சபரி மலை பெண் அடிமைதன அடையாளமல்ல
சபரிமலை இந்து மத நண்பர்களின் மத அடிப்படை நம்பிக்கை. அதில் அவர்களின் ஆதார நம்பிக்கைகளை நொறுக்கும் வண்ணமோ, மனம் புண்படும்படியோ கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் சமய ஆன்றோர்கள் முடிவுபடி செயல்படலாம், காலமாற்றம் எனின் அது நடைபெறலாம்.
அய்யப்பன் மலைமீது இருக்கும் சுவாமி, தன் பக்தர்கள் தன்னை காண எவ்வளவு இடர்களை தாண்டி வருவார்கள் என சோதித்து அறிய காத்திருப்பவர், எதனை எல்லாம் தியாகம் செய்கிறார்கள் என பார்த்து அருள் வழங்குவதில் அவருக்கொரு ஆனந்தம்
அதனால் அங்கு செல்ல கடும் விரதங்கள் உண்டு, விரத காலங்களில் உறக்கம், உணவு, உறவு என சகலத்தையும் தியாகம் செய்ய வேண்டும், உச்சமாக ஒரு மனிதனால் விடவே முடியா பெண் நினைவு,
அது மனிதனின் சுபாவங்களில் ஒன்று. ஏதோ ஒரு பெண் மாய சக்தியாக அவன் மனதினை ஆண்டுகொண்டே இருப்பாள் (நம் மனதில் குஷ்பூ போல), மனித மனம் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றது
அந்த நினைவுகளையும் தூக்கி போட்டுவிட்டு பகவான் அய்யபனுக்காக விரதம் இருந்து அங்கு வந்து நிற்கவேண்டும் என்பது அவர்கள் மதத்தின் விதி,
இதில் அங்கும் 4 பக்தைகள் மல்லிகை சரம் சூடி வந்து சபரிமலை வாசலில் நின்றால் பக்தன் மனம் என்னாகும்? 100 பேரில் 99 நல்ல பக்தர்களை விடுங்கள், ஒரு பக்தர் பல்லிளித்துவிட்டால்
அந்த விரதங்களும் கட்டுபாடுகளும் அர்த்தமின்றி போகும் என்பது இந்து மதம் சபரிமலை ஸ்தலத்தினை பற்றி சொல்லும் மத நம்பிக்கையும் தத்துவமும்.
சுவாமியியாக நான் இங்கு வீற்றிருக்கின்றேன், எல்லா சுகத்தையும் துறந்து, நினைவுகளிலும் என்னை மட்டுமே சுமந்து என்னை வந்து காண்பாயாக என அவர்களின் தெய்வம் ஆண்களை அழைக்கின்றது, அவர்கள் செல்கின்றார்கள்
அம்மனாகிய நான் ஆற்றுகாலில் இருக்கின்றேன் பெண்களே விரதமிருந்து வந்து எனக்கு பொங்கல் வையுங்கள் என அந்த பெண்களை அழைக்கின்றது.
அய்யப்பன் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லை, ஆற்றுக்கால் அம்மன் ஏன் ஆண்களை அனுமதிப்பதில்லை என்று கேட்டு குழப்ப கூடாது
சபரி மலை பெண் அடிமைதன அடையாளமுமல்ல, பகவதி ஆலயம் பெண் உரிமை தலமும் அல்ல
ஆலயத்தின் தன்மைகள் அப்படி. அன்றே பெண்களுக்கு மட்டுமான ஆலயத்தை அமைத்து இந்துமதம் உலகில் முன் அடையாளமாக உயர்ந்தே இருந்திருக்கின்றது, மகா உண்மை.
ஏன்? என கேட்க முடியுமா? அது அப்படித்தான். சூரியன் ஏன் உதிக்கின்றது, நிலா ஏன் இருக்கின்றது? இந்த மலை ஏன் இவ்வளவு நீளம் இருக்கின்றது, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் என்ன நடக்கின்றது? என ஏராள விஷயங்கள் நமக்கு புரியாது
அப்படித்தான் மத நம்பிக்கைகளும், ஆனால் நிச்சயம் அர்த்தம் இருக்கும்
இது அவர்கள் பிரச்சினை, பெண்ணுரிமை என்பதனை அய்யப்பன் கோயிலில் நுழைந்துதான் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. மத நம்பிக்கை வேறு, சமூக சமத்துவம் வேறு.
