சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார்
கலைஞர், சோ ராமசாமி வரிசையில் இருந்த மிகபெரும் சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார்
மிக திறமையான வேலைக்காரன் தன் எஜமானின் நாற்காலியில் அமர்வான் என்பது அனுபவ மொழி. பைபிளின் தாவீது முதல் ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஹைதர் அலி, ராபர்ட் கிளைவ் எல்லாம் அதற்கு உதாரணம்
ஜனநாயக காலத்தில் கலைஞர் போலவே மிகசிறந்த உதாரணம் ம.நடராசன். கொக்கு போல் காத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் புலிபாய்ச்சலில் பாய்ந்து தன்னை நிரூபிப்பான் சாமார்த்தியசாலி, நடராசன் அதனைத்தான் செய்தார்.
நிச்சயம் அவர் ஒரு திராவிடவாதி. மொழிப்போரில் எல்லாம் பங்குபெற்றவர். கலைஞருக்கு முதலில் நெருக்கம் அவ்வகையில்தான் அவர் திருமணமே கலைஞர் தலமையில் நடைபெற்றது
ராமசந்திரன் காலத்தில் சாதாரண அரசு ஊழியர், ஆனால் அரசியல், கட்சி அபிமானம் என முழுக்க ஊறிவிட்ட அவர் சமயம் பார்த்து சில அதிகாரிகள் மூலமாக ஜெயலலிதாவிற்கு துணையாக சசிகலாவினை அமர்த்தினார்
அப்பொழுது ராமசந்திரனின் இரும்பு காலங்களில் ஜெயாவிற்கு ராமசந்திரனுக்கும் இனிப்பும் கசப்பும் மாறிவந்த காலங்களில் மிக அழகாக தன் இருப்பை தக்க வைத்து கொண்டவர் நடராசன்.
ஜெயலலிதாவிற்கு கூடிய கூட்டத்தை கண்டு முதன் முதலாக ஜெயா முதல்வராக முடியும் என்ற கணிப்பினை அவர்தான் செய்தார், ஜெயா எனும் யானையின் பலம் அதற்கே தெரியாமல்தான் இருந்தது
ராமசந்திரன் இறந்தபின் ஜெயலலிதாவிற்கு வெல்ல வேண்டும் என்ற கோபம் இருந்ததே தவிர வழி தெரியவில்லை. அவருக்கு வழிகாட்டியது நிச்சயம் ம.நடராசனே
பல நேரங்களில் அரசியலை விட்டு ஓடுவேன் என மனம் கலங்கிய ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை கொடுத்தவர் அவரே
ஆர்.எம் வீரப்பன், பண்ருட்டி ராமசந்திரன் என பெரும் ஜாம்பவான்கள் இருந்த அதிமுக அணி ஒருபுறம்
எப்படியாவது அதிமுகவினை பலவீனபடுத்தி அதன் முதுகில் ஆட்சியில் ஏறவேண்டும் என்ற திட்டத்தோடு ராஜிவ்காந்தியின் காங்கிரஸ் ஒருபுறம்
சினம்கொண்ட சிம்மமாக சுற்றிவந்த கலைஞர் ஒருபுறம் என பல சிக்கல்கள் இருந்த காலத்தில் அரசியல் அனுபவமற்ற ஜெயாவினை காத்தது அவர்தான்
அதிமுக எதிரிகளை ஒழித்து கட்டியது, ஜாணகியினை வீட்டுக்கு அனுப்பியது, ஆர்.எம் வீரப்பனை மூலையில் வைத்தது, ராஜிவ் காந்திக்கும் அன்று களமிறங்கிய சிவாஜி கணேசனுக்கும் பெப்பே காட்டியது என மிக அட்டகாசனமான நகர்வுகளை கொடுத்தார்
கலைஞரின் ஒரே எதிரி ஜெயலலிதா என நிறுத்தி காட்டியதும் நடராசனே
அவர் மீது சர்ச்சைகளும் உண்டு, ராஜிவ் கொல்லபடும் முன்பு அவர் செய்த ரகசிய வெளிநாட்டுபயணம் பற்றி இன்றுவரை விசாரணை இல்லை . ராஜிவினை கொன்றது புலிகள், புலிகளுக்கு உதவியது திமுக என்ற அளவிலே விசாரணை சென்றது
