சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு

பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை

அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும்.

களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் தன் வீட்டு பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னால் தலைகுனிந்து வந்து பணிவாக நிற்பதும், அவர்களுக்கு கட்டுபட்டு பின்னால் நடப்பதும் ஒருவித அழகு மற்றும் ஆச்சரியம்

அந்த அழகான காட்சிகளை தமிழகம் கண்குளிர கண்டுகொண்டிருக்கின்றது

எல்லோரையும் சிதறடித்துவிட்டு மைதானத்தில் அடுத்தவன் எவன்? என சில காளைகள் மைதானத்தில் நிற்கும் அழகு முன்னால் எந்த குத்துசண்டை வீரனும், கால்பந்து வீரனும், கிரிக்கெட் வீரனும் வரமுடியாது

அந்த கெத்தும் தைரியமும் ஒருவித ஆக்ரோஷமும் கவனுமாக அக்காளைகள் நிற்கும் கம்பீர அழகு ஆயிரம் அலெக்ஸாண்டருக்கும் சீசருக்கும் சமம்

நிச்சயம் இது பாண்டிய மண்ணின் விளையாட்டு, பிற்காலத்தில் பாண்டியர் இன்றைய இந்தோனேஷிய பகுதிகளை ஆளும் பொழுது , அதாவது சுப மதுரா எனும் சுமத்ரா பகுதிகளை ஆளும்பொழுது அங்கும் இந்த விளையாட்டு பரவிற்று, இன்னும் அப்பக்கம் உண்டு

இந்தோனேஷியா என்ன சிந்துசமவெளி காலத்து பொருட்களில் இருக்கும் காளை அடையாளமே அது தமிழனின் கலாச்சாரம் என உலகுக்கு சொல்கின்றது

நாம் மதுரை பக்கம் நடக்கும் ஜல்லிகட்டினை ரசித்து பார்க்கின்றோம், அந்த காளைகள் களத்தில் தொட்டுபார் என மல்லுகட்டி நிற்பதும், கோட்டை கடந்துவிட்டால் சிறுமியருக்கும் கட்டுபட்டு நடப்பதும் மகா மகா ரசனையான காட்சிகள்

தமிழகம் தவிர வேறெங்கும் அறியபடா காட்சிகள்

இப்பொழுதெல்லாம் சேவல் சண்டைகளும் அதிகம் நடத்தபடுகின்றன, அவைகளும் அதே குணமே. களத்தில் ஆக்ரோஷமாக நிற்கும் சேவல்கள் களத்தை கடந்ததும் கோழிகுஞ்சு போல் கைகளில் அடங்குகின்றது

ஆங்காங்கே ஆட்டு கிடா சண்டையும் நடக்கின்றது என்கின்றார்கள்

யோசித்து பார்த்தால் அன்றில் இருந்தே தமிழனுக்கு யானை , காளை , சேவல், கடா என எல்லா உயிர்களையும் பழக்கும் மொழி தெரிந்திருகின்றது, அவன் வாழ்வு அப்படி இயற்கையோடு இணைந்திருக்கின்றது

முன்பு முத்துகுளிக்கும் பொழுது சுறாக்கள் ஒதுங்கி செல்லும் அளவு சில வகையான மொழிகளை வைத்திருந்தானாம் தமிழன்

எல்லா உயிரையும் சக உயிராக நினைத்து வளர்த்து வாழ்ந்திருக்கின்றான், அவைகளோடு பழகியிருக்கின்றான், பேசியிருக்கின்றான்

அதன் தொடர்ச்சிதான் இந்த விளையாட்டுக்கள், எக்காரணம் கொண்டும் இவற்றை தவறவிடாதீர்கள், குடும்பத்தோடு பாருங்கள் மனம் அதில் லயிக்கும்

ஆம், பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் கலந்துவிட்ட உணர்வுபூர்வமான காட்சிகள் இவை.