த நடிகன், ரத்தகண்ணீர் படத்தில் ஒரு காட்சியில் சர்ரென்று கீழே விழுவார் (டூப் இல்லாமல் அவரே விழுந்தது) அல்லவா?, அப்படியே வேகமாய் வீழ்ந்து மரணித்தபொழுது,

அந்த மகா கலைஞனுக்கு வயது 46.

இவரை விட மகளிரை மதித்த மகா நடிகனை எங்காவது பார்க்கமுடியுமா?, கணவான ஜெமினி கணேசனே கைவிட்ட பின்னரும் இறுதிகாலத்தில் சாவித்திரியை சந்தித்து ஆறுதல் சொன்ன ஒரே நடிகனான அவரை சிலர் கொச்சைபடுத்தியபொழுது அவர் சொன்னது

“ஒரு பெண்ணுக்கு தேவை பெரும் பணமோ, புகழோ அல்ல. ஆறுதலாக நாலு வார்த்தை, அதை நான் சாவித்திரிக்கு சொல்வது தவறென்றால் அது தவறாகவே இருக்கட்டும்”

அவருக்கும் திருமணம் ஆகியிருந்தது, அன்றுதான் அவருக்கு தெரிந்தது அந்த பெண்ணிற்கும் ஒரு காதல் இருந்த விஷயம். மறுநாளே அந்த பெண்ணை காதலனுடன் இணைத்துவிட்டார்.

(அந்த கதை பின்னாளில் படமாக கூட வந்து 100 நாள் ஓடியது)

பெண்ணின் உணர்வுகளை மதித்த ஒரு ஒப்பற்ற தமிழ்கலைஞன் சந்திரபாபு.

சந்திரபாபு மறக்க முடியாத கலைஞன்

தமிழக சினிமா உலகிற்கு மேற்கத்திய பாணியினை புகுத்திய முதல் கலைஞன்

சென்னை தமிழையும், லண்டன் ஆங்கிலத்தையும் அச்சுபிசறாமல் பேசும் அற்புதமான ஆற்றல் அவனுக்கிருந்தது

இன்று வரை வரும் துள்ளிசை பாடல்களுக்கும், மேற்கத்திய ஆடல்களுக்கும் அவனே முன்னோடி

இந்நாளைய பிரபுதேவாக்கள், லாரன்ஸ் இன்னும் பலர் எல்லாம் அவனையே பின்பற்றுபவர்களே, நடனத்தில் அது நன்றாக தெரியும்.

ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, இயக்கம் , உடை என பல பரிமாணங்களுக்கு புதிய பரிணாமம் கொடுத்தவன், அன்றே தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த எண்ணிய கலைஞன்.

காலத்தை மீறி கனவு கண்ட அந்த மகா கலைஞனின் நினைவு நாள் இன்று.

“பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான் , ஒருநாளேனும் கவலை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே” என்ற பாடலை உருக்கமாக பாடியவர் சந்திரபாபு

ஆம் அவர் வாழ்ந்த 46 வருடமும் அவர் சிரித்ததே இல்லை, எத்தனை பேரையோ சிரிக்க வைத்த அவர் வாழ்வு சோகமாகவே முடிந்தது