ராஜிவ் கொலையால் ஜெயா ஆட்சிக்கு வந்ததும் நடராஜனின் போக்கு மாறிற்று, தமிழக அரசியலை நடத்துவது நானே என சொல்லிகொண்டார்
டெல்லியிலும் அப்படி வலம்வர, ஜெயாவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது, தன்னை முதல்வராக்கியது நடராஜன் என்பதால் தன்னை வீழ்த்தவும் அவரால் முடியும் என அஞ்சினார், விளைவு பல வழக்குகள் பாய்ந்தன செரீனா வழக்கு உட்பட
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறும்பொழுது என் மனைவி சசிகலா முதல்வராகும்பொழுதே இனி இங்கு கால்வைப்பேன் என சவால்விட்டு வந்தார் நடராசன்
ஆனாலும் சசிகலா ஜெயாவோடே இருந்தார். மிகுந்த தொலைநோக்கான திட்டம் இது. கொஞ்சமும் பிசறில்லா திட்டம்
அதன் பின் நடராசன் ஆட்டம் கட்ட்டுபாடு ஆனது, விளைவு ஊழல் வழக்குகள் ஜெயா மீது பாய்ந்தன, வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் சறுக்கினார் ஜெயலலிதா. டெல்லி அரசியல் அவருக்கு வரவில்லை
திராவிட அரசியல்வாதி என தமிழகத்தில் சொல்லிகொண்ட ஜெயலலிதாவிற்கு சோ போன்றோரின் தேசிய வழிகாட்டல் தலைசுற்றலை ஏற்படுத்திற்று
மறுபடி நடராசன் களத்தில் வந்தார், மறுபடி ஆட்சிக்கும் வந்தார் ஜெயா. நடராஜன் மறைமுகமாக தன் அம்புகளை ஏவிகொண்டே இருந்தார்
சிறை , வழக்கு என சர்ச்சைகுள்ளான ஜெயலலிதாவின் மறுபக்கத்தை 2006ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய அமைப்புகளோடு ரகசியமாக கைகோர்த்து கலைஞர் மீது சாடவைத்தார் நடராசன்
எல்லா தமிழ் உணர்வாளர்களும் கலைஞரை வசைபாடுவதில் அவர் பின்னால் இருந்தார்
2009ல் அது உச்சத்தில் இருந்தது
அதன் பின் ஜெயா முதல்வரானார், ஆயினும் பழைய வழக்குகளில் இருந்து ஜெயா தப்ப முடியவில்லை, டெல்லியோ சசிகலா கும்பலின் பிடியிலிருந்து ஜெயாவினை மீட்டெடுக்க செய்த முயற்சிகளை தொடுத்துகொண்டே இருந்தது, ஆனால் நடராஜனின் பிடியிலிருந்து ஜெயாவால் வெளிவரமுடியவில்லை, அப்படியே மரித்தும் போனார் ஜெயா
இதன் பின்பு தன் 1990களில் போட்ட சவாலை நிறைவேற்றும் கட்டத்திற்கு வந்தார் நடராசன், சசிகலா முதல்வராகும் நேரம் நெருங்கிற்று
ஆனால் ஜெயாவினை தன் கைப்பாவையாக மாற்ற ராஜிவ் போட்ட திட்டமெல்லாம் அவர் மரணத்தால் நொறுங்கிய நிலையில் அசுரத்தனமாக வளர்ந்தார் ஜெயா, அதில் கலங்கிய டெல்லி இம்முறை இன்னொருவர் வளரகூடாது என்பதில் கவனமாக இருந்தது
சசிகலா மீது தண்டனை விதிக்கபட்டது அவர் சிறை சென்றார், முதன் முதலாக நொறுங்கினார் நடராசன்
டெல்லி விடாபிடியாக அடித்து ஆடியது கட்சி சிதறியது, பன்னீர் பழனிச்சாமி எல்லாம் சுய உருவம் காட்டினர்
தன் 35 ஆண்டுகால மாபெரும் ராஜதந்திரமிக்க நகர்வு தன் கண்முன்னே நொறுங்குவதை கண்ட நடராசன் தீரா வியாதியில் விழுந்தார், சிகிச்சைகள் கொஞ்சநாள் மரணத்தை தள்ளிபோட்டதே தவிர பூரண சுகம் கொடுக்கவில்லை
இன்று இறந்தும் விட்டார்
நடராசன் மீது பெரும் சர்ச்சை இருக்கலாம், ஆனால் ஒரு விஷயம் நோக்க வேண்டியது உண்டு.