இஸ்லாமிற்கு இது விலக்கானது என சில உண்டு, யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் விலக்கானது என சில விஷயங்கள் உண்டு அப்படி சபரிமலை அய்யப்பனுக்கும் சில விஷயங்கள் விலக்கம் உண்டு என்றால் அதனை ஏற்றுகொள்ளவேண்டுமே தவிர தர்க்கம் செய்வது நிச்சயம் நியாமில்லை.
சைவ உணவு மட்டும் வழங்கபடும் ஆலயங்களில் விடா பிடியாக கிடா வெட்டுவோம் , கோழி அறுப்போம் என கிளம்பமுடியுமா?
அந்த தனித்துவமே அதில் பிராதனம்.
எல்லா மதத்திலும் அதன் பிரிவுகளிலும் பல சம்பிரதாயங்களும் கட்டுபாடுகளும் உண்டு, அந்த கட்டுபாட்டில்தான் அம்மதங்கள் கால காலமாக வருகின்றன, இல்லையேல் என்றோ காணாமல் போயிருக்கும்.
சில ஆலயங்களின் அல்லது மார்க்கத்தின் தனித்துவம் அதில்தான் இருக்கின்றது, இல்லாவிட்டால் அவைகளுக்கும் மற்றவைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என சொன்னவுடன் பெண்ணுரிமை வாழ்க என கத்துபவர்கள், இஸ்லாமிய பர்தா பற்றி, சில பெண்ணுரிமை கட்டுபாடு பற்றி பேசுவார்களா என்றால் ம்ஹூம்…
தலாக் எங்களின் தனிபட்ட உரிமை என நமக்கு புரியாத அரேபிய மொழியிலும், உருதிலும் குதித்தவர்கள் எல்லாம் இப்பொழுது சபரிமலையில் பெண்கள் நுழையலாம் எனும் செய்தி மகிழ்ச்சி என்பதுதான் உச்சகட்ட முரண்..
கிறிஸ்தவர் நிலை மகா மோசம், இன்னும் பெண்கள் திருப்பலி நிறைவேற்றவோ அல்லது வழிபாடுகளை தலமையேற்று அனுமதிக்காத மதம் அது. கத்தோலிக்கம் மட்டும் அல்ல மாறாக எல்லா சபைகளின் நிலையும் அதுவே.
இது இனி என்னாகும்?
கேரளாவில் ஆண்களுக்கான சபரிமலை போலவே, பெண்களுக்கான சில ஆலயங்கள் உண்டு. அங்கு பெண்கள் மட்டுமே சென்று வழிபட பொங்கல் வைக்க முடியும் என கட்டுப்பாடும் உண்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மன் போன்றவை அதில் பிரசித்தி
இனி அங்கே எங்களை விடுங்கள் என ஆண்கள் கூட்டம் அலைமோதலாம்,
கவுரி விரதம், வரலட்ட்சுமி நோன்பு போன்ற பெண்களுக்கான வழிபாட்டில் நாங்களும் பங்கெடுப்போம் என பலர் கிளம்பலாம்
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை
யாருக்கும் பிரச்சினை இல்லாத, மிக அமைதியாக இயங்கிகொண்டிருக்கும் மத நம்பிக்கைகளை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது
இந்த கட்டுபாட்டில்தான் சபரிமலை தனித்து நிற்கின்றது அதனையும் தகர்த்துவிட்டால் அது சபரிமலையாக எப்படி நீடிக்கும்?
எம்மை பொறுத்தவரை அது ஆண்டாண்டு காலமாக உள்ளபடி, அப்படியே இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாக உள்ள நம்பிக்கையினை ஏன் அசைக்க வேண்டும்?
இந்துமத பெண்கள், அதனை மனமார நேசிக்கும் பெண்கள் எந்த அரசு சட்டம் போட்டாலும் சபரிமலைக்கு செல்வார்கள் என்றா கருதுகின்றீர்கள்??
செல்வார்களா பாருங்கள்?
அப்படி ஒரு பெண் செல்வதாக இருந்தால் அது நடிகை ஜெயமாலா போன்றவர்களாக இருப்பார்களே தவிர, தூய இந்துபெண்ணாக இருக்கவே மாட்டாள்.