சாலையில் செல்ல கூட தகுதியற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது

கோவையில் ஒருவர் சாலையில் வைத்திருந்த ராமசந்திரன் நூற்றாண்டு விழா பாதாகையில் மோதி உயிரிழந்திருக்கின்றார்.

போக்குவரத்துக்கென்று ஒரு துறை, அதற்கொரு அமைச்சர், அதன் கீழ் ஏகபட்ட அதிகாரிகள் என்றெல்லாம் உண்டு

சாலையில் எப்படிபட்ட விஷயங்களை செய்தால் என்ன குற்றபிரிவு அதற்கு என்ன தண்டனை என்றெல்லாம் ஏகபட்ட விஷயங்கள் உண்டு

ஒருவன் ஹெல்மெட் போடாமல் போனால் பிடிப்பதும், லைசென்ஸ் மறந்தால் கையினை முறுக்கி சுரண்டுவதும், ஓவர் வேகம் மற்றும் இதர போக்குவரத்து குற்றத்திற்கு பில் எழுதுதல் என தன் கடமையினை மிக சரியாக செய்யும் காவலர்களும் உண்டு

இங்கே என்ன நடந்திருக்கின்றது?

அரசு விழாவிற்கு ரோட்டில் ஏதோ செய்திருக்கின்றார்கள், அதுவும் முதல்வரும் வரும் விழாவிற்கு

அதில் ஒருவன் சிக்கி உயிரிழந்துவிட்டான், பெரும் கொடுமை இது

சட்டபடி போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்லவேண்டும் ஆனால் அவரே அந்த விழாவிற்கு வந்தபின் எப்படி பதில் சொல்வார்?

இந்த பதாகையினை வைத்தபொழுதே காவல்துறை தூக்கி இருக்கவேண்டும், போக்குவரத்து ஒழுங்கு என்பது காவல்துறை பணியே

அதனையும் செய்யவில்லை

நிச்சயம் நடந்தது ஒரு குற்றம், சாலையில் அப்படி ஒரு இடைஞ்சலை வைத்து ஒரு பயணியினை கொன்றது மாபெரும் குற்றம்

ஆனால் யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு பிரமுகர்? ஒரு கட்சிக்காரன்? ஒன்றுமே இல்லை

உலகில் எங்குமே காணமுடியா துயரம் இது, சாலையினை மதிக்க வேண்டிய அதிகாரிகளே அரசு விழாவிற்கு சாலையினை மறித்து கொன்றிருக்கின்றார்கள், அரசும் சத்தமே இல்லை.

இவர்களை விட்டுவிடுவார்கள், ஆனால் எவனாவது ஹெல்மெட் போடாமல் சென்றால், உரிமத்தை மறந்து வைத்துவிட்டு வந்தால் காவல்துறை கடமையினை மிக சரியாக செய்யும், அந்த இடத்தின் அருகே கூட செய்யும்

முன்பே சில இடங்களில் நடுரோட்டில் கூட குழிகள் முதல்வரின் வரவேற்பிற்காக தோண்டபட்டதை ஜெயா டிவி செய்தி கூட காட்டிற்று, அதனை பார்த்தபொழுதே அச்சம் கூடிற்று

இச்சம்பவம் சொல்வது ஒன்றுதான்

தமிழகம் வாழ மட்டுமல்ல, சாலையில் செல்ல கூட தகுதியற்ற மாநிலமாக இருக்கின்றது