ஜெயா என்பவர் யானை, தன் பலம் தனக்கே தெரியா யானை. அந்த யானையின் பாகனாக சத்திய சங்கிலி மூலம் கட்டிபோட்டவர் நடராசன்
ஜெயா எனும் பிராமணர் மூலம் தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் வர இருந்த நிலையில் அதனை திராவிட பாணியிலே தொடர வைத்தவர் நடராசன்
டெல்லி ஆதிக்கமோ இன்னபிற அழிச்சாட்டியமோ தமிழகத்தில் ஜெயா இருந்தவரை தலையெடுக்க அவர் விடவில்லை, அவ்வகையில் சுத்தமான திராவிடவாதி நடராசன் ஆனால் சில இடங்களில் அது தேவர்சாதி ஆதிக்கமாக மாறியது கொடுமை
இந்த ஜெயலலிதா, நடராசனை எல்லாம் ஏன் 1989களிலே கலைஞர் ஒழித்துகட்டவில்லை, அவரால் முடியாதா?
நிச்சயம் முடியும்
ஆனால் திராவிட திமுகவின் எதிர்கட்சி இன்னொரு மாநில கட்சியாகவே இருக்கவேண்டும் அதனை ஒழிக்கும் பட்சத்தில் இன்னொரு தேசிய கட்சி தலையெடுக்கும் அது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு கணிப்பு இருந்தது
இருவருக்கும் புரிதலும் இருந்தது. ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தன்னை மீறி சென்றுவிட கூடாது எனும் எச்சரிக்கையும் இருந்தது, வழக்குகள் அப்படி பாய்ச்சபட்டவையே
1987ல் காங்கிரஸ் தன் முழு பாய்ச்சலோடு அதிமுகவினை அமுக்க வந்தபொழுது அதனை விரட்டி அதிமுகவினை காத்து ஜெயாகாலம் வரை அது இயங்க முழுகாரணம் நடராசன்
என்ன நேரமோ தெரியவில்லை அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாம் மொத்தமாக விடைபெறுவது நடக்கின்றது
எல்லா தூண்களும் மொத்தமாக சாய்ந்தால் கட்டம் என்னாகும்? , எல்லா முக்கிய வேர்களும் மொத்தமாக உயிரற்று போனால் மரம் என்னாகும்?
தமிழக நிலை அப்படித்தான் ஆகிவிட்டது.
தீரா சர்ச்சைகள் இருந்தாலும் சில இடங்களில் நடராசனின் அரசியல் ஆட்டம் அட்டகாசனானது, தைரியமும் ஆச்சரியமும் மிக்கது
தான் காத்து நின்ற துரியோதனனின் கவுரவ வீழ்ச்சியினை வீழ்ச்சியினை காணசகிக்காத பீஷ்மர் கண்ணை மூடியது போல ல நடராசனும் கண்களை மூடிவிட்டார்
வெற்றியினை நுனியில் தவறவிட்ட சசிகலாவின் மனம் கண்களை கட்டி கொண்டு கணவனுக்காக வாழ்ந்த காந்தாரி போல துடிக்கலாம்.
மாவீரன் அஸ்வத்தாமன் போல தினகரன் மனம் விம்மி துடித்து பழிவாங்க அலையலாம்
மகாபாரதம் ஒருகாலமும் முடியாது, மானிட இனம் எங்கெல்லாம் அதிகாரத்திற்கு போராடுமோ அங்கெல்லாம் நடந்துகொண்டே இருக்கும்
அதிமுகவின் சகுனியாக, மன்னார்குடி குடும்ப பீஷ்மராக, ஜெயலலிதாவின் கிருஷ்ணனாக பல வடிவங்களில் வலம் வந்து, தமிழக அரசியலை 35 ஆண்டுகாலம் நடத்தி அதே நேரம் டெல்லியின் பெரும் கரங்கள் தாக்காமல் காத்து சென்ற அந்த திராவிட நடராசனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
ஜெயா முதலமைச்சராக நடராஜனே காரணம் : கலெக்டர் சந்திரலேகா
இதன் மூலம் அம்மையார் சொல்ல வருவது தன் முகத்தில் ஆசிட் வீச்சு நடக்கவும் நடராஜனே காரணம்