சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது
நிச்சயம் சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது
வருமானவரி இலாகாவுடன் ஆயிரம் மோதல் சிக்கல் இருக்கட்டும், ஜெயா போன்றவர்கள் வழக்கையே 18 வருடமாக இழுத்த நாடு இது, அத்வாணிக்கு பாபர்மசூதி இடிப்பில் இன்னும் தண்டனையே அறிவிக்கபடவில்லை
அப்படிபட்ட நாட்டில் இப்படியான தற்கொலைகள் எல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது
வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாற்றில் நிலைத்தவன், தான் நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்தவன் யாருமில்லை
அலெக்ஸாண்டரின் கல்லறையினை உலகம் தேடுகின்றது, ஐரோப்பாவினை வெல்ல கிளம்பிய நெப்போலியன் எலும்பாக திரும்பி வந்தான்
உலகை ஆட்டிவைத்த ஹிட்லருக்கு எலும்பும் மிஞ்சவில்லை
ஒரு வெற்றி பல தோல்விகளுக்கு காரணமாகிவிடும் எனும் தத்துவம் சித்தார்த்தா வாழ்வில் உண்மையாயிற்று
அவர் அடாவடிபார்ட்டி என்கின்றார்கள் பலரை ஒழித்துகட்டித்தான் இந்த இடத்திற்கு வந்துவிட்டார் என்றெல்லாம் பல குரல்கள்
நியாயமாக சம்பாதிப்பவன் எவன் கோடீஸ்வர அந்தஸ்தை எட்ட்முடியும்? எல்லா தொழிலதிபருக்கும் ஒரு கருப்பு பக்கம் உண்டு
வலுத்தவன் வாழும் உலகிது
ஆனால் ஆண்டவனின் கணக்கு அப்படி அல்ல, அது துல்லியமானது
ஆண்டவனின் கணக்கு ஒருபக்கம் இருக்கட்டும், சித்தார்தின் மனநிலை எப்படி இருந்திருக்கின்றது?
பணமும் அந்தஸ்தும் ஒன்றுமே வாழ்க்கை என்றும் அது இல்லா உலகில் வாழகூடாது எனும் ஒருவித மயக்கத்தில் சிக்கியிருக்கின்றார்.
அந்த மயக்கமே அவரை கோடீஸ்வரனாக்கியது, அந்த மயக்கமே தோற்றபின் வாழகூடாது என கொன்றும் விட்டது.
எல்லாவற்றுக்கும் மனமே காரணம்
பணத்தை கோடி கோடியாக கொட்ட தெரிந்தவருக்கு மனதை காக்க தெரியாமல் இருந்தது சோகம்
அதுதான் சோகம்
கையளவு கிடைத்தாலும் கலங்காதே, கடலளவு கிடைத்தாலும் மயங்காதே என்ற தத்துவம் அவருக்கு தெரியவில்லை
வாழ்வில் யாருக்கு கஷ்டமில்லை, எறும்பு அதன் சக்திக்கு சுமந்தால் யானை அதன் அளவுக்கு சுமக்க வேண்டும்
இந்த விதிக்கு யாரும் தப்பமுடியாது, அவனவன் அளவுக்கு ஏற்ப அவனவனுக்கு சுமையும் கடனும் இருந்தே தீரும்.
இவரோ பணம் , அந்தஸ்து , புகழ் என்றொரு வட்டத்தில் சிக்கியிருக்கின்றார்
அது கொஞ்சம் கொஞ்சமாக அவரை இறுக்கி கொன்றே விட்டது
இந்த இடத்தில் இன்னொருவரை நினைத்து பார்க்கலாம் அது தென்னகத்து முன்னாள் அம்பானி

ஆம், வெறும் அரிசி வியாபாரியாக வாழ்வினை தொடங்கினார் அந்த வைகுண்டராஜன், அந்த தாதுமணல் அவரை சக்கரவர்த்தியாக்கியது
25 ஆண்டுகாலம் தென்னகத்தினை ஆட்டி வைத்தவர் அவர், ஜெயா கலைஞர் ஏன் ஆனானபட்ட டாட்டாவே அவரிடம் பணிந்துதான் சென்றது.
எதிரிகள் எல்லாம் ஓடிவிட தொழில், அரசியல், சமுதாயம் என எல்லாவற்றிலும் தனி சிங்கமாக வலம் வந்தார் அண்ணாச்சி
கிட்டதட்ட 57 மணல் குவாரி, கப்பல் எங்கு திரும்பினாலும் ஆதிக்கம் என மாபெரும் உயர்த்துக்கு வந்தார் அண்ணாச்சி
ஆனால் வாழ்வு என்பது சக்கரம் அல்லவா? வாழ ஒரு காலம் உண்டென்றால் வீழவும் ஒரு காலம் உண்டு அல்லவா?
