சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம்
சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒரு நகரம் நீர் ஆதாரங்களுக்கு பெரும் வாய்ப்பு இருந்தும், முன்பே நிபுணர்கள் எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டி இந்த பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆம் ஒரு மாநகர் தண்ணீர் இல்லாமல் சிக்கி இயங்காமல் நிற்பது சர்வதேச அவமானம், அதாவது வறட்சி அல்லது நீர் ஆதாரங்கள் இல்லை என்பது வேறு விஷயம்
ஒரே ஒருவருடம் மழை பொய்த்தது என்பதற்காக தெலுங்கு கங்கை , வீராணம் என பல வாய்ப்புகள் இருந்தும் ஒரு மாநகரம் ஸ்தம்பிஸ்து நிற்பது என்பது ஆட்சியாளர்களின் அலட்சியம் அன்றி வேறல்ல
சென்னையினை சுற்றியுள்ள ஏரிகள் ஒரு காலத்தில் சோழனால் உருவாக்கபட்டவை பின்னாளில் நாயக்கரால் பராமரிக்கபட்டன
வெள்ளையனும் நன்றாக பராமரித்திருந்தான் அவன் காலத்தில் நீர்வழி போக்குவரத்தே இருந்தது
கடைசி பிரமாண்டமான சென்னை நீர்தேக்கம் சத்தியமூர்த்தியால் பூண்டியில் அமைக்கபட்டது
சென்னையில் திராவிட கட்சிகள் முதலி உள்ளாட்சிக்கு வந்தது, அதன் பின் காட்சிகள் மாறின
1970களில் இருந்து சென்னையின் ஆட்சிமுகம் மாறியது அதே நேரம் சென்னையின் மக்கள் தொகை எகிற தொடங்கியது
ஒலிம்பிக் வேகத்தில் அதற்கான மாற்றங்களையும் தொலைநோக்கு திட்டங்களையும் செய்ய வேண்டிய அரசுகள் அவ்வளவுக்கு ஒன்றும் செய்யவில்லை
இதில் கலைஞர் ஓரளவு பரவாயில்லை போக்குவரத்துக்காவது ஏதாவது செய்தார், சில வசதிகளுக்கு முயற்சித்தார்
இந்த எதிர்கோஷ்டி ஒன்று இருக்கின்றதே அது மகா மோசம்
ஆக 1970களில் இருந்து தொடங்கிய சிக்கல் இப்பொழுது பெரும் பூதாகரமாக வெடித்து நிற்கின்றது, இதுவரை ஆண்ட அல்லது ஆண்டுகொண்டிருக்கும் அரசுகளின் திறமை தோல் உரிந்து தொங்குகின்றது.
இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அதிமுக அரசு, ஆம் 8ம் வருடமாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் இவர்களே இந்த அவமானத்துக்கு காரணம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தாது, பெரும் தண்ணீர் சிக்கல் வரும் என தெரிந்தும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய்யாமல் உட்கட்சி பூசல், தேர்தல் என ஆட்சியினை தக்க வைக்கவே சிந்தித்தது என அவர்களே முழு காரணம்
ஒருவகையில் பழனிச்சாமி அரசு இதற்கு பொறுப்பேற்று பதவி விலகத்தான் வேண்டும், ஆனால் செய்வார்களா?
சென்னையில் நீர் இன்றி உணவகம் மூடலாம், ஐடி நிறுவணங்கள் மூடலாம், மக்கள் காலி செய்கின்றார்களாம் எனும் செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகின்றது
விமான பயணம் திட்டமிட்டவர்கள் கூட யோசிக்கின்றார்கள்
இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம், சென்னையின் பொருளாதாரம் பாதிக்கபடலாம்
சென்னையில் ஏற்படும் தொழில் முடக்கம் தமிழகத்திலே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தலாம்
பெரும் குழப்பம் ஆரம்பிக்கும் நேரமிது
கவனியுங்கள், இது தென்மேற்கு பருவமழை சீசன் நிச்சயம் சென்னைக்கு அதனால் தம்பிடி பிரயோசனமில்லை
சென்னைக்கான மழை ஐப்பசி கார்த்திகை அதாவது அக்டோபர் நவம்பரில்தான் வரும்
ஆக இன்னும் 4 மாதங்கள் கடும் சவால் காத்திருக்கின்றது, எங்கிருந்து நீர் கொணடுவந்து எப்படி காக்க போகின்றார்களோ தெரியாது
இந்த மாபெரும் சிக்கலுக்கு யார் காரணம் என்றால் , அது உங்களுக்கே தெரிந்திருக்கும். நிச்சயம் அரசியல்வாதிகள் முட்டாள் அயோக்கியர்கள், பிழைப்பு ஒன்றுக்காக அரசியலுக்கு வருபவர்கள்
அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க வேண்டும்? இந்த ஆர்.கே நகர் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.