தாதுமணல் உட்பட பல சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள் எல்லாம் சேர்ந்து அவரின் குவாரிகள் மூடபட்டன
பலநூறு கோடி எந்திரங்கள் முடங்கின, கிட்டதட்ட 35 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்த அண்ணாச்சியின் தொழில் நின்றது
ஆனால் அசந்தாரா அண்ணாச்சி “குவாரி நின்னு போச்சின்னா சோறு கிடைக்காம போயிருமோல, அன்னைக்கு அரைவயிறு கஞ்சிதாம்லே” என சொல்லிவிட்டு அவர் போக்கில் இருந்தார்
எவ்வளவு பெரும் உச்சத்தில் இருந்த அண்ணாச்சி இன்று அரசியல், சமுதாயம் என பலவற்றில் இருந்து ஒதுங்கி வாழ்கின்றார்
காரணம் என்ன?
அண்ணாச்சியின் மனம் திருச்செந்தூர் முருகனில் கலந்தது
“ஒரு நேரத்துல ஒண்ணும் இல்ல, நேரம் வரும்பொழுது முருகன் கொடுத்தான், வாழ்வாங்கு வாழ வச்சான், போதும்ல இனி என்னல இருக்கு. முருகனுக்கு நன்றி சொல்லிட்டே போயிரணமும்ல”
பக்குவம் என்பது அதுதான்
அண்ணாச்சி என்ன?
எத்தனைபேரை ஆட்டி வைத்த சசிகலா இன்று மகா அமைதியாக சிறையில் இருக்கின்றார்
பதவி இல்லை, புகழ் இல்லை , பணம் இல்லை என்றால் என வாழ்வின் பல கட்டங்களில் கலங்கிய கலைஞர் கருணாநிதி 93 வயதுவரை இருந்திருப்பாரா?
மனமே காரணம்
வரும் பொழுது பெற்றுகொள்ள வேண்டும், அது விட்டு செல்லும் பொழுது கற்றுகொள்ள வேண்டும்
மிக இளவயது துடிப்பும் , கலங்கிய மனமும், பக்குவமில்லா தன்மையும் சித்தார்த்தை வீழ்த்திவிட்டன
இன்னொன்று காபிடே ஒன்றில் மட்டும் அவர் முதலீடு செய்திருந்ததும் தவறு, பல தொழில்களில் பிரித்து முதலிடு செய்திருந்தால் இந்நிலை வந்திருக்காது
யார் வரிகட்டவில்லை?
சம்பாதிக்கும் எல்லோரும் வரிகட்ட வேண்டும் என்பது சட்டம், அதை மதித்தல் வேண்டும், மாறாக சம்பாதிக்கும் பணமெல்லாம் எனக்கு வரிகட்டமாட்டேன் என கட்டபொம்மன் போல வசனம் பேசினால் எதுவும் சரிவராது
காப்பியினை புரிந்த அளவு உலகினை புரிந்துகொள்ளமுடியாதவர், வெறும் பணம் ஒன்றையே வாழ்வாக எண்ணி மறைந்துவிட்டவர் என்பதை தவிர அவர் மேல் ஒன்றும் சொல்லமுடியாது
“குவாரி நின்னுபோச்சின்னா சோத்துக்கு வழி இல்லாம போயிருமோல, ரொம்ப உழைச்சி எல்லாம் பார்த்தாச்சில, போடுல சிவாஜி கணேசன் படத்த, ரசிச்சி பார்த்து நாளாச்சில” என அந்த சாம்ராஜ்யம் தகறும் நேரமும் சிரித்து கொண்டிருந்த அண்ணாச்சி
“நான் ஒருத்தன் ஜெயிக்கலண்ணா இது திமுக இல்லா சட்டமன்றம் ஆயிருக்கும், நல்லதுதான் நடந்திருக்கு” என அந்த கொடிய நிமிடத்தையும் கடந்த கலைஞர்
47 வயதுவரை தடுமாறி அதன் பின் உச்சம்பெற்று சிவாஜிகணேசனையும் மீறி வரலாறாக மாறிய ராமசந்திரன்
இவர்கள் எல்லாம் ஒவ்வொரு சாமன்யனும் அறிந்திருக்க வேண்டிய வரலாறுகள்
ஆழ கவனித்தால் இவர்களிடம் ஒரு ஒற்றுமை புலப்படும், அது தீய பழக்கம் ஏதுமின்றி உழைத்து கொண்டே இருப்பது. தீய வழக்கமில்லா மனிதனின் உழைப்பு ஒருநாளும் வீணாகாது
எந்த சிக்கலில் இருந்தும் அவனால் மீளமுடியும்.இவர்களை போன்றவர்கள் மீண்டவர்கள்
அவர்கள் வாழ்வு ஆயிரம் தன்னம்பிக்கையினை கொடுக்கும் , வாழ்வை கடைசி நொடிவரை போராடி வாழ தோன்றும்
அந்த நம்பிக்கை அவர்களை மட்டுமல்ல, அவர்களை பார்க்கும் ஆயிரம் பேரை வாழவைக்கும்