முட்டாள்கள் தேர்ந்தெடுத்த முட்டாள்களின் அரசு எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும்
இந்த சிக்கலில் இருந்து சென்னையினை மீட்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உண்டு, ஒரு வகையால் அந்த அரசே இதற்கான உடனடி தீர்வினை கொடுக்க முடியும்
மற்றபடி திமுக எல்லாம் தண்ணீர் லாரி ஓட்டி சீன் போட்டு அவசர உதவிகள் செய்யலாமே தவிர நிரந்தர தீர்வு கொடுக்க முடியாது, அவர்களிடம் அதிகாரமும் இல்லை
இந்த அதிமுக அரசுக்கு ஒன்றும் செய்ய தெரியாது
இந்தியாவின் மகா முக்கியமான நகரங்களுள் ஒன்று தண்ணீர் இன்றி முடங்கி நிற்கும் வேளையில் மத்திய அரசு களமிறங்கட்டும்
இங்கிருக்கும் கட்சிகளும் அரசியல் ஆதாயம் கருதாமல் அவர்களோடு இணைந்து பணியாற்றி போர்கால அடிப்படையில் சென்னையினை தொடர்ந்து இயங்க வைக்கட்டும்
காசுக்கு வாக்களித்தால் என்னாகும் என்பதை இனியாவது சென்னை மக்கள் உண்ரட்டும், ஆட்சி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சென்னை மக்களும் அரசியல்வாதிகளும் உணரட்டும்
நிச்சயம் சென்னை இதிலிருந்து மீண்டெழும்
ஆனால் மிக விரைவாக எழவேண்டுமே என்ற கவலை மேலோங்குகின்றது
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் ஈசன், கல்லுக்கு மேல் இருக்கும் மனிதனுக்கு நீர்வார்க்கமாட்டானா?
நல்லவை மிக விரைவில் அரசுகள் மூலம் நடக்கட்டும், இதை தேசிய பேரிடராக அறிவித்து காரியங்கள் நடந்தாக வேண்டும்
சென்னை தன் வரலாற்றில் முதன் முறையாக தலைகுனிந்து நிற்கின்றது
அதன் ஏரிகளும் குளங்களும் அரசியல்வாதிகளின் அராஜகத்தால் பிளாட் போட்டு விற்கபட்டபின் வந்த அவல நிலை இது, சென்னைக்குள் மட்டும் என்றால் பரவாயில்லை சுற்றுபுறம் எங்கும் எல்லாவற்றையும் மூடிவிட்டால் என்னாகும்?
நிறைய இழந்தாகிவிட்டது, இப்பொழுது அதற்கான விலையினை திருப்பி கொடுக்கும் நேரம்
வொட்டுக்கு 5 ஆயிரம் என கொடுத்துவிட்டு மல்லாக்க கிடந்தால் நீருக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ஆகும் என காலம் சென்னை மக்களுக்கு செவிட்டில் அடித்து சொல்லியிருக்கின்றது
இதை எல்லாம் பார்க்கும்பொழுது ஒரு ஏக்க பெருமூச்சு வருகின்றது
மொழிவாரி மாநிலங்கள் பிரியும்பொழுது சென்னையினை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல பார்த்தார்கள் தெலுங்கர்கள், நாம் விடவில்லை
ஆனால் இன்று அவர்களிடம் இருந்தால் கூட நன்றாய் இருந்திருக்குமோ என தோன்றுகின்றது
பெங்களூர் ஐதரபாத் விசாகபட்டினம் என அன்று சிறு நகரங்களாக இருந்தவை எல்லாம் இன்று எல்லா வசதிகளுடனும் எதற்கும் தட்டுபாடு இன்றி பரந்து விரிகின்றன
அருமை சென்னையோ இப்படி நாசமாயிற்று என்றால் என்ன காரணம்?
அவர்கள் தேசியத்தில் இருந்தார்கள், இருகின்றார்கள் வாழ்கின்றார்கள்
நாம் திராவிடம், மாநில சுயாட்சி என என்னவெல்லாமொ பேசி நாசமாகிவிட்டோம்
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றால் கொதிப்பார்கள்
உண்மையான திராவிட சிந்தனையிலா வந்தோம் இல்லை அது பூசிய சினிமாவால் இங்கு ஆட்சிக்கு வந்தது திராவிடம்
அந்த வேடம் கலைகின்றது, உண்மை விளங்குகின்றது அவ்வளவுதான் விஷயம்
சென்னை மக்கள் மிக விரைவில் மீண்டெழ பிரார்த்திப்போம், இந்த மாபெரும் அவமானம் மிக விரைவில் துடைக்கபடட்டும்